Sunday, December 25, 2016

புதிய அரசியலமைப்புத் திட்டத்தில் 'அதிர்ச்சிகள்' காத்திருக்கின்றனவா?

- பாரதி -

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் ஜனவரியில் அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவால் முன்வைக்கப்படவுள்ள நிலைமையில், பிரதான அரசியல் அணிகள் அதனைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு செல்வதற்கான நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. வழிநடத்தல் குழுவில் ஏற்கனவே பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டுவிட்டது. ஊடகங்கள் மூலமாகவும் அவை கசிந்துள்ளன. அதனால், ஜனவரி 9 ஆம் திகதி "பொதி" அவிழ்க்கப்படும் போது அதற்குள் அதிர்ச்சிகள் எதுவும் காத்திருக்கப்போவதில்லை. இப்போது இடம்பெறும் பேச்சுக்களும் அதில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தப்போவதுமில்லை.

வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் என்றுதான் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் நாமும் அதனைக் குறிப்பிட்டிருந்தோம். பாராளுமன்றத்தின் இறுதித் தினமும் அன்றுதான். பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பும் அன்றுதான் இடம்பெற்றது. அன்று காலை ஒரு மணி நேரம் இடம்பெற்ற அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் இதனை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன் மொழிபெயர்ப்பு வேலைகள் கூட பூர்த்தியாகியிருந்ததாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 9 இல் இதனை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இடைக்கால அறிக்கையை வெளியிட்டு ஒரு மாதத்தில் பின்னர் பாராளுமன்றத்தில் அதன் மீதான விவாதத்தை நடத்தும் போது எதிர்ப்புக்கள் அதிகரிக்கலாம் என்பது ஒன்று. டிசெம்பர் 10 இல் இதனை வெளியிட்டிருந்தால், அன்று மாலை நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் பிளவுபட்டிருக்கும். பட்ஜெட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை கூட்டமைப்பை பிளவுபடுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது.

பிரதான இரு கட்சிகளின்
உறுதியான நிலைப்பாடு


அரசியலமைப்புப் பேரவையில் மட்டுமன்றி அதன் வழிநடத்தல் குழுவிலும் கூட்டு எதிரணிதான் (மகிந்த அணி) பலம்வாய்ந்ததாகவும், அழுத்தம் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. குழப்பத்தை ஏற்படுத்துவதும் அதுதான். ஐ.ம.சு.மு.வின் சின்னத்தில் போட்டியிட்ட 52 எம்.பி.க்கள் இந்த அணியில் இருப்பதால் அவர்களுடைய பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது.  அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமது நிலைப்பாட்டை இந்த அணியின் இரு பிரதான தலைவர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தெளிவுபடுத்தினார்கள். ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் என்ற இரண்டையும் தம்மால் விட்டுக்கெடுக்க முடியாது என்பதையும், வடக்கு கிழக்கு இணைப்பை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதையும் அவர் உறுதியாகக்கூறினார்கள்.

இவற்றைவிட பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதை தாம் ஏற்கப்போவதில்லை எனவும், மாகாணங்களில் பாதுகாப்புடன் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது, மத்திய அரசு அதில் தலையிட வேண்டும் என்பதுதான் தமது நிலைப்பாடு எனவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். தமது இந்த நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கெடுப்புக்கும் இடமில்லை எனவும் தெரிவித்த அவர்கள், தமது இந்த நிலைப்பாடு வழிநடத்தல் குழுவிலும் எடுத்துக்கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்கள். மகிந்த அணி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இதற்கு மாறாக - த.தே.கூட்டமைபை திருப்திப்படுத்தக்கூடிய ஒரு நிலைப்பாட்டை மைத்திரி தரப்பு எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.  13 க்குள் தீர்வு என்பதுதான் மைத்திரி தரப்பு நிலைப்பாடாகவுள்ளது.

