Saturday, October 20, 2012

களம் இறங்கிய பொன்சேகா! கலக்கத்தில் ரணில்!!

எதிர்பார்ப்புகளை  ஏற்படுத்தியிருந்த அரசுக்கு எதிரான ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பேரணி கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. மழைக்கு மத்தியிலும் பெருந்தொகையானவர்கள் பேரணியில் கலந்துகொண்டமை தமக்குக் கிடைத்த வெற்றி என ஏற்பாட்டாளர்கள் திருப்தியடைந்திருக்கின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்தப் பேரணியின் பிரதான கோஷமாக இருந்தது. ஆனால், அரசியலில் அரங்களில் இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு அது காரணமல்ல.

இந்த முன்னணியின் மூலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தீவிர அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்திருப்பது இது பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு பிரதான காரணம். அரசுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் வகையில் பலமான ஒரு எதிரணியாக இது உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டமை இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு இரண்டாவது காரணம். இந்த முன்னணியின் பிரவேசம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கேள்வியும் இது தொடர்பான கவனம் அதிகரித்திருந்தமைக்கு மற்றொரு காரணம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் அரசாங்கத்தைக் கவிழ்த்தல் என்பன இந்த முன்னணியின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவையாக இருக்கின்ற போதிலும், முன்னணியின் பேரணி தொடர்பாக அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஐக்கிய பிக்கு முன்னணியின் பேரணி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வில் எற்படுத்தியிருந்த நெருக்கடிகள் பற்றிய செய்திகள் நிச்யமாக அரசுக்கு இனிப்பானவையாக இருந்திருக்கும். இதற்கு மேல் தமக்கு ஆபத்து இல்லை எனவும் அரசு கருதியிருக்கலாம்.

அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை சரத் பொன்சேகா பிக்கு முன்னணி மூலமாக ஆரம்பிக்கப்போகின்றார் என்ற தகவல் கசிந்தவுடன் உஷாரானவர்கள் அரசாங்கத் தரப்பினர் அல்ல. ஐ.தே.க. தலைமையே உடனடியாக இதனால் உஷாரடைந்தது. எதிரணி முன்னணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தான் இறங்கியிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க நீண்ட காலமாகவே கூறிவருகின்ற போதிலும், அது ஒரு தேக்க நிலையிலேயே இருக்கின்றது. உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினரையும் அரவணைத்து பலமான ஒரு கூட்டமைப்பை அமைக்க ரணிலினால் முடியவில்லை.

அந்த இடத்தை நிரப்புவதற்கு பொன்சேகா இப்போது முற்பட்டிருப்பது ரணிலுக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதில் சந்தேகம் இல்லை. பொன்சேகாவின் பிரவேசத்தால் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்த்தைக் கூட கடந்த தேர்தலில் இழக்க வேண்டியேற்பட்டதை ரணில் மறந்;திருக்கமாட்டார். பொன்சேகாவின் வருகை ரணிலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று - மகிந்த ராஜபக்ஷவுக்குச் சவால்விடக்கூடிய தலைவராக பொன்சேகா இருப்பதால் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றின் தலைமை பொன்சேகாவிடம் சென்றுவிடலாம் என்பது. இது ரணில் அமைக்கும் எதிரணி கூட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும். இரண்டு - ஐ.தே.க.வில் அதிருப்தியடைந்திருக்கும் பலர் பொன்சேகாவை நோக்கிச் செல்லலாம் என்பது.

இந்தப் பின்னணியில்தான் பொன்சேகாவின் பேரணிக்குச் செல்பவர்கள் கட்சியின் உறுப்புரிமையை இழப்பார்கள் என ஐ.தே.க. தலைமை அறிவித்தது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலருடைய கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதகைவிட பொன்சேகா மீதான தாக்குதலையும் ஐ.தே.க. தீவிரப்படுத்தியிருந்தமையைக் காண முடிந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை நிறுத்தியது தவறு என்பதை தாம் இப்போது உணர்ந்துகொள்வதாக ஐ.தே.க. அறிவித்தது.

நடைபெறும் இந்தச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஒரு விடயத்தைத் தெளிவாக உணர முடிகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு என்பவற்றை தமது பிரதான கோஷங்களாக ஐ.தே.க. தலைமையும் பொன்சேகா தரப்பினரும் முன்வைக்கின்ற போதிலும், அதற்கு முன்னதாக தமது தலைமையை உறுதிப்படு;திக்கொள்வதிலேயே அவர்களுடைய கவனம் உள்ளது. ஆட்சியைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு ரணில் தலைமையில் எதிர்க்கட்சி முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பொன்சேகா தயாராகவில்லை. அதேபோல பொன்சேகாவுக்கு தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ரணில், பொன்சேகா அணியில் இணையத் தயாராகவில்லை.

