Sunday, January 1, 2017

இரண்டாவது சபை தீர்வைத் தருமா?

அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடிய முக்கியமான சில அம்சங்கள் ஊடகங்கள் மூலமாகக் கசிந்திருக்கின்றன. அவ்வாறு சகிந்திருக்கும் அம்சங்களில் ஒன்றுதான் இரண்டாவது சபை அல்லது செனட் சபை என்பதாகும். எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் செனட் சபை ஒன்றை அமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இனநெருக்கடிக்காக முன்வைக்கப்படும் தீர்வுகளில் ஒன்றாக ‘செனட் சபை’ யை காட்டிக்கொள்வதற்கான திட்டத்துடன்தான் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் செனட் சபை என்பது ஒன்றும் புதிதல்ல. இலங்கையின் அரசியல் வரலாற்றில் செனட் சபை ஏற்கனவே இருந்திருக்கின்றது என்பதுடன், அதன்மூலம் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில்தான் அது இல்லாதொழிக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில் மீண்டும் ஒரு செனட் சபை அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? அது எவ்வாறான பலனைக்கொடுக்கும்? என்பதும் ஆராயப்பட வேண்டிய கேள்விகள்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது மூன்று நோக்கங்களைக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒன்று – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது. இரண்டு – தேர்தல் முறையை மாற்றியமைப்பது. மூன்று – இனநெருக்கடிக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமாகத் தீர்வைக்கொண்டுவருவது. இதில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்கான பொறிமுறைகளில் ஒன்றாக செனட் சபை அமைக்கப்படுவதாகக் காட்டிக்கொள்வதற்கே வழிநடத்தல் குழு முற்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. 13 பிளஸ் என பிரதான கட்சிகள் வெளியே சொல்லிக்கொண்டாலும், 13 ஆது திருத்தத்துக்கு மேலாகச் சென்று தீர்வு ஒன்றைத் தருவதற்கு பிரதான கட்சிகள் தயாராகவில்லை. இந்த நிலையில் 13க்கு மேலாக நாம் சென்றுவிட்டோம் என இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் சொல்லிக்கொள்வதற்கு இந்த செனட் சபை அரசாங்கத்துக்கு உதவும். அதாவது இந்த செனட் சபைதான் 13 பிளஸ் என வழிநடத்தல் குழுவில் உள்ள பிரதான கட்சிகள் காட்டிக்கொள்ளப்போகின்றன.

அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூட இந்த செனட் சபைத் திட்டத்தை எதிர்க்கவில்லை. அதனைப் பரிசீலனை செய்யலாம் என அவர் சொல்லியிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செனட் சபை அமைக்கப்படுவதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இதுவரையில் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இருந்தபோதிலும் கூட்டமைப்பை வழிநடத்தல் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் இருப்பதாகத் தெரிகின்றது. வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் இதனை அவர்கள் எதிர்க்கவில்லை.  ஆக, வரப்போகும் புதிய அரசியலமைப்பில் செனட் சபை இடம்பெறப்போகின்றது என்பது அனேகமாக உறுதியாகியிருக்கின்றது.

இந்தியாவில் மாநிலங்கள் அவை எனக்குறிப்பிடப்படும் மேல் சபையை ஒத்ததாக இலங்கையிலும் இரண்டாவது சபையை உருவாக்குவதுதான் திட்டம் என ஊகிக்க முடிகின்றது. ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். அதனைவிட பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் 10 உறுப்பினர்களையும் சேர்த்து செனட் சபை மொத்தம் 55 உறுப்பினர்களைக் கொண்டதாக செனட் சபை இருக்கும். மாகாணங்களின் முதலமைச்சர்களையும் செனட் உறுப்பினர்களாக்குவற்கான யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மாகாணங்களின் பிரச்சினைகளை செனட் சபையில் ஒலிக்கச் செய்வதுதான் இதன்நோக்கம் எனச் சொல்லப்படுகின்றது. இது 13 ஆவது திருத்தத்தில் இல்லாதது. இதனை வழங்குவதன் மூலம் 13 ஐயும் தாண்டிச் சென்றுள்ளோம் எனக் காட்டிக்கொள்வதுதான் இதனை உருவாக்குபவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

செனட் சபைக்கு இருக்கப்போகும் அதிகாரங்களுக்கு மேலாக அதன் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள் என்பதும்தான் இதன் செயற்பாடுகளை நிர்ணயிப்பதாக இருக்கும். பாராளுன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலம் ஒன்றை ‘வீட்டோ’ செய்வதற்கான அதிகாரம் பொதுவாக செனட் சபைக்கு வழங்கப்படும். இதன்மூலம் எந்தவொரு சட்டமூலமும் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டாவது சபையின் அங்கீகாரமும் அவசியம். இலங்கையில் அமைக்கப்பட உத்தேசியக்கப்பட்டுள்ள செனட் சபை சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஐந்து உறுப்பினர்கள் செனட் சபைக்குச் செல்லும் போது, வடக்கு கிழக்கிலிருந்து செல்லப்போது 10 உறுப்பினர்கள் மட்டுமே. அதனால், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதாகவோ, அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் காவலனாகவோ செனட் சபை இருக்கப்போவதில்லை. ‘செனட்டர்கள்’ என்ற பெயருடன் சிலர் வலம்வரலாம், செனட் சபையில் சிலவற்றைப் பேசலாம் என்பதைவிட இதில் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை.

வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை. பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லை. பௌத்தத்துக்கு முதன்மை இடம் என அனைத்திலும் சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு முரணாகவே வழிநடத்தல் குழு சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ‘செனட் சபை’ என்பதை ஒரு கவர்ச்சியாகக் காட்டி இதற்குள் தீர்வு உள்ளது என்பது போல நம்பவைக்கும் ஒரு முயற்சியாகவே செனட் யோசனை உள்ளது. இவ்விடயத்தில் தமிழத் தலைமைகள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளன என்பது மூடுமந்தரிமாக இருக்கத் தேவையில்லை. வெளிப்படையானதும் ஆரோக்கியமானதுமான விவாதமே இன்று எமக்கு அவசியம்!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)

No comments:

Post a Comment