Monday, June 28, 2010

போர்க் குற்றச்சாட்டுக்கள்:

ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவும்
இலங்கையின் ஆட்சேபனையும்...
இலங்கைக்கும் ஐ.நா. சபைக்கும் இடையிலான பனிப் போர் இப்போது நேரடி மோதலாக மாற்றமடைந்திருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது கடந்;த ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டதையடுத்து ஐ.நா. மீதான தாக்குதல்களை கொழும்பு தீவிரப்படுத்தியிருக்கின்றது. சர்வதேச மட்டத்திலும் இந்த விவகாரம் ஒரு பிளவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயற்பாடுகளை மேற்கு நாடுகள் நியாயப்படுத்தியிருக்கும் அதேவேளையில், கிழக்கத்தேய நாடுகளும் அணிசாரா நாடுகள் அமைப்பும் கொழும்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன.
ஐ.நா. செயலாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பு போர்க்கொடி தூக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கொழும்பினுடைய கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில்தான் இந்த நிபுணர்குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்திருக்கின்றார். இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருசுமன் தலைமையிலான இந்தக் குழு சட்டத்துறையிலும், மனித உரிமைகள் விவகாரத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கின்றது.  இந்தக் குழுவின் செயற்பாடுகள் எந்தவகையில் இடம்பெறும் என்பதையிட்டு கருத்துக்கள் எதுவும் வெளியிடப்பாத போதிலும், ஏற்கனவே கிடைத்துள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இலங்கை அரசின் கடுமையான ஆட்சேபனைக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு அடுத்ததாக என்ன செய்யப்போகின்றது என்பதும், அதன் செயற்பாடுகளை அனுமதிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கும் இலங்கை அடுத்ததாக எவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொள்ளப் போகின்றது என்பதும்தான் தற்போதைய நிலையில் அவதானிக்கப்படும் விடயங்களாக உள்ளன!
இவ்விடத்தில் இவ்வாறான குழு ஒன்றை அமைப்பதற்கான யோசனை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஏன் ஏற்பட்டது என்பதையிட்டுப் பார்ப்போம். கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். போர்க் குற்றங்கள் தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு நிலையில்தான் அவரது இந்த விஜயம் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் பகுதியை ஹெலிக்காபட்டரிலிருந்து பார்வையிட்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுக்களை நடத்தினார். 
அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதிலளிக்கும் கடமைப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால், இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்பது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆதங்கமாக இருக்கின்றது. அது தொடர்பில் உரிய முறையில் பதிலளிக்கப்படாமலிருப்பதால், இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காக ஐ.நா. கையாண்டுள்ள ஒரு உபாயம்தான் இந்தக் குழுவின் நியமனம்   என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. 
போhக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான   நிபுணர்குழு அமைக்கப்படுவதைத் தடுப்பதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகளை கொழும்பு மேற்கொண்டு வந்தது என்பது இரகசியமான ஒன்றல்ல. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் மோஹான் பீரிஸ் ஆகிய இருவரும் சர்வதேச அரங்கில் இதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை நியூயார்க்கில் நேரில் சந்தித்த அமைச்சர் பீரிஸ், இவ்வாறான குழு ஒன்றை அமைக்கும் முயற்சிகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தார். 
சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் தமக்குப் பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவதாகவும், இலங்கையின் நற்பெயரைப் பாதிப்பதாகவும்  இந்தக் குழுவின் நியமனம் அமைந்துவிடும் என்பதால்தான் இதனைத் தடுப்பதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 
இருந்த போதிலும் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் பீரிஸ் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் நடத்திய பேச்சுக்களின் போதே தமது திட்டத்தைக் கைவிடுவதற்கு ஐ.நா. தயாராகவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. கொழும்பின் இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையப்போகின்றது என்பது அப்போதே வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அதனையடுத்து கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஷேட பிரதிநிதி லின் பஸ்கோவும் இவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்படவிருப்பதை உறுதிப்படுத்தியதுடன், அக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவ்வாறான குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. 
ஆனால், இதனை எதிர்கொள்வதற்கும், ஐ.நா.வின் காய் நகர்த்தல்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் கொழும்பு எந்தளவுக்குத் தயாராக இருந்தது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
ஐ.நா.வின் அறிவிப்பு வெளியான உடனடியாகவே அதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபனையை கொழும்பு வெளிப்படுத்தியது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.  இது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகவும், நாட்டின் இறைமையைப் பாதிப்பதாகவும் உள்ளது என்பதுதான் கொழும்பின் நிலைப்பாடாகும்.  
தமது ஆட்சேபனைப் பதிவு செய்துகொண்ட பின்னர் அதிரடியான அறிவிப்பு ஒன்றும் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்டது.   குறிப்பிட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கு விசா வழங்கப்படாது என கொழும்பு அறிவித்தது. ஐ.நா.வுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டில் தாம் இருப்பதையும், ஐநா.வுக்கே சவால்விடக்கூடிய நிலையில் தாம் இருப்பதாகவும் தமது வீர பிரதாபத்தை  சிங்கள சமூகத்துக்குக் காட்டிக்கொள்வதற்கு இந்த அதிரடி அறிவிப்பு உதவியதே தவிர இது ஒரு இராஜதந்திர நகர்வு அல்ல என்பது 24 மணித்தியாலத்துக்குள்ளேயே அம்பலமாகியது. 
குறிப்பிட்ட நிபுணர் குழு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஒரு குழுவே தவிர, இலங்கை வந்து விசாரணைகளை மேற்கொள்வது அந்தக் குழுவின் பணியல்ல என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட குழுவினர் தொலைபேசி மூலமாகக் கூட, இலங்கையில் யாருடனும் தொடர்பு கொண்டு பேசப்போவதுமில்லை என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசா வழங்கப்படாது என்ற இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பை இது அர்த்தமற்றதாக்கிவிட்டது. 
ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்திருக்கும் நிபுணர்கள் குழு உண்மைகளைக் கண்டறிவதற்கான ஒரு குழுவோ அல்லது, விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒரு பொறிமுறையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும் ஐ.நா.சபை,      சர்வதேச மனித உரிமை விதிமுறைகளும், மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவா என்பதைப் பொறுத்தவரையில் பதிலளிப்பதற்கான இலங்கையின் கடமைப்பாடுகள் தொடர்பாக  ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு  ஆலோசனை வழங்குவதற்கான ஒன்றாகவே செயற்படும் எனவும் தெரிவித்திருந்தது.  
அதாவது இந்தக் குழுவினருக்கு இலங்கைக்கு வருவதற்கான தேவையோ அல்லது இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவையோ இல்லை என்பதுதான் ஐ.நா. சபையின் கருத்தாகும். இந்த நிலையில் இவர்களுக்கு வீசா வழங்கப்படாது என்ற இலங்கை அரசாங்காத்தின் அறிவிப்பு அவசரப்பட்ட ஒன்றாகவும், இராஜதந்திரத் தோல்வியை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகவுமே காணப்படுகின்றது. 
இலங்கையின் மூன்றாவது நகர்வு சர்வதேசத்தை நோக்கியதாகும். இவ்விவகாரத்தில் கிழக்கத்தேய நாடுகளையும், அணிசாரா அமைப்பையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையுடன் அண்மைக்காலத்தில் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அணிசாரா நாடுகள் அமைப்பும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயற்பாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றன. 
சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன என்பதால் அவற்றின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மைதான். இருந்தபோதிலும் அணிசாரா அமைப்பு தற்போதைய காலகட்டத்தில் செயலிழந்த ஒன்றாகவும், தற்போதைய காலத்துக்குப் பொருத்தமற்ற ஒன்றாகவும் இருப்பதால் அது பலவீனமான ஒரு அமைப்பாகவே இப்போதுள்ளது. ஆதனால்,   அதனுடைய நிலைப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கமுடியாது. 
இவ்விடயத்தில் ரஷ்யா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கவனத்துக்குரியவை. நிபுணர் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அல்லது ஐ.நா. பொதுச் சபையில் அது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆராயப்பட்டிருக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்திருக்கின்றது. போர்க் குற்றம் தொடர்பான விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ரஷ்யாவும், சீனாவும்தான் தம்மிடமுள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை ரத்துச் செய்தன. இப்போதும் பாதுகாப்புச் சபையில் இவ்விவகாரம் கொண்டுவரப்பட்டிருந்தால் அதனையும் இவ்விரு நாடுகளும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துச் செய்திருக்கும் என்பது எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்று. 
இதனை பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவராமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா. செயலாளர் நாயகம் மேற்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் இவ்வாறான குழு ஒன்றை நியமிப்பதைப் பொறுத்தவரையில் அதற்கு பொதுச் சபையினதோ அல்லது பாதுகாப்புச் சபையினதோ அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.  ஐ.நா. செயலாளர் நாயகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான குழுவை அமைக்க முடியும் எனவும், இந்தக் குழுவின் மூலமாக எடுக்கப்படும் தீர்மானம்தான் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். 
அணிசாரா நாடுகளும்,  சீனா மற்றும் ரஷ்யா போன்றனவும் ஐ.நா.வின் செயற்பாட்டை விமர்சித்திருக்கின்ற போதிலும்,  அமெரிகா, நோர்வே போன்ற மேற்கு நாடுகள் ஐ.நா.வின் நிலைப்பாட்டுக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. இந்தனை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டிருக்கின்றது.  ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. 
இந்த இடத்தில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே பெருமளவு ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றது. மனித உரிமைகள் பணியகம் உட்பட மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்கள் பலவும் இது தொடர்பில் பெருமளவு ஆதாரங்களை வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை போலியானவை என அரசாங்கம் தெரிவித்தாலும், அவை உண்மையானவை என்பதே அவற்றின் நிலைப்பாடாக இருக்கின்றது. புகைப்படங்கள், வீடியோ நாடாக்கள் மற்றும் செய்மதி மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் என்பன சில ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. இதனைவிட மேலும் ஆதாரங்கள் இருப்பதாக மனித உரிமைகள் காப்பகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்துத்தான் நிபுணர்குழு தன்னுடைய பணிகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம் என சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் செயலாளர் நாயகம் எடுக்கக்கூடிய தீர்மானம்தான் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாப்புச் சபைக்கு விவகாரம் கொண்டுவரப்படும் போது சீனா அல்லது ரஷ்யாவின் ஆதரவுடன் அதனை வீட்டோ செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை இருக்கலாம்.
இந்த நிபுணர் குழு நியமனம் தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்தியாவின் திரிசங்கு நிலைதான். மேற்கு நாடுகள் இதனை ஆதரிக்கின்றன. குpழக்கு நாடுகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்தியா மௌனமாக இருக்கின்றது. ஆனால் ஆணிசாரா நாடுகள் அமைப்பின் மூலமாக இதனை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், நேரடியாக எந்தவொரு நிலைப்பாட்டையும் இந்தியா வெளிப்படுத்தாது என்றே எதிர்பார்க்கலாம்!