ஐ.தே.க. எடுத்துள்ள நிலைப்பாடும் இதேபோன்றதாகவே உள்ளது. ஐ.தே.க.வின் உயர் மட்டக் குழுவில் இது தொடர்பாக ஆராயப்பட்டபோது, ஒற்றை ஆட்சி, பௌத்தத்துக்கு முதன்மை இடம் என்பனவற்றுடன், இணைப்பை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் இந்த நிலைப்பாட்டை கட்சித் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரதான இரு அணிகளும் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முரணாக ஒரு தீர்வுத் திட்டத்தை வழிநடத்தல் குழுவால் முன்வைக்க முடியாது. ஆக, கூட்டமைப்பு எதிர்பார்க்கும் ஒரு தீர்வை வழிநடத்தல் குழு முன்வைக்கப்போவதில்லை. ஆனால், வழிநடத்தல் குழு முன்வைக்கும் ஒரு தீர்வை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றதா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய விடயம்.

கூட்டமைப்பின் இறுதிக்கட்ட
முயற்சிகள் பலனைத் தருமா?


அரசியலமைப்பு மாற்றம் மற்றைய அரசியல் கட்சிகளைவிடவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் முக்கியமானது. இனநெருக்கடிக்கான நின்று நிலைக்கக்கூடியதும், உறுதியானதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு எதிர்பார்த்தது. கூட்டமைப்பின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வகையில் கூட்டமைப்பின் எதிர்காலமும் இதில் தங்கியுள்ளது. தலைவர் இரா.சம்பந்தனும் இதனைப் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த வருட இறுதிக்குள் தீர்வு என நம்பிக்கையுடன் உறுதியாகக் கூறிவந்த சம்பந்தனின் "சுருதி" பின்னர் சரியத் தொடங்கியது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிங்களத் தலைமை புதிதாக ஒன்றையும் தரப்போவதில்லை என்பது கூட்டமைப்பின் தலைமைக்கு இப்போது நிச்சயமாகப் புரியத் தொடங்கியிருக்கும்.

"வடக்கு கிழக்கு இணைப்பு (இப்போதைக்கு) சாத்தியமில்லை" என்பதை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். இப்போதைக்கு சாத்தியமில்லாததது பின்னர் எப்போதாவது சாத்தியமாகுமா என்பதற்கு கூட்டமைப்பிடம் பதில் இல்லை. ஒற்றையாட்சியா சமஷ்டியா என 'பிரான்ட்'  என்ன என்பதைப் பார்க்கத் தேவையிலலை. உள்ளேயுள்ளது என்ன என்பதுதான் முக்கியம் என்ற ஒரு கருத்தும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பௌத்தத்துக்கு முதன்மை இடம் என்பதும் மாற்ற முடியாதது. அதாவது இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக்க முடியாது. இந்த நிலையில் ஐ.தே.க.வும், மகிந்த அணியும் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு அண்மித்ததாகத்தான் கூட்டமைப்பின் நிலைப்பாடும் உள்ளது. அதாவது, "தருவதைப் பெற்றுக்கொள்வோம். கிடைக்காதவைகளையிட்டு பின்னர் பார்ப்போம்" என்ற ஒரு நிலைப்பாடும் உள்ளது.

இந்திய அரசு தொடர்ந்தும்
மௌனமாக இருப்பது ஏன்?


ஆனால், ஊருக்குச் செல்லும் போது வாக்களித்த மக்களுக்கு நாம் என்ன சொல்வது என்ற கேள்வியை கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் எழுப்பியிருக்கின்றார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தத்தான் ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ என இவ்விவகாரத்தின் முக்கிய புள்ளிகளை கூட்டமைப்புத் தலைமை சந்தித்திருக்கின்றது. மகிந்தவுடன் பேசிப் பாருங்கள் எனக் கூறி, மைத்திரி தமது பொறுப்பைத் தட்டிக்களித்துவிட்டார். மகிந்த ராஜபக்‌ஷவும் தமது நிலைப்பாடு இதுதான் என்பதைத் தெளிவாகக்கூறிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கவோ ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு தீர்வைக் காணலாம் என்பதையிட்டு கூட்டமைப்பினருக்குப் பாடம் போதித்திருக்கின்றார். அனைவரும் அதனைக் கேட்டு தலையசைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

