Tuesday, November 5, 2019

தமிழரை கவருமா விஞ்ஞானங்கள்?

னாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டிருக்கின்றது. இனவாதக் கட்சிகளோ, பிரதான போட்டியாளரான கோத்தாபய ராஜபக்ஷ தரப்பினரோ சிங்கள மக்களைக் குழப்பிவிட முடியாதவாறு, சிறுபான்மையினருடைய நம்பிக்கையைப் பெறத் தக்கதாக சில விடயங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கின்றார். கோத்தபயவின் விஞ்ஞாபனத்துடன் ஒப்பிடும் போது, முன்னேற்றகரமான சில அம்சங்கள் இதில் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஐந்து தமிழ்க் கட்சிகளால் அண்மையில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளிலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

தமது எதிர்காலத்துக்கான திட்டங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த விஞ்ஞானங்களை வேட்பாளர்கள் வெளியிடுவது என்பது சம்பிரதாயமாக மட்டுமே உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைப் போல, இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களும் பின்னர் நிறைவேற்றப்படுவதில்லை. அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கான காரணங்கள் அடுத்த தேர்தல் காலத்தில் சொல்லப்படும். சந்தர்ப்பங்களைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியலில் இவை சகஜம். ஆனால், வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் என்னத்தைச் செய்வார்கள் என்பதற்கான வழிவரைபடத்தை இந்த விஞாபனங்கள் ஓரளவுக்குக் காட்டுவதாக அமையும் என்பதால்தான் அவை கவனிப்புக்குள்ளாகின்றன, விமர்சனத்துக்குள்ளாகின்றன.

கோதாபய ராஜபக்‌ஷவின் விஞ்ஞானம் தொடர்பாக கடந்த வாரத்தில் பார்த்திருந்தோம். நாட்டின் பிரதான பிரச்சினையாகவுள்ள இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவுமே பேசாத ஒரு விஞ்ஞானமாக அது அமைந்திருந்தது. ஆனால், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பதை கோத்தாபய தெரிவித்திருக்கின்றார். ஒற்றையாட்சி என்பதும், பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதும் அவரது விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். ஆக, அவர் ஜனாதிபதியானால் கொண்டுவரப்போகும் அரசியலமைப்பும் இனநெருக்கடிக்கு ஆக்கபூர்வமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதாக அமைந்திருக்காது.