Tuesday, June 22, 2010

அரசியல்:


இராஜதந்திரிகளின் வருகையும் இராணுவ வெற்றி விழாவும்
விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த முதலாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களால் கொழும்பு களைகட்டியிருந்த ஒரு பின்னணியில் முக்கிய இராஜதந்திரிகளின் விஜயங்கள் இந்த வாரத்தில் அரசாங்கத்தை சுறுசுறுப்பாக்கியிருந்தது. இந்த விஜயங்களின் மூலமாக போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்ற கேள்வி ஒரு புறம் எழுப்பப்பட, மறுபுறத்தில் சர்வதேசத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியை போர் வெற்றி நிகழ்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான் நாட்டு உயர் இராஜதந்திரிகளுடன் ஐ.நா. சபையின் விஷேட பிரதிநிதி ஒருவரும் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்து முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடுவதிலும் அவர்கள் அக்கறை காட்டியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.  இந்த இராஜதந்திரிகளின் கொழும்பு விஜயங்களின் நோக்கங்கள் எவையாக இருந்துள்ளன, இதன் அடுத்த கட்டத்தில் இடம்பெறப்போவது என்ன, இவர்களைச் சமாளிப்பதற்கு கொழும்பு கையாண்ட உபாயங்கள் என்ன என்பது தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்போம். 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பல்கலாச்சார மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அவையின் யுத்த குற்றவியல் மற்றும் வன்கொடுமைகளுக்கு பொறுப்பான டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் திங்கட்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தார்கள்.  இவர்கள் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய சந்திப்புக்கள் பலவற்றில் பங்குகொண்டனர். இதனைவிட ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்து ஞாயிற்றுக் கிழமை வரையில் தங்கியிருந்து சிங்கள,  தமிழ் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். 
இன்னுமொரு முக்கிய விருந்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிச்செயலாளர் லின் பெஸ்கோ.  இவர் புதன்கிழமை அதிகாலை கொழும்பை வந்தடைந்தார்.  சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்த இவர், அரசியல் தலைவர்களையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துள்ளார். வியாழக்கிழமை கொழும்பில் இவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு ஒரு வார காலப்பகுதியில் அமைக்கப்படும் என அறிவித்தமை கொழும்புக்கு சற்று அதிருப்தியைக்கொடுப்பதாக அமைந்திருந்தது. 
இலங்கை விஜயத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் இவர் கையளிக்கும் அறிக்கையின் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மனித உரிமை விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இவரது வருகையும் கொழும்பில் அவர் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தைகளும் மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றன. 
இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜதந்திரிகள் மறுதினமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர். அவர்களின் சந்திப்பில் போர்க்குற்றங்கள் பற்றியதாக எந்தவொரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறவில்லை. ஆனால் இரு சாராரும் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடினர்.  அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயும் உள்ள இராஜதந்திர உறவு முறைகளை வலுப்படுத்தவேண்டிய விடயம் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனைகளை நடத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாக இலங்கை அரசு மீது அமெரிக்க அரசு மனித உரிமை பிரச்னையை முன்வைத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்திருக்கின்றது.  அதற்கு பதிலாக இலங்கை அரசும் அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி பதில் அறிக்கைகளை வெளியிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா கணிசமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருப்பினும், மனித உரிமைகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுகின்றது என சிங்கள தேசியவாதிகள் குரல் கொடுப்பதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது. 
இருந்தபோதிலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் சமாதான வழிமுறைகளின் மூலமாக, இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணுவதற்கே அமெரிக்க இப்போது விரும்புகின்றது.தன்னுடைய பிராந்திய நலன்களைப் பொறுத்தவரையில் கொழும்புடன் சுமூகமான உறவுகளை வைத்திருப்பது அமெரிக்காவுக்கு அவசியம். ஆனால், இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம்தான் அமெரிக்காவுக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. இலங்கைக்கு அழுத்தத்தக் கொடுத்து அதனைப் பணியவைப்பதற்குப் போர்க் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா, மறுபுறத்தில் அது சாத்தியமாகாத பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் தமது நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்திவருகின்றது. 
இதேவேளையில், ஐ.நா. பிரதிநிதியின் இலங்கை விஜயமும் முக்கியமானதாகும். இலங்கை வந்தவுடன் ஐ.நா.வின் அரசியல்துறை உதவி செயலாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளை அவர் நேரில் அறிந்துகொண்டார். கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேற்றப்படும் மக்களுடைய அவல நிலை தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு விரிவாக விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐ.நா. அடுத்ததாக எவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொள்ளப்போகின்றது என்பதிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. 
மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் ஏதோ ஒரு வகையில் மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில், ஜப்பானோ இலங்கை அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது என ஜப்பானிய தூதுவர் அகாசி கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். மேற்கு நாடுகளால் வரக்கூடிய அழுத்தங்களை சமப்படுத்தக்கூடியளவுக்கு கிழக்கு  நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உள்ளது என்பதைத்தான் அகாசியின் இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்னுடைய தேசியவாத நிலைப்பாட்டையே மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தினார். “நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டுக்கொடுத்து உதவி பெறும் நிலைக்குச் செல்ல நாம் தயாராகவில்லை” எனத் தெரிவித்த ஜனாதிபதி, “உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை பயமுறுத்திய யுகத்துக்கு முற்றுப்பள்ளி வைக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். 
சர்வதேச நிர்ப்பந்தங்கள் எதற்கும் தாம் அடிபணியப் போவதில்லை என்பதுதான் இந்த உரையில் மூலம் மகிந்த தெரிவித்திருக்கும் செய்தியாகும். குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐ.நா. உயர் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து சென்றிருக்கும் நிலையில் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் கருத்துக்கள் சர்வதேசத்துக்கு விஷேடமாக மேற்கு நாடுகளுக்குத் தெளிவான சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதுதான் இப்போது எதிர்பார்க்கப்படுவதாக இருக்கின்றது. 

Friday, June 18, 2010

கட்சி அரசியல்:

ஐ.தே.க.வின் புதிய பாதை!?
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றது. ஐ.தே.க. எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்ற கேள்வியை மட்டுமன்றி, கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தமக்குத் தேவையான பாதையில் கட்சியைக் கொண்டு செல்வதற்கு முற்படுகின் றார்களா என்ற கேள்வியையையும் அவருடைய கருத்துக்கள் எழுப்பியிருக்கின்றது. 
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கருணாநாயக்க, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தேவையற்ற வகையில் தலையீடுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார். சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முற்படுவதன் மூலமாக இலங்கையில் இன ரீதியான பிளவுக்கு இந்தியா வழிவகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 
இந்தியா தமிழர்களுக்கு எப்போதும் துரோகமிழைத்தே வந்திருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழர்களுக்காக ரவி கருணாநாயக்க முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழ் வட்டாரங்கள் இதனைக் குறிப்பிடுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. 
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை ஒன்றின் போதுதான் அவர் இதனைத் தெரிவித்திருப்பதால் அவரது கருத்துக்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், மும்மொழிப் பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. 
ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களா அல்லது கட்சியின் கருத்துக்களா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து பதில் இல்லை. ஐ.தே.க. தலைமை இவ்விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றது. கட்சி உயர் மட்டத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளின் மத்தியில் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாமலிருக்காது!
சிறுபான்மையினக் கட்சிகளுடன் மட்டுமன்றி, அரசாங்கத்துடனும், ஐ.தே.க. தலைமையுடனும் கூட இந்தியா அடிக்கடி பேச்சுக்களை நடத்தியே வருகின்றது. புதுடில்லியில் பேச்சுக்களை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம்தான் இந்தியா சென்றுவந்திருந்தார். அதேபோல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடந்த வாரம்தான் புதுடில்லி சென்றுவந்திருந்தார். இந்த இருவருடைய விஜயங்களின் போதும் இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. 
இந்த நிலையில் இவ்வாறு அதிரடியான தேசியவாதக் கருத்துக்களை ரவி கருணாநாயக்க முன்வைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
இது ஒருவகையில் கட்சியில் உருவாகியிருக்கும் தலைமைத்துப் போட்டியைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் சஜித் பிரேமதாச ஓரளவுக்குச் சிங்களத் தேசியவாதியாகவே கருதப்படுகின்றார். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தேசியவாதப் போக்குத்தான் மகிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால தேர்தல் வெற்றிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுவதால் அவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுக்கக்கூடிய சஜித் பிரேமதாசதான் ரணிலுக்கு மாற்றானவர் என்பதுதான் கட்சியின் ஒரு தரப்பினரது கருத்தாக உள்ளது. மகிந்தவின் தலைமைக்கு ஈடுகொடுக்கக் கூடியவரகவும் அவரே இருப்பார் எனவும் இவர்கள் கூறுகின்றார்கள்.  
சஜித்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னின்று நடத்தும் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க.வில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவர். ரணிலின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு அவர் வரும்புவதற்கு  சில காரணங்கள் உள்ளன. ரணிலின் தலைமை தொடர்ந்தால் மட்டும்தான் தன்னுடைய இருப்பை ஐ.தே.க.வில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்புவது இதற்கு முதல் காரணம். அத்துடன் கட்சியின் உபதலைவராகவும் இருக்கும் அவர், ரணிலுக்குப் பின்னர் கட்சித் தலைமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர். 
சஜித் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்றால் கட்சியில் தனக்கு இடம் இல்லாமல் போய்விடும் என ரவி கருணாநாயக்க கருதுவதற்கும்  காரணம் உள்ளது.
இந்தக் காரணங்களால்தான் தேசியவாதக் கருத்துக்களை முன்வைத்து சஜித் பிரேமதாசவின் தேவையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ரவி கருணாநாயக்க ஈடுபட்டிருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ரணிலின் தலைமைக்கு மாற்றாக சஜீத் கருதப்படுவதற்குக் காரணம் அவரது தேசியவாதக் கருத்துக்களும், சிங்கள மக்களைக் கவரக் கூடிய தன்மையும் என்று கூறப்படுகின்றது. இதனால் சஜித் வகிக்கக்கூடிய பாத்திரத்தை தானே எடுத்துக்கொண்டால், சஜித்துக்குப் பதிலாக தன்னை முன்னுறுத்திக்கொள்ள முடியும் என ரவி கருதுகின்றார் போலும்.
ஜே.வி.பி.யிடம் கடன் வாங்கிய கருத்துக்களையே ரவி கருணாநாயக்க முன்வைத்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. ஜே.வி.பி.தான் இவ்வாறாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வழமையாக முன்வைத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. ஜே.வி.பி. நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவரும் தேசிய வாதக் கருத்துக்களுக்கு இது ஏற்புடையதுதான். ஆனால், ஐ.தே.க.வின் கொள்கைகள் மற்றும் அது கடந்துவந்திருக்கும் பாதையைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துக்கள் பொருத்தமானவையாகத் தெரியவில்லை. 
ரவியின் கருத்துக்கள் கட்சித் தலைவருக்கு நிச்சயமாக சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கும்!
இனவாத, தேசியவாதப் போக்கில் மகிந்த முன்னெடுக்கும் யெற்பாடுகள்தான் அவரது வெற்றிக்குப் பெரிதும் துணையாக இருந்துள்ளன எனத் தெரிவிக்கப்படும் பின்னணியில், ஐ.தே.க.வும் அதே பாதையில் சென்றால் மட்டும்தான் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படும் சில கருத்துக்களின் பின்னணியில்தான் ரவி கருணாநாயக்கவும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிகொள்வதற்கு முற்பட்டிருக்கின்றார் போலத் தெரிகின்றது. 
வழமையாக கோட்டும் சூட்டுமாகவே அனைத்துக் கூட்டங்களுக்கும் சமூகமளிக்கும் ரவி கருணாநாயக்க, அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வேட்டியும், நாஷனலுமாக வந்திருந்தமையையும் காண முடிந்தது.  அதாவது இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் கோட்டும் சூட்டும் பொருத்தமற்றது என்பதை அவர் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதை இது உணர்த்துகின்றது. அதேவேளையில் ரணிலுக்கு அடுத்ததாக தான்தான் என்பதை உணர்த்துவதற்கு அவர் முற்பட்டிருப்பதையும் இது காட்டுகின்றது. 
சிங்கள மக்களைகன் கவர்வதற்கு இவ்வாறான வேஷம் பொருத்தமானது என ரவி கருணாநாயக்க கருதலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அது நீண்டகாலமாகவே சிறுபான்மையினருடைய வாக்கு வங்கிகளையே தமது தேர்தல் வெற்றிகளுக்காக நம்பியிருந்தது.   இந்தக் கொள்கை மாற்றம் மட்டும் ஐ.தே.க.வை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும் எனக் கருத முடியாது. 

