Friday, January 10, 2014

வாசுவின் ஒப்புதல்!

இலங்கையில் இனநெருக்கடி தீவிரமடைவதற்கு தனிச்சிங்களச் சட்டம் எந்தளவுக்குக் காரணமாக இருந்துள்ளது என்பது எவருக்கும் தெரியாததல்ல. இந்த நிலையை மாற்றியமைத்து தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்த்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ன. அதற்கான சட்டமூலங்கள் கூட தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அது குறித்த வாக்குறுதிகள் வெறுமனே எழுத்தில்தான் உள்ளன என்பதைத்தான் அரசகரும மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. மொழி அமுலாக்கல் அமைச்சரே ~தமிழ் மொழி அமுலாக்கலை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கிறேன். ஆனால், எதுவுமே வெற்றிபெறவில்லை. இதனால் மனவேதனையுடன் உள்ளேன்|| என தன்னுடைய ஆதங்கத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருப்பது இந்த நாட்டின் அரச இயந்திரம் எவ்வாறு செயற்படுகின்றது என்ற யதார்த்தத்தை புலப்படுத்தியிருக்கின்றது. சிரேஷ்ட அமைச்சர் ஒருவரே இவ்வாறு மனம் நொந்து கருத்து வெளியிடும் நிலையில், மொழி அமுலாக்கலில் மட்டுமன்றி தமது ஏனைய நியாயமான உரிமைகள் குறித்தும் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும் என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் எழுகின்றது.

ஆனையிறவு ரயில் நிலையத்தின் பெயரை சிங்கள மொழிக்கு மாற்றுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் வாசுதேவ நாயணக்கார இதனைத் தெரிவித்திருக்கின்றார். இது மொழி உரிமையை மீறும் ஒரு செயற்பாடு எனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், இதனை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். அரச கரும மொழி அமுலாக்கலை உறுதிப்படுத்துவதில் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார பற்றுதியுடன் முன்னெடுத்த பல்வேறு வேலைத் திட்டங்களும் வெற்றியளிக்காத நிலைதான் காணப்படுகின்றது. இதனை அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. கொழும்பைப் பொறுத்தவரையில் அரசாங்க இயந்திரம் சிங்கள மயமாக்கலால் ஆட்கொள்ளப்பட்டுள்ள நிலை உள்ளது. இங்கு தன்னுடைய திட்டங்கள் எதனையும் செயற்படுத்த முடியாத மனவேதனையை மட்டும் வெளிப்படுத்தக்கூடிய ஒருவராகவே அமைச்சர் உள்ளார். இதுதான் இலங்கையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை உடைத்துக்கொண்டு செயற்படாhத வரையில் தமிழ் மக்களுடைய நம்பிக்கையை அரசாங்கத்தினால் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

மூன்று விடயங்கள் தொடர்பிலேயே தன்னுடைய இயலாமையை அமைச்சர் வாசுதேவ நாயணக்கார வெளிப்படுத்தியிருக்கின்றார். தமிழ் மொழி அமுலாக்கல், கொழும்பு, வெள்ளவத்தையில் தமிழ்ச் சங்க வீதி பெயரிடல், ஆனையிறவு ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பனவே அவையாகும். இந்த மூன்று விடயங்களிலும் அரசாங்கத்தில் ஒரு முக்கிய சிரேஷ்ட அமைச்சராக இருந்துகொண்டே தன்னுடைய இயலாமையை அல்லது தோல்வியை அமைச்சர் வாசுதேவ நாயணக்கார ஒப்புக்கொண்டிருக்கின்றார்.  இந்நிலையில் இந்த அரசாங்கத்தில் இனியும் இருந்து இந்த இனவாத அரசாங்கத்துக்கு, ஓர் இடதுசாரி நிறத்தை தருவதை தவிர உங்களால் என்ன செய்ய முடிந்துள்ளது என்ற கேள்வியை அமைச்சர் வாசுதேவவிடம் எழுப்பியிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், "இயலாமையை எண்ணி இந்த அரசுக்குள் இருந்தபடி ஒப்பாரி வைத்து வருத்தபடாமல், இந்த இனவாத அரசாங்கத்தில் இருந்து அதற்கு ஓர் இடதுசாரி நிறத்தை தராமல், உங்கள் அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியுமா என நீங்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். அது என்ன அதிர்ச்சி வைத்தியம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" எனக் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்துக்குள் இருக்கின்ற இடதுசாரி அமைச்சர்கள், தமிழ் மொழி அமுலாக்கல் மற்றும் அதிகாரப்பவலாக்கல் போன்ற விடயங்களில் நியாயமான கருத்துக்களைக் கொண்டவர்களாக உள்ள போதிலும், நடைமுறையில் எதனையும் சாதிக்க முடியாதவர்களாகவே உள்ளார்கள். மனோ கணேசனின் கருத்து இதனை வெளிப்படையாக அம்பலமாக்கியிருக்கின்றது. இடதுசாரி அமைச்சர்கள் வெறுமனே அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருப்பதைவிடவும், அரசுக்கு அதிர்சியளிக்கும் வகையில் எதனையாவது செய்தாகவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருப்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். "ஒரு மொழி இரு நாடு" என்று சொன்ன கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வாவின் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வந்தவர்தான் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார. தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இடதுசாரிகள். அப்போதுதான் "ஒரு மொழி இரு நாடு, இரு மொழி ஒரு நாடு" என்ற கருத்தை தீர்க்கதரிசனமாக கொல்வின் வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த இடதுசாரிகள் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தமது கொள்கைகளை பின்னர் சமரசம் செய்துகொண்டார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் அமைச்சர் வாசுவின் நிலைப்பாட்டையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.

மொழி உரிமை மீறல்கள் தொடர்பில் மொழி அமுலாக்கல் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சுக்கு 1,700 க்கும் அதிகமான கருத்துக்கள் இதுவரையில் கிடைத்துள்ளன. பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், அரசாங்க அலுவலகங்கள் என்பனவற்றில் மக்களின் மொழி உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது கருமங்களை தமிழ் மொழியிலேயே செய்ய முடியாத நிலை இன்னும் தொடர்வதற்கு அரசாங்க அதிகாரிகளே காரணம். அமைச்சர் வாசுதேவவிடம் அதிகாரம் இருக்கின்ற போதிலும் அவரது திட்டங்களை அவரால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை தொடர்கின்றது என்றால் அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் அணுகுமுறைதான் அதற்குக் காரணம். இது விடயத்தில் எதுவும் செய்ய முடியாதவராக அமைச்சர் வாசு உள்ளார் என்பதைத்தான் அவரது கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

கொழும்பில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஒரு வீதியின் பெயரை மாற்றுவதற்கு சட்டபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகூட இனவாதிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்க் கிராமங்கள், வீதிகளின் பெயர்கள் இரவோடிரவாக சிங்களத்துக்கு மாற்றப்படுகின்றது. இதனைத் தடுத்துநிறுத்த முடியாதவராகவே அமைச்சர் வாசுதேவ நாயணக்கார உள்ளார். இது குறித்து அமைச்சர் வாசுதேவ நாயக்கார தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. இந்த ஒப்புதல் வாக்குமூலம் இலங்கையில் காணப்படும் யதார்த்த நிலைமையைத் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், நியாயமான ஒரு தீர்வில் தமிழர்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2014-01-05)