இப்போது சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், "தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் அதற்கான அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து தாமதமின்றி முன்னெடுக்கப்படும்" என்ற வகையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதைப் போல, "அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் விட்ட இடத்திலிருந்து தொடரும்" என்பதைத்தான் சஜித் பிரேமதாச தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் என்றே கருத வேண்டும்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றி மூன்று வருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள், மற்றும் அது தொடர்பில் வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் தமிழ் மக்கள் சார்பில் பல விமர்சனங்கள் உள்ளன. இருந்தாலும், அதனைன அப்படியே கைவிட்டுவிட்டு புதிய முயற்சி ஒன்றை ஆரம்பிக்காமல் - அந்த இடத்திலிருந்து தொடர்வது காலதாமதத்தை ஏற்படுத்தாமல் தீர்வொன்றைக் காண்பதற்கு உதவலாம். அதனைவிட இரண்டாவது சபை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாதகமாகப் பரிசீலிக்கக்கூடிய விடயங்கள்தான்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கத்தைவிட அதிகளவு அக்கறையாக கடந்த நான்கு வருடங்களில் செயற்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அந்த முயற்சிகளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதென்பது கூட்டமைப்பைத் திருப்திப்படுத்த்தும் ஒரு உபாயமாக இருக்கலாம். சிங்களக் கடும்போக்காளர்களை சீற்றத்துக்குள்ளாககாமல், கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் சஜத் பிரேமதாசவின் விஞ்ஞானம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் வெளியிட்டுள்ள விஞ்ஞானங்கள் பெருமளவுக்கு சிங்கள வாக்காளர்களை இலக்கு வைத்தவையாகத்தான் இருக்கின்றன. இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறுபான்மையினருடைய வாக்குகளும் அவசியம் என்பதை இருவரும் உணர்கின்றார்கள். அந்த வாக்குகளை இலக்கு வைத்து வாக்குறுதிகள் எதனையும் வெளிப்படையாகச் சொல்வதற்கும் அவர்கள் தயங்குகின்றார்கள். சஜித் பிரேமதாச தன்னுடைய விஞ்ஞாபனத்திலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் தமிழ் மக்களைக் கவர்வதற்காக சில விடயங்களைச் சொல்வதற்கு முற்படுகின்ற போதிலும் மிகவும் நிதானமாகத்தான் அவை குறித்து பேசுகின்றார். எதிர்த் தரப்பின் விமர்சனங்களுக்குள்ளாகக் கூடாது என்பதால் கத்திமேல் நடப்பது போலவே நடக்கின்றார்.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் வெறுமனே தேர்தல் விஞ்ஞாபனங்களை மட்டும் கவனத்திற்கொண்டு தீர்மானித்துவிட முடியாது என்பதே கடந்தகால அனுபவங்கள் மூலம் பெற்றுக்கொண்ட உண்மையாகும். யதார்த்தமும் அதுதான். கல்முனையை தரமுயர்துவதாக கூட்டமைப்பின் தலைமைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக பல போராட்டங்களும், பல சுற்றுப் பேச்சுக்களும் நடைபெற்றது என்பது வெறும் பத்திரிகைச் செய்திகளாகிப்போய்விட்டது. நிர்வாக ரீதியாகத் தீர்க்கப்படக்கூடிய இவ்வாறான ஒரு சிறிய விஷயத்தைக் கூட அரசாங்கத்தினால் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் பெரிய விஷயங்களை பதவிக்கு வரப்போகும் புதிய ஜனாதிபதியால் எப்படிச் செய்துமுடிக்க முடியும்?

இதனைவிட கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின்படி வரப்போகும் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கும். நிறைவேற்று அதிகாரங்களில் பெரும்பாலானவை பாராளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஞ்ஞானங்களில் சொன்ன அனைத்தையும் செய்வதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கப்போவதில்லை. குறிப்பாக அரசியலமைப்புச் சீர்திருத்தம் போன்றன பாராளுமன்றத்தினாலேயே கையாளப்படும். அதனை ஜனாதிபதியால் வழிநடத்த முடியாதிருக்கும். ஆக, மக்களைக் கவரும் வகையில் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டாலும், அடுத்துவரப்போகும் பாராளுமன்றமே தீர்க்கமானதாக இருக்கும்.

(ஞாயிறு தினக்குரல்: 2010-11-03)

Friday, November 1, 2019

தீர்வைச் சொல்லாத விஞ்ஞாபனங்கள்

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. பொதுவாக தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கும் நடைமுறை அரசியலுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. ஆனாலும், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் தமது கொள்கை என்ன? அணுகுமுறை என்ன? என்பதை வேட்பாளர்கள் இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள். விஞ்ஞாபனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது அதனால்தான்.

அந்த எதிர்பார்ப்புடன் பார்த்தபோது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினை குறித்து கோத்தபாயவின் விஞ்ஞாபனத்தில் எதுவும் இல்லை. முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொடாத ஒரு விஞ்ஞாபனமாக வரலாற்றில் இதனைப் பார்க்க முடியும். அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வைத் தராமல், பிரச்சினையின் விளைவுகள் சிலவற்றுக்கு மட்டும் அந்த விஞ்ஞாபனத்தில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அதுவும் முழுமையான ஒரு தீர்வாக இல்லை.

தமிழ் மக்களுடைய அரசியல், அன்றாடப் பிரச்சினைகளை உள்ளடக்கிய 13 கோரிக்கைகள் கொண்ட ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு, ஐந்து தமிழ்க் கட்சிகள் அதில் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஆவணத்தைப் பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்து பேசுவது எனவும், அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்பதுதான் ஐந்து கட்சிகளின் தீர்மானம். இந்த ஆவணத்தைப் பார்ப்பதற்கு முன்னதாகவே அதனைத் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கோத்தாபய பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அது குறித்துப் பேசுவதற்குக் கூட தயாரில்லை என்பதுதான் அவரது நிலைப்பாடு.

