Sunday, October 20, 2013

இராஜதந்திர நகர்வு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் ஒரு முறை சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றார். வடமாகாணத்துக்கான அமைச்சுப் பொறுப்புக்களுக்காகவே அவர் இப்போது இந்தப் பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டிருக்கின்றார். விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலமைச்சராகவுள்ள அதேவேளையில் முக்கியமான 16 அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்களையும் அவர் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் அது. எதனைச் செய்யக்கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தாரோ அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

வடமாகாண சபைக்கு இந்த அதிகாரங்கள் கொடுக்கப்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் சிங்கள தேசியவாதக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பது இலகுவில் மறந்துவிடக்கூடியதல்ல. இதற்காக 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருந்தது. இந்த மாற்றத்தைச் செய்யாமல் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தினால் பதவி துறக்கப்போவதாக அமைச்சர் ஒருவரும் அதிரடியாக அறிவித்திருந்தார். இவ்வளவுக்குப் பின்னரும் சட்டம், ஒழுங்கு காணி அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கையளித்து ஜனாதிபதி கைச்சாத்திட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகக் கருதலாம். ஆனால், இந்த அதிகாரங்களை மாகாண சபையால் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமா அல்லது இதனைப் பயன்படுத்துவதற்காகப் போராட வேண்டியிருக்குமா என்ற முக்கியமான கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஆனால், உண்மையில் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வெற்றி என மட்டும் கூறிவிட முடியாது. சர்வதேச அரங்கில் உருவாகியிருக்கும் இலங்கைக்கு எதிரான நெருக்குதல்களே இதற்கான கள நிலையை கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. விடுதலைப் புலிகளுடனான போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், அதன்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களைத் தீவிரமாக்கியிருக்கின்றது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் எதனையாவது செய்தாகவேண்டிய நிர்பந்தம் கொழும்புக்கு உள்ளது. அரசாங்கம் விரும்பாத போதிலும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியமைக்கும் இந்த நிர்ப்பந்தமே காரணம். மாகாண சபையின் அதிகாரங்களைப் பிடுங்கிக்கொள்ளாமல் விட்டதன் பின்னணியும் அதுதான். போரின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்தக் கள நிலைமைதான் கூட்டமைப்பு இலகுவாக காய்நகர்த்துவதற்கான  வாய்ப்பான நிலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் தன்னுடைய சிங்கள தேசியவாத கடும்போக்கைத் தளர்த்திக்கொண்டுள்ளமைக்கு தற்போதைய நிலையில் இரண்டு விடயங்கள் காரணமாகவுள்ளன. ஒன்று - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. இரண்டாவது - மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. சர்வதேச சமூகத்தில் தான் ஓரங்க்டப்பட்டுவிடவில்லை என்பதைக் காட்சிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாடு அவசியமானதாகவுள்ளது. ஆனால், இந்த மாநாட்டுக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய போன்ற நாடுகளின் தலைவர்கள் கேள்விக் கணைகளுடன்தான் வரவுள்ளார்கள். கனடா வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்தியா நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கைக்குள்ள இரண்டாவது பிரச்சினை ஜெனீவா! ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அந்தத் தீர்மானங்கள் பலவீனப்படுத்தப்பட்டமைக்கு இந்தியாவே பின்னணியில் செயற்பட்டது. ஆனால், அடுத்த மார்ச் மாதத்தில் அதேபோன்ற ஒரு பங்களிப்பை வழங்க இந்தியாவினால் முடியாது போகலாம். ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பது இதற்குக் காரணம். இந்தத் தேர்தலின் போது தமிழகத்தின் அதிகரித்த நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை  டில்லிக்கு இருக்கும். தமிழர்களை அரவணைக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனாதா கட்சி வியூகங்களை அமைப்பது காங்கிரஸ் அரசுக்கு மேலும் நிர்ப்ந்தங்களை ஏற்படுத்தும். இதனால் இம்முறை ஜெனீவாவில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முற்படும் என எதிர்பார்க்க முடியாது.  ஆக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டாத வரையில் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடர் இலங்கைக்கு நெருப்பாறாகத்தான் இருக்கும்!

இந்தப் பின்னணியில் வடமாகாண சபையின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் எதனையாவது செய்யப்போவது ஆபத்தானதாக அமையும் என்பதை கொழும்பு  உணர்ந்துகொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இனவாதத்தைக் கக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் அசாதாரண மௌனம் கூட இதனை உறுதிப்படுத்துவதாகத்தான் உள்ளது. இதனை மற்றொருவகையில் சொன்னால், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உட்பட தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களைப் பொறுத்து காய் நகர்த்துவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாக இதனைக் கருதலாம். தான் விரும்பாவிட்டாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற விடயங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதைப்போல இன்னும் பல நிர்ப்பந்தங்கள் ஜனாதிபதிக்கு ஏற்படலாம். உட்கட்சிப் பூசல்களைத் தவிர்த்து திட்டமிட்ட முறையில் காய்களை நகர்த்துவதன் மூலம் மேலும் பலவற்றை கூட்டமைப்பினரால் சாதிக்க முடியும். ஆதற்கான கள நிலமையை சர்வதேசம் இப்போது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. சாதிப்பார்களா கூட்டமைப்பினர்?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-20)

Tuesday, October 15, 2013

இதற்காகத்தான் வாக்களித்தோமா?