Tuesday, June 15, 2010

இன நெருக்கடித் தீர்வு:

கூட்டமைப்புடனான பேச்சின் அடுத்த கட்டம்...!?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போதிலும், இதன் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகின்றது. இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னர் பேச்சுக்களைத் தொடர்வது என இணக்கம் காணப்பட்ட போதிலும், மீண்டும் பேச்சுக்கள் இடம்பெறுமா என்பதும், அவ்வாறு பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அது எந்தளவுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதாக அமையும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்லும் வேளையில் இந்திய அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதன் அடிப்படையிலேயே பேச்சுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய விஜயம் இடம்பெற்றிருக்கவில்லை என்றால் கூட்டமைப்புடனான இந்தச் சந்திப்பும் இடம்பெற்றிருக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் கூட்டிக்காட்டுகின்றன. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் பின்னணியில் இலங்கை மீது அதிகளவு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முயற்சித்துவருவது அண்மைக்காலத்தில் வெளிப்படையாகவே தெரிகின்றது. 
கொழும்பின் மீது அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழகத்திலுள்ள தமது நேச சக்திகளை இந்திய மத்திய அரசு பயன்படுத்த முற்பட்டிருப்பதை கடந்த வாரத்தில் காணமுடிந்தது. வழமையாக மகிந்த ராஜபக்ஷ டில்லி செல்லும் சந்தர்ப்பங்களில் அமைதியாக இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இம்முறை அவ்வாறு இருக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுட்டிக்காட்டிய கருணாநிதி, இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.  
தேவேளையில், தமிழகத்தின் காங்கிரஸ், தி.மு.க. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவை டில்லியில் சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பிலும் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பிரதானமாகப் பேசப்பட்டது. இந்தப் பேச்சுக்கள் தமக்குத் திருப்தியளிப்பதாக அமைந்திருக்க வில்லை என அவர்கள் வெளியிட்ட அறிக்கையும் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க இந்தியா முற்பட்டுள்ளமையைத்தான் பிரதிபலிப்பதாக இருந்தது. 
இடம்பெயர்ந்த மக்களின் நிலை மிக மிக மோசமாக இருந்த காலப்பகுதியில்  கடந்த வருடம் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்ட இந்தக் குழுவினர் முகாம்களின் நிலைமைகள் சிறப்பாக இருக்கின்றது என ராஜபக்ஷவுக்கு நற்சான்று கொடுத்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைத்தான் காங்கிரஸ்- தி.மு.க. குழுவினருடைய தற்போதைய அறிக்கையும் கூட  வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது. 
இதனைவிட ராஜபக்ஷவுடன் புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் கூட கொழும்புக்கு அழுத்தங்கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே உள்ளது. தமிழ் அமைச்சர் ஒருவரும் தன்னுடன் இருக்கின்றார் என்பதைக் காட்டுவதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு மகிந்த விரும்புவதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது. தேவானந்தாவை ஜனாதிபதி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றிருப்பது இதுதான் முதன் முறையல்ல. ஆனால், இந்த முறை மட்டும் இவ்வாறு அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இலங்கை தொடர்பிலான டில்லியின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மற்றொரு பிரதிபலிப்பாகும்.
இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சரியான முறையில் புரிந்துகொண்டமையால்தான் புதுடில்லிக்கு விமானம் ஏறுவதற்கு முதல்நாளே கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவசரமாக அழைத்து ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார் என்பது உண்மை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டேன் எனவும், அவர்கள் (கூட்டமைப்பினர்) என்மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள் எனவும் புதுடில்லிக்கு அவரால் கூறக்கூடியதாக இருந்துள்ளது. 
கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற அழுத்தம் கடந்த மாதம் பூட்டானில் இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போதே ஆரம்பமாகிவிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் ராஜபக்ஷவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_ம் உடனிருந்தார். பூட்ட்hனிலிருந்து கொழும்பு திரும்பிய உடனடியாகவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் பீரிஸ், அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இருவரும் கொழும்பில் சந்தித்து உத்தியோகப் பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார்கள். 
இதனைவிட இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவும் கூட்டமைப்புடன் பேசுமாறு கொழும்பைக் கேட்டிருந்தததாகத் தெரிகின்றது. 
இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  ஜனாதிபதி விடுத்திருந்தார். மறுபுறத்தில் சிங்களத் தேசியவாதக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக சமிபகாலமாக மீண்டும் ஆரம்பித்திருக்கும் பிரச்சாரங்களின் பின்னணியும் இதுதான்.  இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிடுகின்றது என சிங்களத் தேசியவாதக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட குரல் கொடுத்திருக்கின்றது. 
இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக என 2005 ஆம் ஆண்டு ஜனாதிகதியினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்குமாறு 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பை ஜனாதிபதி அப்போது அழைத்திருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதென்பது ஜனாதிபதிக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதை சிங்களத் தேசிவாதிகள் ஏற்கமாட்டார்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியும். அதனைவிட கூட்டமைப்புடன் பேசி எந்தவிதமான இணக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். 
இந்த நிலையில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் தமக்குத் தேவையான சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத் திணிப்பதே அவரது திட்டமாக இருந்தது. 
ஆனால், இப்போது இந்தியாவின் நிர்ப்பந்தம் அவரது அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. போர் முடிவுக்கு வந்துள்ள பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது முக்கியமான ஒன்றுதான். தமிழ்ப் பகுதிகளில் அதிகளவுக்குப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகளுக்கோ அல்லது, இனநெருக்கடிக்கோ நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுவிட முடியாது. 
இருந்தபோதிலும் தற்போதைய பேச்சுக்களை ஜனாதிபதி முழுமையான விருப்பத்துடன் நடத்தியிருக்கின்றார் எனக் கருத முடியாது. இந்தப் பேச்சுக்களின் போது ஜனாதிபதி தெரிவித்த சில கருத்துக்கள் அவர் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் இந்தப் பேச்சுக்களைக் கையாள முற்படுகின்றார் என்பiதைத் தெளிவாகக் காட்டியது. முக்கியமாக மக்கள் தனக்கு வழங்கிய ஆணையைக் கருத்திற்கொண்டு அதற்கு உட்பட்டதாகவே பேச்சுக்கள் அமையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது பேச்சுக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்ற ஒரு நிலையை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. 
இதேவேளையில், இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.  ஒரு எல்லையைத் தாண்டி இந்தியா செல்லும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. இந்தியாவைப் பொறுத்தவரையில் இன நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அதன் தேவையல்ல. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதுதான் இந்தியாவின் பிரச்சினை. அதற்கான ஒரு ஆயுதமாக இன நெருக்கடியைப் பயன்படுத்துவதும், அதனைக் காரணம் காட்டி இலங்கையில் தமது பிரசின்னத்தை அதிகரித்துக்கொள்வதும்தான் இந்தியாவின் நோக்கம். 
அதேவேளையில் தமது அழுத்தங்கள் ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால் இலங்கை ஒரேயடியாக சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இலங்கை மட்டும்தான் முழுமையாக சீனாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒன்றாக இன்றுவரையில் உள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளில் இவ்வாறு காய்நகர்த்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதனால் இன நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

Saturday, June 12, 2010

யாழ்ப்பாணம்: மீள் குடியேற்றம் என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம்-06