இந்த மூன்று தரப்புக்களும் தமது நிலையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியல் தீர்வாக வரப்போவது என்ன என்பதில் கேள்வி இருக்க முடியாது. இதனால், அடுத்த நகர்வு என்ன என்பது கூட்டமைப்புக்கு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. ஜனவரி 8 இல் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு முக்கியமான கூட்டம் ஒன்று ஏற்பாடாகியிருக்கின்றது. இதில் விடயங்கள் காராசாரமாக விவாதிக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட்டமைப்புக்குப் பலத்தைக் கொடுக்கும் இந்தியாவும் இப்போது மௌனமாக இருக்கின்றது. சம்பூர் விவகாரத்தில் சம்பந்தன் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்து ஒன்று கசிந்ததையடுத்து அவர் மீது டில்லி சற்று சீற்றமடைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரத் தகவல் ஒன்று உள்ளது. இந்த விவகாரம் மோடி வரை சென்றுள்ளதாம். அரசியலமைப்பு நகர்வுகள் குறித்து கூட்டமைப்பின் தலைமையுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும் டில்லி, இப்போது தமது தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொண்டிருப்பது இதனால்தானாம். அதனால், இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்ற அச்சமும் கொழும்புக்கு இன்று இல்லை. எதனையாவது கொடுத்து மார்ச்சில் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடரைச் சமாளித்தால் போதும் என்பதுதான் கொழும்பில் நிலைப்பாடு!

(ஞாயிறு தினக்குரல் 2016-12-25)

மாகாண அதிகாரங்களும் மத்தியின் திட்டங்களும்

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலம் அரசியலில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சட்டமூலம் ஒன்றை அவசரமாக் கொண்டுவரவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. மாகாண சபைகள் ஒவ்வொன்றாக இதனை நிராகரித்துவருவது அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.

இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னதாக, மாகாணசபைகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதாலேயே, இது மாகாணசபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மாகாண சபைகள் இந்தச் சட்டமூலத்தை நிராகரித்திருக்கின்றன. ஊவா மாகாண சபை, வடமத்திய மாகாண சபை, வடமாகாண சபை என்பனவே இதனை நிராகரித்திருக்கின்றன. இதற்கு மேலாக மாகாண முதலமைச்சர்களும் இதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே முதலமைச்சர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்திருக்கின்றார். மாகாண சபைகள் எதிர்க்கும் நிலையில் இதைனைவிட வேறு தெரிவுகள் எதுவும் பிரதமரிடம் இருக்கப்போவதில்லை.

மாகாண சபைகள் என்பது அரசாங்கத்தினால் விரும்பிக்கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. இலங்கை - இந்திய உடன்படிக்கையின் மூலம் திணிக்கப்பட்ட ஒன்றுதான் அது. அதற்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் அன்றுமுதல் மத்திய அரசும், சிங்களத் தேசியவாதிகளும் கவனமாகவே இருந்தார்கள். ஆனால், இந்த விடயத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை இப்போது அவதானிக்க முடிகின்றது. 1987 இல் ஐ.தே.க. அரசாங்கத்தினால் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்ட போது, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி மாகாண சபைகளுக்கான தேர்தலையும் பகிஷ்கரித்தது. ஆனால், இன்று வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏழு மாகாண சபைளும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஐ.ம.சு.மு.வின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதுமட்டுமன்றி, மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எதிராக அவை ஓங்கிக் குரல் கொடுப்பதையும் காணமுடிகின்றது.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண மக்கள் அதிகளவுக்கு அனுபவிக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதேவேளையில் அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க அந்த மாகாண சபைகள் கூட தயாராகவில்லை. மூன்று மாகாண சபைகள் சட்டமூலத்தை நிராகரித்திருக்கும் நிலையில், ஏனைய மாகாண சபைகளில் அடுத்துவரும் வாரங்களில் இது குறித்த விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருக்கின்றது. முதலமைச்சர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏனைய மாகாண சபைகளும் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த மாகாண சபைகள் ஐ.ம.சு.மு.வின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்ற ஒரு அரசியல் காரணமும் இதற்கு இருக்கின்றது. எது எப்படியிருந்தாலும் அதிகாரப் பகிர்வை அர்தபூர்வமாக்குவதற்கு இவ்வாறான சட்டமூலங்கள் தடையாகவுள்ளன என்பதை மாகாண சபைகள் ஏற்றுக்கொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு முன்னேற்றம்தான்.