இருவருமே தம்மைப் பற்றிய மிகையான கணிப்பு ஒன்றை வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால், தம்மிடமுள்ள பலவீனங்களை இருதரப்பினரும் உணரும்போது அவர்கள் இணைந்து செயற்படவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஒன்றாக இணைந்து செயற்பட்டால்தான் தமது இருப்புக்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஒன்று வரும் போது இருவரும் இணைந்து செயற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறுகின்றார் இந்த இரு தரப்பினருடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ள ஒரு மூத்த அரசியல்வாதி. உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் அவ்வாறான நிலை ஏற்படும் என்பது அவரது கணிப்பு!

அதேவேளையில், பிக்குகள் முன்னணியின் கூட்டத்தில் பொன்சேகா வெளியிட்ட அறிவிப்பும் முக்கியமானது. அடுத்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கலாம் எனவும், அதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்தார். ஐக்கிய பிக்குகள் முன்னணி மூலமாக மீண்டும் தீவிர அரசியலுக்குள் பொன்சேகா பிரவேசித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் பொன்சேகா இப்போதே இறங்கிவிட்டாரா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. ஐ.தே.க.வை பெரிதாகக் குழப்புவதுதம் இதுதான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்திய பொது எதிரணி அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. ஐ.தே.க.,    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மு.கா. மற்றும் ஜே.வி.பி. என்பன அவருடைய வெற்றிக்காகக் களமிற்கியிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இப்போது ஒற்றுமையில்லை. அவ்வாறான ஒற்றுமை ஒன்று உடகடியாக ஏற்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படவில்லை. திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்தி தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இந்தத் தருணத்தை மகிந்த பயன்படுத்திக்கொள்ளலாம் என பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. இந்தக் கருத்து நிராகரக்கப்படக்கூடிய ஒன்றல்ல.

பொன்சேகாவைப் பொறுத்தவரையில் சிங்கள - பௌத்த வாக்குகளைப் பெற்றுத்தான் இந்த அரசாங்கத்தை மாற்ற முடியும் என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார். இதற்கான தகமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை எனவும் பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. அதற்காக தன்னுடைய செயற்பாடுகளை முற்றுமுழுதாக சிங்கள - பௌத்த அடிப்படையில் கொண்டு செல்லவும் அவர் விரும்பவில்லை. அவ்வாறு செல்வது மகிந்தவின் செயற்பாடுகளை ஒத்ததாக அமைந்துவிடும் எனவும் அவர் கருதுகின்றார். அதனால் இதற்குள் தமிழ்த் தரப்பையும் இணைத்துக்கொள்ள அவர் விரும்புவதாகத் தெரிகின்றது. அதனால்தான் ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மனோ கணேசனைப் பொறுத்தவரையில் ஐ.தே.க. தலைமையிலான எதிரணிக் கூட்டமைப்பில் இருப்பதால் பொன்சேகாவின் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளையில் இவ்விடயத்தில் ஒரு முக்கியமான நகர்வு  ஒன்றையும ; மனோ கணேசன் செய்திருக்கின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜர் ஒன்றை பொன்சேகாவுக்கு அவர் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் முன்வைத்திருக்கின்றார்.

ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தம்மை சிறுபான்மையினருடைய நியாயமான அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கட்சியாக அவர்கள் காட்டிக்கொள்கின்ற போதிலும், அதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதில் தயக்கத்தையே காட்டுகின்றார்கள். சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் இது தம்மைப் பாதிக்கலாம் என்ற அச்சம்ஐ.தே.க.வக்கு உள்ளது. இந்த நிலையிலேயே மனோ கணேசன் தன்னுடைய கோரிக்கைகளை ஐ.தே.க.வுக்கும் முன்வைத்துள்ளார்.

எது எப்படியிருந்தாலும் பொன்சேகாவின் மீள்பிரவேசம் தூங்கிக்கொண்டிருந்த ஐ.தே.க.வை விழித்தெழச் செய்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. கொழும்பு ஹைட் பாக்கில் பொன்சேகா உரைநிகழ்த்தவிருந்த அதேவேளையில் துண்டுப் பிரசுரங்களுடன் நுகேகொடை சந்தியில் ரணில் விக்கிரமசிங்க வீதியில் இறங்கியிருந்தார். நவம்பர் 8 ஆம் திகதி வரையில் அரசுக்குக் காலக்கெடு விதித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அதன்பின்னர் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஆக, அடுத்துவரப்போகும் காலங்கள் எதிரணியினரின் போராட்டங்கள் நிறைந்த ஒரு வாரமாக அமையலாம்.