'முகாம்களிலிருந்து விடுதலையே தவிர.. மீள்குடியேற்றம் என்று எதுவுமே இல்லை'
மீள்குடியேற்றம் என்ற பெயரில் வவுனியா மெனிக் பாம் முகாமிவிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75,000 பேரினதும் வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது. வுன்னிப் போரின்போது இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாம்களில் அடைக்கப்பட்ட சுமார் 3,00,000 பேரில் சுமார் 2,20,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 75,000 பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சுமார் 80,000 பேர் முகாம்களிலேயே தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். 
மீள்குடியேற்றம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட 75,000 பேருடைய நிலை எவ்வாறாக இருக்கின்றது என்பது எமது யாழ்ப்பாண விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.  யுhழ்ப்பாணத்திலுள்ள அரசம ற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பாகப் பேசி தகவல்களை அறிந்துகொள்ள முயன்றோம்.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் அமைப்பான அரசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராக உள்ள சி.வி.கே.சிவஞானத்தை யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். யாழ்ப்பாணத்தில் செயற்படும் 24 அரச சார்பற்ற அமைப்புக்கள் இந்த இணையத்தில் அங்கத்துவர்களாக உள்ளனர். இதில் உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சிவஞானம் தெரிவிக்கின்றார். 
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்த சிவஞானம், அரசாங்க அதிபரின் திட்டங்களுக்கு அமைவாக அவருடன் இணைந்ததாகவே இந்தச் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார். 
1,75,000 அகதிகள்
யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேட்டபோது, யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்கள், அதாவது உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேர் இருப்பதாகத் தெரிவித்த சிவஞானம், வன்னியிலிருந்து சமீப மாதங்களில் இடம்பெயர்ந்து வந்த சுமார் 75,000 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் சுமார் 1,75,000 பேர் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்களுடைய மீள்குடியேற்றப்பணிகள் எவ்வாறுள்ளது, அதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் இந்த மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதற்கு எந்தளவுக்கு உதவுவதாக இருக்கின்றது என அவரிடம் கேட்ட போது அதற்கு அவர் நீண்ட விளக்கம் ஒன்றைத் தந்தார்:
'மீள்குடியேற்றம் என்று சொல்லிக்கொண்டாலும் கூட, முகாம்களில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்களே தவிர மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறமுடியாது. பெரிய அளவில் இவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு யு.என்.எச்.சீ.ஆர். அமைப்பினால் குடியிருப்புக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பத்தில் ஐயாயிரமும், பின்னர் 20,000 மும் கொடுக்கப்பட்டது. உணவுப் பொருட்களைப் பொறுத்தவரையில் உலக உணவுத் திட்டம் தான் இவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குகின்றது. 
வன்னியிலிருந்து வந்தவர்களை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மீள்குடியேற்றப்பட்டவர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இவர்களில் பலருக்கு இன்னும் இருப்பதற்கான இடவசதி இல்லை. வீட்டு வசதி இல்லை. இதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவை எதுவும் இல்லாமல்தான் அனைவரும் உள்ளனர். இதனைவிட இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான தொழில் வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை. இதற்கான திட்டமங்களும் இல்லை.
இவ்விடயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு, ஒழுங்குபடுத்தல் என்பதைத் தவிர நிதிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. முகவர் அமைப்புக்கள், அர சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து வழங்கும் உதவிகளைத் தவிர, அரசாங்க நிதி எனக் குறிப்பிடக்கூடியளவுக்கு இந்தப் பணியில் எதுவும் இல்லை. இந்த மக்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமாயின் இவர்கள் தொடர்ந்தும் வாழக்கூடியவகையில் வீட்டு வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் கொடுக்கும் 25,000 ரூபாவை வைத்துக்கொண்டு இதனைச் செய்துவிட முடியாது. திட்டமிடப்பட்ட முறையில் இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும். 
முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கான வசதிகள் இருக்கின்ற போதிலும், போக்குவரத்து வசதியீனங்களால் அதனைச் செய்ய முடியாதிருக்கின்றது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பக்கூடியளவுக்காவது பெற்றோhர் பொருளாதார வசதிகளைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தொழிலைச் செய்யக்கூடிய வசதி இல்லை. 
இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தொழிலைச் செய்யக்கூடிய நிலைமையை ஏற்படுத்தினால் மட்டும்தான் மீள்குடியேற்றம் அல்லது மீள்வாழ்க்கை என்ற நிலை உருவாகும். உதாரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களில் சிலர் விவசாயம் செய்பவர்கள். இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான நிலம் வழங்கப்பட்டால்தான் அதனை அவர்கள் செய்து தமது குடும்பங்களின் ஜீவனோபாயத்தை சமாளிக்க முடியும். ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது நிலங்களுக்கு இவர்கள் செல்ல முடியாதுள்ளது. இதேபோலத்தான் இடம்பெயர்ந்து வந்த கடற்றொழிலாளர்களின் நிலையும் உள்ளது' என சி.வி.கே.சிவஞானம் விளக்கமளித்தார். 
நிவாரணத்தையே நம்பியுள்ள மக்கள்
யாழ்ப்பாணத்தில் 1,75,000 இடம்பெயர்ந்த மக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.. இவர்கள் அனைவரும் நிவாரணங்களைத்தான் நம்பியுள்ளார்களா? அல்லது சுயமாக தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளும் நிலையில் உள்ளனரா என சிவஞானத்திடம் கேட்டபோது, இவர்கள் பெரும்பாலும் நிவாரணத்தை நம்பியவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டுமே அவர்கள் தமது வாழ்வாதாரங்களைப் பார்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். தற்போது வழங்கப்படும் நிவாரணம், குறிப்பாக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் நிவாரணம் ஆறு மாத காலத்துக்குத்தான் என வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதற்குப் பின்னர் இந்த மக்களுடைய நிலை என்ன என்ற ஒரு கேள்வி உள்ளது. இந்த மக்கள் சுயமாக ஒரு தொழிலைச் செய்யக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தன்னுடைய செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இடம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் மேற்கொள்ளும் உதவிகள் போதுமானவையல்ல. முகாம்களிலிருந்த மக்களைக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் விட்டதற்கு அப்பால் இந்த மக்களின் நலன்களுக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்pலை எனத் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் என்பது ஒரு நீண்ட வேலைத்திட்டம். இடம்பெயர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த இடங்களில் கொண்டு சென்று குடியேற்றுவதற்கான மீள்கட்டமைப்பு அவசியம். அத்துடன் இது தொடர்பில் மக்;கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.  
இதனையடுத்து அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் (ரி.ஆர்.ஓ) தலைவர் பேராசிரியர் என்.சிவநாதன் சந்தித்து அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைள் தொடர்பாகக் கேட்டோம். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் அமரர்; கந்தசாமியால் ஆரம்பிக்கப்பட்டது. கம்பனிச் சட்டத்தின் கீழ் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. 
தாம் வாழ்வாதாரத் திட்டங்கள் பலவற்றை நடைமுறைபக்படுத்துவதாகத் தெரிவிக்கும் சிவநாதன், இடம்பெயர்ந்தவர்கள் முன்பு என்ன தொழில் பார்த்தார்களோ அந்தத் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கான உதவிகளைச் செய்து கொடுப்பதுதான் தமது நோக்கம் எனவும் தெரிவிக்கின்றார்.  "தாரணமாக மரம் அரியும் தொழில் செய்யும் ஒருவருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் அதற்கான இயநற்திரங்களை வாங்கிக்கொடுத்திருக்கின்றோம்.வியாபாரம் செய்தவர்களுக்கும் அதுபோல வியாபாரம் செய்வதற்கான உதவிகளை வழங்கிவருகின்றோம்" என தமது செயற்பாடுகளை அவர் விபரிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பலற்றில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கும் செயற்பாடுகளை அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் கட்டம் கட்டமாக மேற்கொண்டுவருகின்றது. 
நிவாரணம் போதாது
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிலரையும்  யாழ்ப்பாண விஜயத்தின் போது  சந்தித்தோம். மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கத்தினாலும், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கப்படும் உதவிகள் போதுமானதா என்பதை அறிந்துகொள்வதும், மீண்டும் வழமையான வாழ்க்கைக்குச் செல்வதற்கு இந்த உதவிகள்  எந்தளவுக்கு உதவியக இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்வதும்தான் அவர்களுடனான சந்திப்பின் நோக்கமாக இருந்தது. 
நல்லுர் பகுதியில் தமது உறவினர் ஒருவருடன் வசித்துவரும் நடேசன் ஜெயந்தினி என்பவரை முதலில் சந்தித்தோம். அவர் கூறினார்:
"நாங்கள் வன்னியில் பல காலம் இருந்தநாங்கள். முதலில் கிளிநொச்சியில்தமான் இருந்தநாங்கள். போரினால் கணவர் இறந்துவிட்டார். இப்போது நான் அம்மா, மூன்று பிள்ளைகள்தான் இருக்கின்றம். எமக்கு மீள்குடியேற்றத்துக்காக என அரசாங்கம் 25 ஆயிரம் ரூபா தந்தது. அதனைவிட மீள வாழ்க்கையை ஆரம்பிக்க போதிய உதவிகள் இல்லை. அரசாங்கத்திடமிருந்தோ அரச சார்பற்ற அமைப்புக்களிடம் இருந்தோ உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. 
வன்னியில் தொண்டர் ஆசிரியராக நான் பணிபுரிதுள்ளேன். இங்கு வந்தபின்னர் வேலை இல்லை. எங்களுக்கு சொந்த இடம் யாழ்ப்பாணம்தான். வயல் செய்வதற்காக வன்னி சென்று அங்கேயே வாழ்ந்து வந்தோம். அரசாங்கம் தரக்கூடிய நிவாரணங்களைக் கொண்டு தொழில் செய்ய முடியாது. கணவரும் இல்லை என்பதால் பிள்ளைகளைப் பார்க்க - அவர்களைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. நிவாரணம் கூட இரு தடவைதான் தந்தனவை. பிள்ளைகளை படிப்பிக்க முடியாதுள்ளது. முகாமில் தந்த கொப்பிகளை வைத்துக்கொண்டுதான் இப்ப படிக்குதுகள்" என்று அவர் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினார். 
அரச அதிபர் தகவல்
இதேவேளையில், இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடாநாட்டில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். 
மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள், மற்றும் நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் 404 கிராமசேவையாளர்களின் நிர்வாகத்திலுள்ள 901 கிராமங்களில் இப்பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 
உயர் பாதுகாப்பு வலயத்தில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேரும், யாழ். மாவட்டத்துக்குள் இடம்பெயர்ந்த 848 குடும்பஙங்களைச் 2,720 பேரும், நலன்புரி நிலையங்களிலிருந்த 2,949 குடும்பங்களைச் சேர்ந்த 8,691 பேரும், வெளிமாவட்ட நலன்புரி நிலையங்களிலிருந்து 21,938 பேரும் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நிதி உதவி, வீடுகளுக்கான கூரைத் தகடுகள், உலர் உணவுப் பொருட்கள் என்பன வழங்கப்படுகின்றது. 
மீள்குடியேற்றப்பட்ட 24,697 குடும்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தினால் சமயல் உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. 
இதனைவிட தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கும் 1,601 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், இவர்களில் 502 குடும்பங்கள் மீளக்குடிமர்த்தப்பட்டு அவர்களுக்கான முற்பண வதிவிடத் தொகை 5,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய காணிகளைத் துப்பரவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 
இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படும் அதேவேளையில், பின்னர் 20,000 ரூபா வழங்கப்படுகின்றது. இதனைவிட மேலதிகமாக 25,000 ரூபாவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிக்கொர்ட் நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது."
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் மீள்குடியேற்றப்பணியை ஓரளவுக்காவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருப்பதைப் புலப்படுத்தியுள்ளது.  இருந்த போதிலும் தமது வாழ்கையை இழந்து வந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் கொடுக்கும் தொகை போதுமானதல்ல.  அத்துடன், அவர்கள் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் அரசாங்கத்தின் உதவிகளும் நிவாரணத் திட்டங்களும் அமைந்திருப்பது அவசியம்.  அதேபோல உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையையும் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் அணுகுவது அவசியமானதாகும். 
(இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகின்றது.)