வடமாகாண சபை செயற்படத் தொடங்குவதற்கு முன்னதாகவே சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளிடையேயான முரண்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. முலமைச்சரின் பதவியேற்புக்கு கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் பலரும் வரவில்லை. அதேபோல அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதிலும் கட்சித் தலைவர்கள் பலர் பங்குகொள்ளவில்லை. நிகழ்வை அவர்கள் புறக்கணித்தார்கள். கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் முன்பாக பதவியேற்க மறுத்து தனியாக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். இதன்மூலம் வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவுள்ள நிலையில் அதற்குள்ளேயே ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி போன்று செயற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்து அதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மக்கள் கடந்த இரண்டு வாரகாலமாக அங்கு இடம்பெறும் குத்துவெட்டுக்களால் அதிர்ந்துபோயுள்ளார்கள். இதற்காகத்தான் வாக்களித்தோமா என்ற கேள்வியை எழுப்பாத வாக்காளர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன.

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இருளுக்குள் இருக்கும் மக்களுக்குத் தொலைவில் தெரியும் ஒரு ஒளிக்கீற்றாகத்தான் மாகாண சபை உருவாகியது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட நிலை ஒருபுறம். மாகாண சபைகளுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற சிங்களத் தேசியவாதிகளின் கூக்குரல் மறுபுறம். இதற்கு மத்தியிலும் போரால் சிதைந்துபோயுள்ள வடக்கு மக்களின் பிரமாண்டமான தேவைகளை இந்த மாகாண சபை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்போகின்றது என்ற கேள்வி எழாமலில்லை. போரினால் அனைத்தையும் இழந்து மீள்குடியேற்த்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கள். காணாமல்போன உறவுகளைத் தேடியலையும் மக்களின் வேதனைகள். குடும்பத் தலைவரை இழந்து வாழ்வாதாரத்துக்காக தினசரி போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள். விதவைகள், அங்கவீனர்கள். இவர்களுடன் முன்னாள் போராளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என ஏராளமான பிரச்சினைகள் மாகாண சபையின் முன்பாக உள்ளன. இவை அனைத்துக்கும் நியாயமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வை மாகாண சபை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன்தான் தமிழர்கள் பாரியளவில் வாக்களித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பாகத்தான் வட மாகாண சபை அமையப்பெற்றிருக்கின்றது. உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள், நீண்டகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலையில் மாகாண சபை உள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பதவியேற்ற உடன் வெளியிட்ட அறிக்கையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையைத்தான் தமது வாக்குகளின் மூலம் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை விட மாகாண சபைத் தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் பங்குகொண்டு வாக்களித்தது இந்த நம்பிக்கையில்தான். தமக்கு உறுதியான - கௌரவமான ஒரு எதிர்காலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். நம்பிமானார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான ஒரு வெற்றியை மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள். மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப்போகின்றது?

இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்காக, அவர்கள் முன்னெடுத்த பிரசாரத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள். கூட்டமைப்பு என்பதற்காகத்தான் அந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. கூட்டமைப்பிலுள்ள தனிப்பட்ட கட்சிகளை அடையாளம்கண்டு அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் பொது வேட்பாளராக களமிறங்கிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் எவ்வாறு அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது? கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட அடையாளங்களை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்திருந்தார்கள். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் கூட, தனிப்பட்ட அடையாளங்களைக் கைவிட்டு கூட்டமைப்பு என்ற ஒரே அடையாளத்துக்குள் செயற்படுவதற்கு அதிலுள்ள கட்சிகள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தும் ஒற்றுமை தேர்தல் முடிவடைந்ததும் சிதைநதுபோய்விடும் நிலைதான் தொடர்கின்றது.

பொது நலன்களை முன்னிலைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட கட்சி நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் வாக்களித்த அனைவருக்கும் எழுகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வாரகாலமாக அமைச்சர் பதவிகள் தொடர்பில் இடம்பெற்ற இழுபறி இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. போரால் சிதைந்போயுள்ள ஒரு பிரதேச மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக கட்சி நலன்களை முன்னிலைப்படுத்துவதாகவே இந்த இழுபறிகள் அமைந்திருந்தன. கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருந்தாலும் அதில் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் தமது நலன்களைப் பாதிப்பதாக மற்றைய கட்சிகள் கருதுகின்றன. தம்மைப் பலவீனப்படுத்திவிட்டு கூட்டமைப்பு என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலையை உருவாக்க அந்த கட்சி முயல்வதாக ஏனைய கட்சிகளின் தலைலவர்கள் குமுறுகின்றார்கள். இதனால் மற்றைய கட்சிகள் ஒருவித தற்காப்பு நிலையிலேயே எப்போதும் உள்ளன. கூட்டமைப்புக்குள் ஒரு முறுகல் நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம். கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக ரீதியாகச் செயற்படுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளாதவரையில் இந்த நிலை தொடரத்தான் போகின்றது. இதற்காகத்தான் வாக்களித்தோமா என மக்கள் பெருமூச்சு விடும் நிலையை கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புவோம்!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்:2013-10-13)