"மாகாணசபையின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் அமைந்திருக்கின்றது" என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபை அமர்வில் இது குறித்த விவாதம் இடம்பெற்ற போது குறிப்பிட்டார். மத்திய அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பிடுங்கும் செயலை மேற்கொள்வதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். மாகாண சபைகளின்  அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு  நடவடிக்கைக்கும் தாம்  ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். மாகாண சபைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் அவற்றுக்கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்   போதே  அவர் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கம் மாகாண சபைகளை செயற்றிறன் மிக்கதாய் மாற்றும் சட்ட மூலங்களை கொண்டுவர வேண்டும்  என்றும் மாகாணங்களில் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி திட்டங்கள் மாகாண சபைகளின்   பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அதில்  மாகாண சபைகள் தொடர்பான விடயங்களுக்கு மாகாணங்களின் ஆலோசனைகளை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது இணக்கம் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், மாகாணங்களுக்கு காணி, நிதி போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வைத் துரிதப்படுத்துவதன் மூலமாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சித்திருப்பது அதன் நோக்கங்களில் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் விடயங்களில் அதிகாரப் பரவலாக்கல் பிரதானமானதாகும். அதற்கான முயற்சிகளை அரசியலமைப்புப் பேரவை ஒரு புறத்தில் முன்னெடுத்துவரும் நிலையில் இது போன்ற சட்டமூலங்களைக் கொண்டுவர முயற்சிப்பது ஒரு கையால் கொடுத்து மறுகையால் எடுத்துக்கொள்வதைப் போன்றதாகவே இருக்க முடியும். மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளை மாகாண சபைகளின் ஊடகச் செய்வதே அதிகாரப் பரவலாக்கலையும் அர்த்தமுள்ளதாக்கும். நிர்வாகத்தை கீழ் மட்டத்துக்குக் கொண்டு செல்லவும் இதுவே வழிவகுக்கும். இவ்விடயத்தில் மாகாண முதலமைச்சர்களின் ஆலோசனையுடன் அரசாங்கம் செயற்படுவது தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும்.

(ஞாயிறு தினக்குரல்)

Sunday, December 18, 2016

18 அகதிகள்

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளில் 18 பேர் வியாழக்கிழமை விமானம் மூலமாக இலங்கை திரும்பியிருக்கின்றார்கள். இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற 1990 களின் ஆரம்பத்தில் தமிழகத்துக்கு படகுகள் மூலமாகச் சென்று தஞ்சமடைந்தவர்களே இவ்வாறு திரும்பியிருக்கின்றார்கள். இவர்கள் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலுள்ள சுமார் 100 முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஈழத் தமிழ அகதிகளும், தனிப்பட்ட வீடுகளில் 40 ஆயிரம் வரையிலானவர்களும் இருக்கும் நிலையில் வெறுமனே '18' அகதிகள் நாடு திரும்புகின்றார்கள் என்பதிலுள்ள "செய்தி" முக்கியமானது. அதுவும் போர் முடிவுக்கு வந்து ஏழரை ஆண்டுகள் சென்றுள்ள நிலையில் இவ்வாறான நிலை காணப்படுவது, பெரும்பாலான அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என்பதைத்தான் உணர்த்துகின்றது. இந்த நிலைமை ஏன் என்பதையிட்டு ஆராயவேண்டிய கடப்பாடு சமூகநலன்கருதிச் சிந்திக்கும் அனைவருக்கும் உள்ளது.