Wednesday, June 9, 2010

ஐபா

பழபழப்பு மினுமினுப்பு இல்லாத நிலையில்
தோல்வியடைந்த இந்திய திரைப்பட விழா
தமிழ்த் திரைப்படத்துறையினருடைய கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கொழும்பில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா பெரும் தோல்வியுடன் முடிவடைந்திருக்கின்றது. பாரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பங்குகொள்ளக் கூடாது என தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் விடுத்தியிருந்த கோரிக்கையையடுத்து முன்னணி நட்சத்திரங்கள் இதனைப் பகிஷ்கரித்தார்கள். 
இந்தப் பின்னணியில் பெரும் பணச் செலவில் இதனை ஒரு சவாலாக எடுத்து முன்னெடுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இறுதியில் உள்ளுர் கலைஞர்களைக் கூட விழாவுக்குக் கொண்டுவர முடியாத நிலையில் இந்த விழா தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. பழபழப்பையும், மினுமினுப்பையும் எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழா தோல்வியில் முடிவடைந்திருப்பது மகிந்த ராஜபக்ஷ அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது. 
சர்வதேச இந்திய திரைப்பட விழா வருடாந்தம் வௌ;வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் நடத்தப்படுகின்றது. இதனை நடத்துவதற்கு அரசுகள் முன்வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஒன்று - இந்த விழாவின் மூலமாக உல்லாசப் பயணிகளைப் பெருமளவுக்குக் கவர்ந்திழுக்க முடியும். இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பெருமளவில் இதற்குப் படையெடுப்பார்கள் என்பதால் உல்லாசப் பயணிகள் இதனால் பெருமளவுக்குக் கவரப்படுவார்கள். 
இரண்டு - குறிப்பிட்ட நாட்டின் நற்பெயர் அல்லது கீர்த்தி இதன் மூலமாகப் பிரபலப்படுத்தப்படும். இந்த இரண்டு காரணங்களினாலும்தான் உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இந்த விழாவை நடத்துவதற்கு முன்வருகின்றன. இந்த முறை கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கும் அதேவேளையில், அடுத்த வருடம் இது கனடாவில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 
இந்தவிழா கொழும்பில் நடைபெறும் எனவும், இதில் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பெருமளவுக்குக் கலந்துகொள்வர்கள் எனவும் அறிவிக்கப்பட்ட போதே தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்கள் உஷாரடைந்தார்கள். குறிப்பாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு மகிந்த அரசாங்கத்தின் நோக்கங்களைப் புரிந்துகெண்டு அதன் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்குத் திட்டமிட்டுச் செயற்பட்டது. 
இந்த விழாவைக் கொழும்பில் நடத்துவதற்கு மகிந்த அரசாங்கம் தீர்மானித்தமமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக போர் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டு நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டது எனக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்துள்ளது. இந்த விழாவைக் கோலாகலமாக நடத்துவதன் மூலமாக பெருமளவு உல்லாசப் பயணிகளைக் கொண்டுவர முடியும் எனவும் இலங்கை அரசாங்கம் கணக்குப் போட்டது. 
அத்துடன் இலங்கை தொடர்பான நற்பெயரை சர்வதேச ரீதியாக இது பெருமளவுக்கு பாதுகாக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டடிருந்தது. சர்வதேச ரீதியாக போர்க் குற்றச்சாட்டுக்கள் உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் அரசாங்கம், இவ்வாறான ஒரு கோலாகலமான விழாவை நடத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்ப முடியும் எனவும் எதிர்பார்த்தது.  
இந்தப் பின்னணியில் இதனை ஒரு பிரமாண்டமான விழாவாக ஏற்பாடு செய்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை இலங்கையின் மீது குவிப்பதுதான் மகிந்த அரசாங்கத்தின் திட்டமாக இருந்துள்ளது. இதன் மூலம் இலங்கை தொடர்பாக இந்தியாவிலும் இலங்கை தொடர்பாகக் காணப்படக்கூடிய அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதுதான் அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது.  
இந்த விழாவுக்கான விளம்பரத் தூதுவராக இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரமும் திரையுலகப் பிதாமகருமான அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இதற்குப் பெரும் கவர்ச்சியை ஏற்படுத்த முடியும் என அரசாங்கம் கருதியது. இதனைவிட அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், மருமகளும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வரியா ராய் போன்றோரும் இதில் பங்குகொள்வதற்கு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தமை மகிந்தவுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. 
இதனைவிட தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமலஹாசன்,  விஜய், சூர்யா, அஜித், விக்கிரம்  உட்பட பல முன்னணி நடிகர்களும், திரைப்பட இயக்குநர்களும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் உருவாகிய தேசிய உணர்வைப் புரிந்துகொண்ட  இவர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே தமக்கான அழைப்பக்களை நிராகரித்ததுடன், இதில் பங்குகொள்ளப்போவதில்லை எனவும் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர்.
இவற்றுக்கு மத்தியிலும் தமது முயற்சியை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டது.  ஆமிதாப்பச்சனை எவ்வாறாவது வரவைக்க வேண்டும் என்பதில் இறுதி நேரம் வரையில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  முக்கிய நடிகைகள், நடிகர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களை வரச்செய்வதற்கான தீவிர முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது.  
இவற்றுக்கு மத்தியில் கொழும்பில் மூன்று தினங்களாக நடைபெற்ற விருது விழா சனிக்கிழமை இடம்பெற்ற இறுதி நிகழ்சிகளுடன் முடிவுக்கு வந்தது.   சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான அமீர்கானின்  3 இடியட்ஸ் திரைப்படமானது பொலிவூட் ஒஸ்கார்ஸ் விருதைத்தட்டிக் கொண்டுள்ளதாயினும் பகிஷ்கரிக்குமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்புகளாலும் திரைப்படத்துறையின் பிரபலங்கள் பலர் பங்கேற்காததாலும் விழாவின் பளபளப்பு சற்று மங்கியதாகவே காணப்பட்டது.
அமீர்கானின் 3 இடியட்ஸ்7 படமானது 3 பொறியியல் துறை மாணவர்கள் பற்றிய நகைச்சுவைப் படமாகும். விருது விழாவில் இப்படமானது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதுடன் வழங்கப்பட்ட 27 விருதுகளில் 16 விருதுகளை இப்படம் பெற்றுக்கொண்டது. ஆனால் நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் வைபவத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. 
அத்துடன் பொலிவூட்டின் பிதாமகரும்  இந்த விழாவின்  விளம்பரத் தூதருமான அமிதாப்பச்சனும் விழாவில் பங்கேற்கவில்லை. ஆயினும் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வைபவத்தின்போது வழக்கப்பட்டது.
அதேசமயம் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் மற்றும் பிரபல இந்தி நடிகர் சாருக்கானும் விழாவில் கலந்துகொள்ளாத முக்கியமான பிரபலங்களாகும். விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்துகொள்வாரென தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் பங்கேற்கவில்லை. ஜானதிபதியின் பாரியாரும் மூத்த புதல்வரும் கலந்துகொண்டனர். 
எதிர்பார்க்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காமையால் மகிந்தவும் வைபவத்தைத் தவிர்த்துக்கொண்டுவிட்டார். விருது வழங்கும்  வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளாமை குறித்து அவரின் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னணி இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாததையடுத்து அவர் பங்கேற்காமல் இருந்திருக்கக்கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இதேவேளையில் பெரும் பணச் செலவில் இடம்பெற்ற இந்த விழா தோல்வியில் முடிவடைந்திருப்பது உள்ளுரில் ஒரு புதிய அரசியல் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.  ஆரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலுக்குக் கிடைத்துள்ள  ஒரு சந்தர்ப்பமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இதனைக் கையில் எடுத்துள்ளன. இந்த விழபவை சறப்பாக நடத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க முயன்ற அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதாக இன்றுள்ளது. 
 விருது வழங்கும் வைபவம் பற்றி கடந்த வாரம் எழுப்பப்பட்ட கோஷங்களுடன் ஒப்பிடும் போது இறுதியில் எந்த பலனும் இன்றியே அந் நிகழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வுக்காக 450 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும்   600 மில்லியன் ரூபாவை விடவும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியிருக்கின்றது. 
இவ்வளவு பெருந்தொகை செலவிடப்பட்டிருந்தாலுமே இந்நிகழ்வின் மூலம் நாட்டுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உள்நாட்டு சினிமாத்துறைக்கு எந்தப் பலனும் இன்றியே இந்த விருது வழங்கும் வைபவம் முடிவடைந்திருக்கிறது.நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விழாவில் கலந்துகொள்ளவில்லை. அது மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்ற முன்னணி இந்திய சினிமா நட்சரத்திரங்களும் இதில் கலந்துகொள்ளவில்லை. 
இறுதியில்  இந்த  விருது வழங்கும் வைபவம் மணமகன், மணமகள் இல்லாத திருமண வீடாக நடைபெற்று முடிந்திருக்கிறது. தோல்வியான  விருது வழங்கும் வைவம் ஒன்றே நடைபெற்று முடிந்திருக்கிறது என ஜே.வி.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றது.   
உண்மையில் எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இறுதி வைபவத்தில் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளாமையும்  உள்ளுர் கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் இதனைப் பகிஷ்கரித்தமையும் இது தோல்வியில் முடிவடைந்திருப்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

Monday, June 7, 2010

யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 05


பாதுகாப்பு வலயம் காரணமாக வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்வர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம். இதில்  குறிப்பிட்ட தொகையானவர்களே முகாம்களில் உள்ளனர். ஏனையவர்கள் குடாநாட்டிலேயே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் உள்ளனர். இதனைவிட பெருந்தொகையானவர்கள் அகதிகளாக தமிழகத்துச் சென்றுவிட்டனர். மேலும் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.  
இவர்கள் அனைவருமே தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான அனுமதி எப்போது கிடைக்கும் என்பதைத்தான் எதிர்பார்த்துள்ளார்கள். 