Monday, October 1, 2012

கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி  முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள்.

வழமைபோலவே இந்தியா தொடர்பான மாயைகள் கிளப்பப்படுகின்றன. மகிந்த ராஜபக்‌ஷ அரசின் மீது இந்திய அரசு அழுத்தங்களைக் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுத் தந்துவிடும் என்பது போல கதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வுக் கூட்டம் ஜெனீவாவில் நவம்பர் மாதம் நடைபெறவிருப்பதும், அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதும் உண்மையாக இருந்தாலும், இனநெருக்கடித் தீர்வில் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா உள்ளதா என்பதும், கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் இந்த விடயத்தில் செல்வாக்கைச் செலுத்துவதாக இருக்குமா என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டியவையாக உள்ளன.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என இந்தியா அக்கறை காட்டியது உண்மைதான். தமக்கு சார்பான ஒரு தரப்பு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பது தமக்கு வசதியானதாக இருக்கம் என டில்லி கருதியிருக்கலாம். சுமர் 6,500 வாக்குகளால் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டடிருந்தாலும்கூட, 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் தமிழர் தரப்பின் பிரதான பிரதிநிதிகள் தாம்தாம் என்பதை கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக்கொட்டியிருந்தது.

இருந்த போதிலும், அரசுடனான பேச்சுக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் இந்த வெற்றி எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டமைப்பினரை ஓடிவந்து கட்டியணைக்கப்போவதுமில்லை.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வாக்குறுதிகள் அவர்களால் வழங்கப்பட்டது. தம்மை வெற்றி பெறச்செய்வதன் மூலமாக அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கலாம் என்பது அவற்றில் ஒன்று. குறிப்பாக போர்க் குற்றச்சாட்டை மேற்குலகம் தூக்கிப் பிடிப்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது கூட்டமைப்பின் கருத்தாக வெளிப்பட்டது. நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தை இலக்காக வைத்துத்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை ஒரு வருடம் முன்கூட்டியே நடத்துவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது என்றாலும் கூட, இத்தேர்தலின் முடிவுகள் அவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என நம்பமுடியாத நிலைதான் உள்ளது.

தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது இந்திய விஜயத்தை வைத்து கொஞ்சக்காலத்துக்கு படம் காட்டலாம் என கூட்டமைப்பின் தலைமை நினைக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை விவகாரத்தில் கையாலாகத்தனத்திலேயே அது தொடர்ந்தும் உள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அதற்குப் பழிவாங்கும் வகையில் மகிந்த அரசு நடத்தும் தாக்குதல்களில் தற்காப்பு நிலையில் மட்டுமே இந்தியாவினால் நிற்க முடிகின்றது.

இந்தியாவின் இந்த கையாலாகத்தனம் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியாததல்ல. இம்மாத முற்பகுதியில் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கின்றார். தமிழகத்தில் தீக்குளிப்பு, தூதரகம் முற்றுகை, மத்திய பிரதேசத்தில் வைகோவின் வீதிமறிப்புப் போராட்டம் என்பவற்றுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இராப்போசன விருந்தளித்துக் கௌரவித்தார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்புக்களின் போது இனநெருக்கடி தொடர்பில் எந்தவிதமாகவும் இந்தியத் தரப்பு கேள்வி எழுப்பவில்லை. அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

தனது இந்தியப் பயணத்துக்கு முன்னோடியாக ஒரு உபாயத்தை மகிந்த கையாண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்த அவர், குறுகிய காலப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும், இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது முக்கியமாக பேசப்பட்டது.

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வரவேண்டும் என ஜனாதிபதி 'வழமைபோலவே' இந்தச் சந்திப்பின்போதும் அழைப்பு விடுத்தார்.

கூட்டமைப்பின் தலைவரும் இதற்கு வழமையான பதிலையே கொடுத்தார். "நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வருவதையிட்டு பின்னர் பார்க்கலாம்" என்பதுதான் சம்பந்தனின் பதிலாக இருந்தது.

"இந்தியப் பயணத்தை முடித்துககொண்டு வந்த பின்னர் இது தொடர்பாக ஆராயலாம்" என சந்திப்பை முடித்துக்கொண்டு சம்பந்தனை வழியனுப்பிவைத்தார் மகிந்தர்.