தமிழகத்தில் கால் நூற்றாண்டாக வாழும் ஈழத் தமிழர்களை சட்டவிரோதக் குடிகளாகத்தான் இந்திய அரசு பார்க்கிறது. அதனால்தான் நெருக்கடிக்குள் அகதிகளை வாழ நிர்ப்பந்திக்கிறது. அகதி என்ற சொல்பதம் நடைமுறை நிர்வாகத்துக்காகவும் உலகத்துக்குக் காட்ட மட்டுமே பயன்படுகிறது. அகதிகள் என்று அழைக்கப்படுபவர்களை இந்திய அரசு நடத்தும்முறை சர்வதேச நியமங்களை மீறுவதாகவும், அடிப்படை மனித உரிமை மீறும் வகையில் இருப்பதாக நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றது. தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் தஞ்சமடைந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு உரிய முறையில் கவனிக்கப்பட்டார்கள். பராமரிக்கப்பட்டார்கள். ஆனால், பின்னர் அந்த நிலைமை மாற்றமடைந்தது. ஈழத் தமிழ் அகதிகள் "வேண்டப்படாதவர்களாகவே" பார்க்கப்பட்டார்கள். ராஜீவ் காந்தி தமிழகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டது உட்பட வேறு சில சம்பவங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், தமிழகத்திலேயே இருப்பது என இந்த அகதிகள் முடிவெடுத்திருப்பதற்குக் காரணங்கள் உள்ளன.

1983 முதல் தமிழகத்துக்கு நான்கு கட்டங்களில் 2,80,000 ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றிருக்கின்றார்கள். பல கட்டங்களாக நாடு திரும்பியவர்கள் போக, இன்று 25 மாவட்டங்களில், 107 முகாம்களில் 60 ஆயிரத்துச் சொச்சம் அகதிகள் வாழ்கிறார்கள். இதனைவிட வாடகை வீடுகள் அல்லது சொந்த வீடுகளில் 40 ஆயிரம் வரையிலான ஈழத் தமிழர்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் வருகை ஆரம்பித்த 33 ஆண்டுகளில் போர் குறித்து தமிழகத்தில் பேசப்பட்ட அளவு, போராட்டங்கள் நடந்த அளவு அகதிகள் குறித்து கொஞ்சம்கூட பேசப்படவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக போர் முடிந்தால் அகதிகள் பிரச்னை தானாகத் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதைச் சொல்லலாம். ஆனால், இன்று போர் முடிவுக்கு வந்து ஏழரை வருடங்கள் சென்றுவிட்டது. தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் பேரில் 18 பேர், 20 பேர் திரும்பிவருகின்றார்கள் என்ற செய்திகள் மட்டும்தான் மாதத்துக்கு ஒரு தடவை வருகின்றது. பாரியளவில் அகதிகள் திரும்பிவரும் நிலை காணப்படாமைக்கு காரணம் என்ன?

இந்தியாவில் தஞ்சமடையும் திபேத் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள் எதுவும் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. அதனைவிட ஈழத் தமிழ் அகதிகளுக்குக் கெடுபிடிகளும் அதிகம். அதனால்தான் அவர்கள் 'வேண்டப்படாதவர்களாக' பார்க்கப்படுகின்றார்கள் எனக் குறிப்பிட்டோம். ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது முன்வைக்கப்பட்டாலும், அதனை ஒருபோதும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும் ஒரு விடயத்தில் மட்டும் இந்தியா உறுதியாகவுள்ளது. தஞ்சமடைந்துள்ள அகதிகள் எவரையும் பலாத்காரமாகத் திருப்பி அனுப்புவதில்லை என்பதுதான் அது. அதேவேளையில் திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகாரியலத்தின் மூலமாக அவர்களுக்கு விமானப் பயணச் சீட்டு உட்பட பல வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் துதரகமும் தாயகம் திரும்ப விரும்புபவர்களின் பயண ஒழுங்குகளை இலகுவாக்குவதற்கான பல ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.