இந்த நிலையில் வலி வடக்கு மக்களின் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்குகான பிரச்சாரங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில் - அதாவது கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வலி வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் போது பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தார். புலாலி விமானத் தளத்துக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ள முடியும் எனவும் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. 

இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் போது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்த போது அது தொடர்பில் எந்தவிதமான அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. அதாவது வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பாதுகாப்பு வலயம் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்ற கேள்வி எழுபபப்பட்டது.  

அரசாங்கத்தின் நிலைப்பாடு

இது தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாக கண்டியில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக இருந்தது. ஜனாதிபதியின் கருத்து இதுதான்:

"உயர் பாதுகாப்பு வலயங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவையல்ல. நடைமுறை ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் அவற்றை அகற்ற முடியாது. வடபகுதியில் மட்டுமன்றி தென்பகுதியிலும் கட்டுநாயக்காவில் கூட இவ்வாறான பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் கூட இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனத்திற்கொண்டு மே மாதத்துக்கு முன்னதாக உயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ளவிருக்கின்றோம்."

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கபப்போகின்றது என்பதை ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன.  இப்போது மே மாதம் வந்துவிட்ட போதிலும் இது தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளோ திட்டங்களோ எதுவும் செயற்படுத்தப்படவில்லை. ஆக, உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக வழங்கப்படும் வாக்குறுதிகள் கூட, தேர்தல்கால வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன. 
தேர்தலும் மீள்குடியேற்றமும்

இந்த நிலையில் மீள்குடியேற்றத்தின் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியஅ ம்சங்கள் எவை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டோம்.  குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

"மீள்குடியேற்றம் என்பது போருக்குப் பின்னரான காலகட்டத்தில் போரினால் சீர்குலைந்துபோயுள்ள சமூகத்தை மீளக்கட்டடியமைப்பதற்கான ஒரு செயற்பாடாகவே இருக்க வேண்டும்" எனக் குறிப்பிடும் பேராசிரியர், இவ்வாறான மீள்கட்டமைப்புக்கான சூழ்நிலை முடிலில் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் முதலில் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

"மீள்குடியேற்ற என்பது மிகவும் இலகுவானதொன்றல்ல. இதற்கு முதலில் போக்குவரத்து வசதிகள், வீடமைப்பு என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இங்கு போர் நடைபெறாத இடங்களில் கூட வீடு:கள் இல்லாத ஒரு நிலை காணப்படுகின்றது. 
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது ஒரு அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. இந்த அரசியல் நாடகம் எவ்வாறு அரங்கேறுகின்றது என்றால் தேர்தல்கள் வரும் போது மீள் குடியேற்றம் தொடர்பாக உறுதியளிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாகப் பேசுவமதற்கே அரச தரப்பினர் முன்வருவதில்லை. மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது இது தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் எதுவுமே நடைபெறுவதில்லை. இது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வழமையாகவே உள்ளது" என அவர் குறிப்பிடுகின்றார். 

தென்பகுதியில் குறிப்பாக விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம் எனக் குறிப்பிடும் அவர், ஆனால் அங்கிருந்து இந்தளவுக்குப் பெருந்தொகையான மக்கள் வெளியேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.  அவ்வாறு சிறு தொகையான மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பினும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அரச நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  இந்த இடத்தில் கூட இனவாதம் செல்வாக்குச் செலுத்துகின்றது. 
இப்போது போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இந்தளவு பெருந்தொகையான நிலரப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடர்ந்தும் பேண வேண்டிய தேவை என்ன உள்ளது எனக் கேள்வி எழுப்பும்  அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி, இது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் வலியுறுத்துகின்றார்.  இருந்தபோதிலும் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தைத் தொடர்ந்தும் பேணும் திட்டத்துடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது. ஆக, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் இப்போதைக்குத் தீரப்போவதில்லை. 

வன்னியிலிருந்து திரும்பியோர்
உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொண்டு வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் நிலை எவ்வாறானதாக உள்ளது என்பதையிட்டு இனிப் பார்ப்போம்.
யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான இடப்பெயர்வுகளை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள் என்பதைக் கடந்த வாரங்களில் பார்த்தோம். இதில் முக்கியமானது உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு. இரண்டாவது போர் காரணமாக அல்லது பாதுகாப்பு அச்சம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு. இதனைவிட யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இருந்து தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ள முடியாது என்பதால் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளனர். 

இதில் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த வாரங்களில் பார்த்தோம்.  குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி சென்று பின்னர் அங்கிருந்தும் இடம்பெயர்ந்து தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பவர்களின் நிலை தொடர்பாகவும், தமது வழமையான வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதில் அவர்களுக்குள்ள தடைகள் என்ன என்பது தொடர்பாகவும் இப்போது பார்ப்போம். 
போரினால் ஏற்பட்ட இடபர்பெயர்வுகளைப் பொறுத்தவரையில் 1995 நவம்பரில் குடாநாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வு மிகவும் முக்கியமானது. இலங்கைப் படைகள் யாழ்ப்பாண நகரப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது பல இலட்சக்கணக்கான மக்கள் தென்மராட்சிப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். பின்னர் தென்மராட்சியில் படை நடவடிக்கை இடம்பெற்ற போது பெருந்தொகையானவர்கள் அங்கிருந்து வெளியேறி வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். 

இவ்வாறு வன்னிக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஏற்கனவே திரும்பியிருந்தார்கள். மற்றவர்கள் சில வெளிநாடுகளுக்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தார்கள்;. இதனைவிட வன்னியிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்தவர்கள்தான் வன்னில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போது அனைத்தையும் இழந்தவர்களாக இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருக்கின்றார்கள். 

அரசு வழங்கும் உதவி

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் விடுவிக்கப்பட்டவர்களில் சுமார் 75,000 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். 

குடாநாட்டில் உள்ள மூன்று முகாம்களில் சிலர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். 
இவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகளை யாழ்ப்பாண செயலகத்தின் மூலமாகவே முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்பாடுகளுக்குப் பெருமளவுக்கு உதவுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் எனக்குறிப்பிடும் போது மூன்று வகையான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று - சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், இரண்டு - தேசிய ரீதியான அரச சார்பற்ற நிறுவனங்கள். மூன்று உள்ளுர் அர சார்பற்ற நிறுவனங்கள். 
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு குடாநாட்டுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உடனடியாக 5,000 ரூபா பணத்தை வழங்குகின்றது. இதன் பின்னர் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 20,000 ரூபா வைப்பில் இடப்படுகின்றது. அதாவது எந்தனை உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக இருந்தாலும், அவர்களுக்கு அரசாங்கத்துக்கு வழங்கப்படுவது 25,000 ரூபா மட்டும்தான். அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்கள் பல வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு வந்து மறுவாழ்வை ஆரம்பிப்பதற்கு இந்தக் கொடுப்பனவு எந்தளவுக்குப் போதுமானது?
இதனைவிட மீள்குடியேற்றம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படுகின்றது. இது உலக உணவுத் திட்டத்தினால் ; வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதுடன், குறிப்பிட்ட காலத்துக்கு என்றே வழங்கப்படும் இத்தொகை வெகுவிரைவில் நிறுத்தப்பட்டுவிடக் கூடிய ஆபத்துக்களும் இருப்பதாகக் கூறுகின்றார்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 
இந்த நிலையில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வவுனியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75,000 பேரினதும் வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது. 

- அடுத்த வாரத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது.

Saturday, June 5, 2010

இந்தியாவும் இனநெருக்கடியும்:

மகிந்தவின் இந்திய விஜயமும்
டில்லியின் தடுமாற்றங்களும்..
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவிருக்கின்றது. பலத்த எதிர்பார்ப்புக்களை இந்த விஜயம் ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இனநெருக்கடித் தீர்வுக்கு இந்தியா எவ்வாறான பங்களிப்பைச் செய்யப்போகின்றது என்ற கேள்வி ஒரு புறம் எழுப்பப்பட மறுபுறத்தில், பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் சீபா எனப்படும் வர்த்தக உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திடுமா என்ற கேள்வி மறுபுறத்தில் எழுப்பப்படுகின்றது. 
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தையொட்டியதாக இராஜதந்திர நகர்வு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்டிருக்கின்றது. இனநெருக்கடித் தீர்வுக்காக கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை இந்தியாவிடம் கையளிக்கவுள்ள கூட்டமைப்பு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கைக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் எனத் தெரிகின்றது. புதுடில்லி ஊடக தனக்கு அழுத்தங்கள் வருவதை விரும்பாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்னுடைய விஜயத்துக்கு முன்னதாக கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார். 
13 வது திருத்தத்தின் அடிப்படையில் இன நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும், 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி இன்று எந்த வகையிலும் தயாராகவில்லை. 13 வது திருத்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று பிரிக்கப்பட்டுவிட்டன. இதனைவிட அதிகாரப் பரவலாக்கலில் தமிழர்கள் முக்கியமாக கேட்கும் பொலிஸ் அதிகாரங்கள் ஒரு போதும் வழங்கப்படப்போவதில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே திட்டவட்டமாகக் கூறிவிட்டார். 
இதனைவிட காணி அதிகாரத்தை வழங்குவதற்கும் ஆட்சியாளர்கள் தயாராகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் 13 வது திருத்தத்தில் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது மூன்று விடயங்கள்தான். ஒன்று - இணைப்பு, இரண்டு பொலிஸ் அதிகாரம். மூன்று - காணி அதிகாரம் இந்த மூன்றும் இல்லாத ஒரு தீர்வு என்பது நிச்சயமாக தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வாக இருக்கப்போவதில்லை. ஆனால், மகிந்த 13 பிளஸ் என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டாலும் 13 வது திருத்தத்தைக் கூட முழுமையாக வழங்குவதற்குத் தயாராகவில்லை. இந்த நிலையில் 13 வது திருத்தம் என இந்தியா கூறிக்கொள்வது இணைப்பும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் இல்லாத மாகாணபைத் திட்டத்தைத்தானா?
கொழும்பின் மீது அழுத்தம் எதனையும் கொடுக்கக்கூடியளவுக்கு தம்மிடம் எந்தப் பிடியும் இன்று இல்லை என்பது இந்தியாவுக்குத் தெரியும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இந்தியாவைப் புறக்கணிக்கும் வகையிலேயே தன்னுடைய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவது என்பதுதான் அதில் அதி முன்னுரிமை கொடுக்கப்பட்ட விடயமாகும். அதனால்தான் நாட்டின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் எவரும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்கின்றார்கள். 
மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் முதலாவது தடவையாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது தன்னுடைய முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கே சென்றிருந்தார். ஆனால், ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்துக்கு வெற்றிபெற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியா அல்ல. அவர் ரஷ்யாவுக்கே முதலில் சென்றார். இந்தியாவுக்கு இதன் மூலம் தெளிவான ஒரு செய்தி இராஜதந்திர மொழியில் சொல்லப்பட்டது. அத்துடன் மகிந்த ராஜபக்ஷ எங்கே நிற்கின்றார் என்பதையும் இந்த விஜயம் தெளிவாகக் காட்டியது. 
மகிந்தவின் இந்த சமிஞ்ஞை இந்தியாவுக்கு சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருந்தாலும் இந்தியா அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசு எனக் கூறிக்கொண்டாலும் கொழும்பைக் கட்டுப்படுத்தக்கூடியளவுக்கு அதனிடம் எந்தப் பிடியும் இருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் மக்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும், தமது பிரசின்னத்தை அதிகரிப்பதற்கும் இந்தியா முற்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் விசா அலுவலகம் ஒன்றை அமைத்த இந்தியா இப்போது யாழ்ப்பாணத்திலும், அம்பாந்தோட்டையலும் உதவித் தூதரகங்களை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கின்றது.
இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் தாம் இப்போதும் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய உள்நாட்டு அரசியல் தேவை புதுடில்லிக்கு இருக்கின்றது. இலங்கை விகாரத்தில் மத்திய அரசின் செயற்பாடுகள் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மகிந்த டில்லி செல்லவிருக்கும் நிலையில் கருணாநிதி இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு தமிழகத்தில் கொந்தளிப்பான ஒரு நிலை காணப்படுகின்றது என்பதை மட்டுமே இந்தியா இப்போதைக்குப் பயன்படுத்த முடியும்!
இலங்கை மீதான இந்தியாவின் பிடி தளர்ந்துவரும் அதேவேளையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை அண்மைக்காலத்தில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்தியாவா சீனாவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையிலிருந்த மகிந்த ராஜபக்ஷ சீனாவின் பக்கமே சாய்ந்திருக்கின்றார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவுடனான உறவுகளுக்கு முதன்மை இடத்தைக் கொடுக்கும் அதேவேளையில், பிராந்தியத்தில் உருவாகக்கூடிய நிலைமைகளைப் பொறுத்தவரையில் நடுநிலை கடைப்பிடிக்கப்படும் என்பதுதான் உத்தியோகபூர்வமான கொள்கையாக உள்ளது. 
1962 ஆம் ஆண்டில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட்டது. அப்போது நடுநிலை வகிக்கும் உபாயத்தையே இலங்கை கையாண்டது. இருந்தபோதிலும் 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், கிழக்குப் பாகிஸ்தானுக்கும் (பின்னர் பங்களாதேஷ் ஆகியது) இடையில் போர் இடம்பெற்ற போது இலங்கை நடுநிலையுடன் செயற்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷை உருவாக்கும் வகையில் இந்தியா தனது இராணுவத்தைப் பயன்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானிய போர் விமானங்கள் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு செல்வதற்கான வசதிகளை இலங்கை வழங்கியது. இலங்கை மீது இந்தியாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய முதலாவது சம்பவமாக இதுவே இருந்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் 1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் முற்பகுதியிலும் இந்தியாவுக்கு விரேதமான செயற்பாடுகளில் இலங்கை சம்பந்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியது. ஆசியாவில் சோவியத் யூனியனின் நெருக்கமான நட்பு நாடாக இந்தியா இருந்த அந்தக் கெடுபிடிப்போர் காலப்பகுதியில் அதற்கு விரோதமான அணியுடன் இலங்கை கைகோர்த்துக்கொண்டிருந்தமை இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆசியாவில் வல்லரசுகளின் சமபலத்தைப் பாதிப்பதாக இலங்கையின் செயற்பாடுகள் இருப்பதாக அப்போது இந்தியா குற்றஞ்சாட்டியது.
கெடுபிடிப்போர்க் காலப்பகுதியில் தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வல்லரசுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டன. உதாரணமாக பாகிஸ்தான் அமெரிக்காவின் கையாள் போலச் செயற்பட்ட அதேவேளையில் இந்தியா சோவித் தலைமையிலான அணியுடன் இணைந்தது. ஆப்பாகனிஸ்தானும் சோவியத் சார்பானதாக இருக்க இலங்கை அணிசாராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டாலும் அமெரிக்கா சார்பானதாகவே செயற்பட்டது. 
இக்காலப்பகுதியில் இந்தியா மிகவும் பலமானதாக இருந்தமைக்கு சோவியத் யூனியனின் ஆதரவும் ஒரு காரணம். 1971 ல் அமெரிக்கா தன்னுடைய போர்க் கப்பல் ஒன்றை பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதற்காக அனுப்பியபோது, சோவியத் யூனியன் தன்னுடைய போர்க் கப்பல்கள் சிலவற்றை மட்டுமன்றி, நீர்மூழ்கிகள் பலவற்றையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. 
இவ்வாறு இந்தியா பலமான ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்தியாவை மீறிச் செயற்படுவதற்கு இலங்கை முற்பட்டது. இலங்கையை இதற்காகத் தண்டிப்பது எனத் தீர்மானித்த இந்தியா, தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஆயுதம், பயிற்சி, தளவசதி, பணம் என அனைத்தையும் கொடுத்து கொழும்பை அச்சுறுத்துவதற்கான ஒரு ஆயுதமாக தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட இந்தியா 13 வது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான இலங்கை - இந்திய உடன்படிக்கையை ஏற்படுத்தியது. 
ஆனால், அமெரிக்கா, சோவியத் யூனியன் தொடர்பான தனது கொள்கையை 1980 களின் இறுதிப்பகுதியில் இந்தியா மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. 1991 இல் சோவியத் யூனியன் சிதறிப்போனபின்னர், அமெரிக்கா தனி ஒரு வல்லரசாகியது. சோவியத் ஆதரவுடன் வளர்த்திருந்த தன்னுடைய சக்தி மிக்க நிலையை இந்தியா இழந்தது. இந்தியா தன்னுடைய இராணுவத் தேவைகளுக்கு அமெரிகாவையும் ரஷ்யாவையுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 
இதேவேளையில் உலகின் பலம் பொருந்திய வல்லரசாக இன்று சீனா உருவாகியிருக்கின்றது. பொருளாதார பலம்தான் கேந்திர ரீதியான பலத்தையும் நிர்ணயிப்பதாக அமைந்திருப்பதால் சீனாவால் வேகமாக முன்னேற முடிகின்றது.  இந்தியா தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டதெனக் கருதும் தெற்காசியப் பிராந்தியத்தில் கூட சீனாவின் ஆதிக்கமே மேலாங்கியிருக்கின்றது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மார் மற்றும் திபேத் என்பன  சீனாவின் செல்வாக்கக்கு உட்பட்ட நாடுகளாகவே இருக்கின்றன. 
இந்தியாவைப் பொறுத்தவரையில் அங்கு பாதுகாப்புக்கும் ஸ்திரத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டுக்களின் கிளர்ச்சியையே அவர்களால் ஒடுக்க முடியவிலிலை. அத்துடன் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எதுவும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை எதனையும் செய்வதற்கும் விரும்புவதில்லை. உண்மையில் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் (இலங்கையை விட்டுவிடுவோம்) சீன சார்பு நாடுகளாகவே உள்ளன. இலங்கையும் இதேபோன்ற ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது என்ற சந்தேகம் இந்தியாவுக்குத் தாராளமாக உள்ளது.
1980 களில் இலங்கை மேற்கு நாடுகளுக்குச் சார்பாகச் செல்கின்றது என்பதற்காக இலங்கையைத் தண்டிக்க முற்பட்ட இந்தியாவினால், இப்போது சீனாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கைக்கு எதிராக ஒரு காயைக்கூட நகர்த்த முடியவில்லை. இலங்கைக்கு எதிராக காய்களை நகர்த்துவது இலங்கை சீனாவுடன் மேலும் நெருங்கிச் செல்வதற்குக் காரணமாகிவிடும் என்று டில்லி அஞ்சுவது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. 80 களில் தமிழ்ப்  போராளிகள் என்ற ஆயுதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டே கொழும்பை இந்தியா மண்டியிட வைத்த்து. இப்போது அவ்வாறான ஆயுதங்களும் இந்தியாவிடம் இல்லை. 
இந்த நிலையில் இன நெருக்கடித் தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என யாராவது நம்புவார்களாக இருந்தால்,..............