இன நெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தச் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால், மகிந்தரைப் பொறுத்தவரையில் இதில் முக்கியத்துவம் ஒன்றிருந்தது. சமாதானப் பேச்சுக்கள் பற்றி இந்தியாவில் சொல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. "டில்லி புறப்பட முன்னர் சம்பந்தனை சந்தித்தேன். இனி கொழும்பு திரும்பியவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்போம்"  என மகிந்த இந்தியத் தரப்புக்கு மகிந்தர் சொல்ல, இந்தியத் தரப்பு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவை மகிந்தர் மௌனமாக்குவதற்கு சம்பந்தர் தாராளமாக உதவியிருக்கின்றார். மகிந்தவின் இராஜதந்திரத்துக்கு சம்பந்தர் மீண்டும் பலியாகியிருக்கின்றார்.

இதனைச் சொன்ன மகிந்தர் மற்றொரு விடயத்தையும் இந்தியத் தரப்புக்கு நாசூக்காகப்போட்டுவைத்தார். "கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்க நான் தயார். அவர்கள்தான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருகின்றார்கள் இல்லை" எனப் புகார் செய்தார் மகிந்தர். இந்தியத் தரப்பு அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வது ஒன்றுதான் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஒரே வழி என இந்தியத் தரப்பு இப்போது கருதுவதாகத் தெரிகின்றது.

ஆக, அக்டோபர் 10 ஆம் திகதி கூட்டமைப்பினர் டில்லி செல்லும் போது அங்கு அவர்களுக்குக் காத்திருக்கும் செய்தி என்ன என்பது இப்போது தெளிவானது. "பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லுங்கள்" என்ற செய்தியே சம்பந்தக் குழுவினருக்குச் சொல்லப்படப்டபோகின்றது. ஆக, மகிந்த தரப்புக்கு அல்ல சம்பந்தன் தரப்புக்கே இந்தியா அழுத்தம் கொடுக்கப்போகின்றது. இதற்கு சம்பந்தன் தரப்பு 'தயங்கினால்', "நீங்கள் போங்கள்..மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என இந்தியா சொல்லலாம்.

இப்போதுள்ள நிலையில் மகிந்தவைச் சாந்தப்படுத்துவதுதான் இந்தியாவுக்குள்ள தேவை. இலங்கை, பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை மையப்படுத்தி இந்தியாவைச் சுற்றிவளைக்கும் வியூகத்தை சீனா வெற்றிகரமாக வகுக்கின்றது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவை வேவுபார்க்கும் திட்டங்களை பாகிஸ்தான் வகுத்திருக்கின்றது. (இது பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்) இலங்கையுடன் பகைமையை வளர்ப்பதன் மூலம் தமக்கு எதிரானவர்களுடனேயே கொழும்பு இணைந்துகொள்ளும் என்பதுதான் இந்தியாவின் பிந்திய கண்டுபிடிப்பு.

அதனால் கொழும்பைக் குளிர்விப்பதற்கான செயற்பாடுகளை முன்டுக்க வேண்டிய நிலையில் டில்லி உள்ளது. இதன்மூலமகவே தமது எதிரிகளின் பிடியிலிருந்து கொழும்பை விடுவிக்கலாம் என டில்லி கருதுகின்றது. இதனைவிட கொழும்பின் மீது அழுத்தங்களைக் கொடுப்பது தமக்கே பாதகமானதாக அமையும் என டில்லி அஞ்சுகின்றது.

தமது இந்தியப் பயணத்தின்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்கப்போவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பையும் சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். இந்த நிலையில் கூட்டமைப்பை அவர் சந்திப்பார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. வெறுமனே மக்களுக்கு படம்காட்டுவதற்காகத்தான் இதனை அவர் சொல்லியிருக்க முடியும்.

அதேவேளையில் வடபகுதியிலுள்ள பாதுகாப்ப வலயங்கள் தொடர்பாக டில்லியிடம் முறையிடப்போவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். இது தொடர்பில் கூட்டமைப்பு எத்தனையோ தடவை முறையிட்டுள்ளது. இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை என்பதும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தெரிந்துதான் இருக்கும். நாம் இந்தியத் தரப்பக்கு சொன்னோம். அவர்கள் அதனையிட்டு கவனமாக செவிமடுத்தார்கள் என்று செய்தி கொடுக்கக்கூடியதாக இருக்குமே தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.

ஆக, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதற்காக மகிந்த அரசின் மீது இந்தியா அழுத்தங்களை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. டில்லி விஜயத்தின் போது இது கூட்டமைப்புக்கு தெளிவாக உணர்த்தப்படும். இனிமேலாவது இந்தியாவைக் காட்டி அரசியலை நடத்தாமல் தமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்வதற்கான உபாயங்களை கூட்டமைப்பின் தலைமை வகத்துக்கொள்ள வேண்டும்.