இரு தசாப்தங்களுக்கு மேலாக வசதிகளற்ற அகதி முகாம்களில் இருக்கும் கொடுமைக்கு மேலாக, கெடுபிடிகளுக்கு மத்தியில் அந்திய மண்ணில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள், இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தாயகம் திரும்புவதில் அக்கறையற்றவர்களாக இருப்பது ஏன் என்பது ஆராயப்பட வேண்டும். அகதிகளாகவுள்ளவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் கனவுடன் அல்லது திட்டங்களுடன் காத்திருக்கின்றார்கள். வேறு சிலர் ஐரோப்பாவிலுள்ள தமது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மேலும் சிலர் தமது பிள்ளைகளைக் தமிழகக் கல்லுரிகளில் சேர்த்திருப்பதால் அதனைக் குழப்ப விரும்பாமல் இருக்கின்றார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பொறுத்தவரையில் அன்றாட சீவியத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியவர்களாகவே உள்ளார்கள். அதாவது, நிரந்தர வருமானத்தைத் தரக்கூடிய வேலையில் இருப்பவர்கள் மிகவும் குறைவு. இவ்வாறானவர்களில் பெரும்பாலானவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்த அவல-  அகதி வாழ்வு எனச் சலித்துப்போனவர்களாக இவர்கள் இருக்கின்றர்கள்.

தாயகம் திரும்புவதற்கான ஊக்குவிப்புக்கள் இவ்வாறானவர்களில் சிலரைத்தான் கவர்கின்றது. இருந்த போதிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தாயகம் திரும்புவதிலும் தயக்கத்தையே காட்டுகின்றார்கள். தாயகம் திரும்பிய பின்னர் தமது வாழ்க்கை எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இவர்களுடைய தயக்கத்துக்கு அல்லது அச்சத்துக்குக் காரணம். வலிகாமம் வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை இராணுவம் முற்றாக விடுவிக்கவில்லை. வீடமைப்புத் திட்டங்கள் இழுபறியிலேயே உள்ளன. இதனைவிட வாழ்வாதாரத்துக்கான தொழில்வாய்ப்புக்கான உத்தரவாதமற்ற நிலை. பிள்ளைகள் எவ்வாறு கல்வியைத் தொடர்வது என்ற கேள்வி. வலி வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் பலர் யாழ்ப்பாணத்தில் இன்னும் முகாம்களில்தான் உள்ளார்கள். இந்த நிலையில் எந்த நம்பிக்கையுடன் தாம் தாயகம் திரும்புவது என்பதுதான் இவர்கள் மனதை அரிக்கும் கேள்வி. அதாவது, தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பக்கூடிய கள நிலை இன்னும் முற்றாக ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் இந்த நிலைக்கு அடிப்படை. 

ஒரு லட்சம் அகதிகளைப் பராமரிப்பது என்பது இந்தியாவுக்குப் பெரிய விடயமல்ல. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு லட்சம் என்பது பெரிய விடயம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குறைவடைந்து செல்லும் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்குக்கூட இது அவசியம். அதனால், இலங்கை அரசாங்கத்தை விட இதில் அதிகளவு அக்கறை எடுக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளே. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் இதற்காகச் செய்வது என்ன? ஏழரை வருடமாக அரசியல் செய்யும் கூட்டமைப்பினர் தமக்கு இருக்கக்கூடிய சமூகப் பொறுப்பை மறந்து சொந்த அரசியல் நோக்கங்களுடன் மட்டும்தான் செயற்படுகின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். தமிழகத்திலுள்ள அகதிகளைத் தாயகம் கொண்டுவர வேண்டும், அவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்பதில் திட்டமிட்ட செயற்பாடு எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை. அதேவேளையில் மீள்குடியேற்ற அமைச்சும் இந்தவிடயத்தில் தோல்வியடைந்திருப்பதையே காணமுடிகின்றது. ஒரு லட்சம் அகதிகள் உள்ள இடத்திலிருந்து 18 பேர் தாயகம் திரும்பினார்கள் என்ற செய்தி வெளிவருவதே மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்களிலுள்ள தோல்வியைத்தான் காட்டுகின்றது.

(ஞாயிறு தினக்குரல் 2016/12/18)