Friday, June 4, 2010

யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 04

பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதில்
முகாம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக என அமைக்கப்பட்ட முகாம்களைப் பொறுத்தவரையில் கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முகாம்தான் மிகவும் பழைமையானது எனத் துணிந்து சொல்லமுடியும்.  1990 ஆம் ஆண்டு ஆரம்பமான இரண்டாவது ஈழப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்குப் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் இதுவும் முக்கியமானது. இதனைவிட உரும்பிராய் மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளிலும் வலி வடக்குப் பகுதியிலிருந்து இரு தசாப்த காலத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் ள்ளன.
"எங்களை எங்களுடைய காணிகளில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும். போர் முடிவடைந்திருப்பதால் எங்களை எங்களுடைய பழைய இடங்களில் குடியமர்த்தலாம். எமது சொந்த இடங்களில் குடியேறுவதன் மூலமாக மட்டுமே எமக்கு மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பக்கூடியதாக இருக்கும்" எனக் கூறும் இந்த முகாம் மக்கள், தமது சொந்தக் காணிகளில் தம்மால் தொழில் செய்து தமது குடும்பத்தினரைப் பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.   தமது எதிர்காலம் தமது சொந்த மண்ணுக்குத் திரும்புவதிலேயே தங்கியுள்ளது என்பதுதான் இவர்களின் நிலைப்பாடு.
தம்மை தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தடுத்துவைத்திருப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். 
கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் 96 குடும்பங்கள் உள்ளன. முன்னர் இருந்தது 80 குடும்பங்கள். பின்னர் வன்னியிலிருந்து வந்த 16 குடும்பங்களையும் சேர்த்து இப்போது 96 குடும்பங்கள். வவுனியா மெனிக் பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வலி. வடக்குப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான எந்விதமான ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. பதிலாக இந்த முகாமில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் இடநெருக்கடி
இந்த முகாமில் 410 பேர் இருப்பதாக வலி வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் குழுவின் தலைவர் ஆ.சி.நடராஜா தெரிவித்தார். ஆனால், உரும்பிராய் மற்றும் ஏழாலை போன்ற இடங்களிலுள்ள முகாம்களில் இதனைவிட அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர். 1990 ஆம் ஆண்டு வலிவடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுடன் அங்கிருந்து வெளியேறியவர்கள் பின்னர் 1992 ஆம் ஆண்டு இந்த முகாமுக்கு வந்தனர். அன்று முதல் இந்த முகாமிலேயே இவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்தளவுக்கு நீண்டகாலமாக முகாம் வாழ்க்கையை நடத்துபவர்கள் இலங்கையில் இவர்களாக மட்டும்தான் இருக்க முடியும். 
வயதானவர்கள், குடும்பத்தவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் பெரும் இடநெருக்கடிக்கு மத்தியில் வசிக்கின்றார்கள். இந்தக் குடிசைகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்த மக்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக அரசாங்கம் எந்த விதமான நிதி உதவிகளையும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் வாழும் இவர்களைப் பொறுத்தவரையில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், இவர்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான விடிவும் இல்லை. 
இந்த முகாம் பொறுப்பாளரான வேலன் சிவராஜாவை முகாமில் வைத்துச் சந்தித்த போது அந்த முகாமின் நிலை தொடர்பாகவும், தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். 
வலிகாமம் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானதையடுத்து இடம்பெயர்ந்துவந்த தாம் பல இடங்களில் இருந்துவிட்டு 1992 இல் இந்த இடத்துக்கு வந்ததாகக் குறிப்பிடும் அவர் அப்போது அந்த இடத்தில் கிறேசர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.  ஆரம்பத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இங்கு 43 குடிசைகள் அமைக்கப்பட்டன. பின்னர் வந்தவர்களுக்காகவும் திருமணம் செய்து தனிக் குடித்தனம் செல்பவர்களுக்காகவும் மேலும் சில குடிகைள் பின்னர் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். 
இங்குள்ள சிறுவர்கள் பாடசாலைகளில் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் இல்லை எதுவும் இல்லை எனக் குறிப்பிடும் வேலன் சிவராஜா, சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் போது ஏனைய சிறுவர்களுடன் இணைந்து படிப்பதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகக் கவலை தெரிவிக்கின்றார். குறிப்பாக இவர்கள் முகாம் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுவதால் ஒதுக்கிவைக்கப்படும் நிலையும் பாடசாலைகளில் காணப்படுவதாக அவர் வேதனைப்படுகின்றார். 
இடம்பெயர்வதற்கு முன்னர் தாம் தமது காணிகளில் உழைத்தே தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொண்டதாகவும், அதனைவிட கூலி வேலைகளைச் செய்யக் கூடிய வசதிகள்  தமக்கு அப்போது இருந்ததாகவும் கூறும் சிவராஜா, தற்போது சிறிய முகாமில் அடைக்கப்பட்ட வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதால் தொழில் எதனையும் செய்ய முடியாதருப்பதாகவும் தெரிவித்தார்.  இதனால் தமது குடும்பங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்வதில் பெரும் நெருககடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 
அரசாங்க நிவாரணம்
அப்படியானால் அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்கு நிவாரணம் ஏதாவது வழங்கப்பட்டதா? உங்களுடைய குடும்பங்கள் எவ்வாறு வாழ்க்கையை நடத்துகின்றன எனக் கேட்டபோது,
"அரசாங்கத்தின் சார்பாக எமக்குத் தரப்படும்  நிவாரணம் 1,200 ரூபா மட்டும்தான். அதாவது மாதம் ஒன்றுக்கு ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு இத்தொகை வழங்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தொகைதான் இன்றும் கிடைக்கின்றது. அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு வருடமும் கூட்டுகின்றார்கள். ஆனால் இந்த நிவாரணத்தைக் கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.  12 வருடமாக ஒரே தொகைதான் எமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. 
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் என்றால்தான் இந்த 1,200 ரூபா கொடுப்பனவு. குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு இந்தத் தொகை கிடைக்காது. அவர்களுக்கு குறைந்தளவு கொடுப்பனவே வழங்கப்படுகின்றது.  12 ரூபா அரிசி விற்பனையான அந்தக் காலத்தில் இந்தக் கொடுப்பனவு சரி. இப்ப அரிசி 120 ரூபா விற்பனையாகும் போது இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்புகின்றார் செல்வராஜா.
"இங்கு எங்களால் தொடர்ந்தும் இருக்க முடியாது. எங்களை விடச் சொல்லித்தான் நாங்கள் கேட்கின்றோம். யுத்தம் முடிந்துவிட்டமதாகச் சொல்கின்றார்கள். ஆனால் எம்மை எமது சொந்த இடங்களுக்கு எதற்கான அனுப்ப மறுக்கின்றார்கள்? பிள்ளைகள் முகாம் பிள்ளைகள் எனக் கூறப்படுவதால் பாடசாலையில் படிக்க பிரச்சினையாகவுள்ளது" எனக்குறிப்பிடும் அவர், வவுனியாவிலிருந்து வந்த குடும்பங்களும் இந்த முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால் இப்போது பெரும் இட நெருக்கடி உருவாகியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
சுயதொழில்களைச் செய்வதற்கான வசதிகள் வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்பதால், நிவாரணத்தைத்தான் பெருமளவுக்கு நம்பியிருக்க வேண்டியவர்களாக இந்த முகாம் மக்கள் உள்ளனர். ஆனால் இவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் போதுமானதாக இல்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் 1,200 ரூபாவைவிட வேறு எந்தவிதமான உதவிகளும் இவர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. எப்போதாவது அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளைச் செய்வதாகக் கூறும் முகாம் வாசிகளும், ஆனால் அதனை நம்பியிருக்க முடியாது எனவும் கூறுகின்றார்கள்.  
சமூகப் பிரச்சினைகள்
இதேவேளையில் இந்த முகாமல் இடநெருக்கடி அதிகமாக இருப்பதாலும், பொதுவான கழிவறைகளையும், கிணற்றையுமே அனைவரும் பயன்படுத்த வேண்டியிருப்பதால் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகக் கூறுகின்றார் இம்முகாமில் வசிக்கும் மகேஸ்வரி செல்வராஜா.
"முகாமில் மிகவும் நெருக்கடியான நிலையில் வசிப்பதால் இளவயதுத் திருமணங்கள் அதிகரிக்குது. இதனால் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகின்றார்கள். நாங்கள் எங்களுடைய சொந்த இடங்களில் இருந்த போது மிகவும் நல்ல நிலையில் இருந்த நாங்கள். எங்களுடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் போதும் அவர்களுக்கு வீடு வளவுகளுடன் சீதனம் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருக்குது. இப்ப என்னெண்டால் முகாம்களுக்குள்ளேயே திருமணம் செய்து முகாமுக்குள்ளேயே அவர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. நாங்கள் எங்களுடைய சொந்த இடத்துக்குச் சென்றால் அவர்களுக்கு வீடுவளவைக் கொடுத்து அவர்களை நல்ல ஒரு வாழ்க்கையை வாழச் செய்ய முடியும்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் பரமேஸ்வரி. 
"இங்கு முகாம்களுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதால் எங்களுடைய பிள்ளைகளின் பாடசாலைப் படிப்பு எல்லாம் பாதிக்கப்படுகின்றது. இங்கையிருந்து பாடசாலைகளுக்குச் சென்றால் அவர்களை முகாம் பிள்ளைள் என கேலியாகச் சொல்கின்றார்கள். அதனால் அவர்கள் பாடமசாலைகளில் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்"எனக் கூறும் பரமேஸ்வரி, இதனைவிட பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கும் தாம் பல இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
முகாமில் பொதுவான கிணறுதான் உள்ளது. எல்லாரும் அங்குதான் போய்நின்று குளிக்க வேண்டும். இதனால் இங்குள்ள பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.     இதனால் பல சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றது. இளவயதுத் திருமணங்கள் அதிகமாக இடம்பெறுகின்றது. எமது பிள்ளைகளை வெளியே உள்ளவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாதிருக்கின்றது. முகாம் பிள்ளைகள் என்ற பெயரில் இவர்கள் இருப்பதால் அவ்வாறான திருமணங்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் எமது பிள்ளைகள் முகாமுக்குள்ளேயே திருமணத்தைச் செய்துகொண்டு இங்கேயே வாழ வேண்டியவர்களாக உள்ளார்கள். 
"ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் எங்களை ஊருக்கு விடுவார்களோ என்று ஏக்கத்துடன்தான் காத்திருக்கின்றோம். தேர்தல் காலத்தில் அவ்வாறு சொல்கின்றார்கள். புpன்னர் அனைவரும் மறந்துவிடுகின்றார்கள். எங்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வசதியில்லை. வன்னியாலை வந்த 16 குடும்பங்கள் இப்ப இந்த முகாமில் வாழுது. ஏற்கனவே இடநெருக்கடி இருக்கும் போது அவர்களுடைய வருகை மேலும் இடநெருக்கடியை அதிகரித்திருக்கின்றது. வன்னியில் அவர்கள் வீடுகட்டி வசதியான தொழல்களையும் செய்துகொண்டு வாழ்ந்தவையள். இப்ப சமைப்பதற்குக் கூட இட வசதி இல்லாத ஒரு பரிதாபமான நிலையில் இருக்கின்றார்கள்" எனவும் குமுறுகின்றார் பரமேஸ்வரி. 
இந்தக் குழுறல் மகேஸ்வரியினுடையது மட்டுமல்ல...முகாமிலுள்ள அனைவருடைய குமுறலும் இதுதான். இது தொடர்பாக அரசாங்கத்தின் பிந்திய அணுகுமுறை என்ன என்பது பற்றிய தகவல்களுடன் அடுத்த வாரம்...