கோத்தாபய இவ்வாறு அறிவித்துவிட்ட நிலையில், அவருடன் கடுமையான போட்டியில் இறங்கியுள்ள சஜித் பிரேமதாசவும், ”நிபந்தனைகள் எதனையும் ஏற்கப்போவதில்லை” என தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஐந்து கட்சிகளுக்கான கதவை கோத்தாபய மூடிவிட்ட நிலையில், தான் கதவைத் திறந்துவைத்திருப்பது சிங்கள கடும் போக்காளர்களின் வாக்குகளைப் பாதிக்கும் என்பது சஜித்தின் மதிப்பீடு. அதற்கேற்றவாறான பிரசாரங்களை முன்னெடுக்கத் தயாரான நிலையில்தான் சிங்கள ஊடகங்கள் சில உள்ளன என்பதும் உண்மை. 5 கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கை தொடர்பில் பேசுவதற்கே பிரதான வேட்பாளர்கள் தயாராகவில்லை என்பது இலங்கை அரசியலின் மோசமான ஒரு பக்கத்தைக் காட்டுகின்றது.

மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேசுவதற்கான நேர ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதாகச் சொல்லியிருந்த சுமந்திரனும் அதனைச் செய்யவில்லை. குறிப்பிட்ட வேட்பாளர்கள் இந்தச் சந்திப்பை விரும்பமாட்டார்கள் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். 13 கோரிக்கைகளுடன் வரப்போகும் 5 கட்சித் தலைவர்களுக்கும் சொல்வதற்கு வேட்பாளர்களிடம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில், ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? தமிழ் மக்களுக்கு என்னத்தைச் சொல்லப்போகின்றார்கள்? என்பதுதான் இப்போது எழும் கேள்விகள்.

பிரதான வேட்பாளர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், தமது நிலைப்பாட்டை எப்படி அறிவிப்பது என்பது தமிழ்க் கட்சிகளின் தற்போதைய பிரச்சினை. இரு தரப்பினரதும் விஞ்ஞாபனங்கள் வெளிவரட்டும் அதனை அடிப்படையாகக்கொண்டு எமது முடிவை எடுப்போம் என்பதுதான் தமிழரசுக் கட்சியின் முடிவு. இருவருமே பேசத் தயாராயில்லாத நிலையில், முடிவெடுப்பதற்கு 5 கட்சித் தலைவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அதனால்தான் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனமும் வெளிவந்த பின்னர் 30 ஆம் திகதி கூடி முடிவெடுப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.

ஆனால், 31 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதால், அதற்கு முன்னரே முடிவெடுக்க வேண்டும். எமது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி என்பன உறுதியாக இருந்தன. அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் 5 கட்சித் தலைவர்களும் நாளை கூடுகின்றார்கள். இதில் உறுதியான முடிவு ஒன்று வருமா என்பது தெரியவில்லை. ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் 30 ஆம் திகதிதான் வெளிவருகின்றது. அதுவரையில் தீர்மானம் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில், தமிழ்க் கட்சிகளில் ஒன்று இருப்பதாகத் தெரிகின்றது.

இனநெருக்கடி குறித்து கோத்தாபய தனது விஞ்ஞாபனத்தில் எதனையும் சொல்வதைத் தவிர்த்துக்கொண்டிருப்பதால், சஜித் பிரேமதாச துணிச்சலுடன் அது குறித்து தன்னுடைய விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகள் தொடர்பில் சஜித் எடுத்த நிலைப்பாடு உணர்த்துவது அதனைத்தான். இனநெருக்கடி குறித்து தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை தான் சொல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை சஜித்துக்கு இருக்கலாம். ஏனெனில் யார் வரவேண்டும் என்பதில் மட்டுமன்றி யார் வரக்கூடாது என்பதிலும் தமிழர்கள் அவதானமாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களிலும் அவ்வாறே இருந்துள்ளார்கள்.

ஆனால், நாட்டின் பிரதான பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகவும், உறுதியாகவும் சொல்ல முடியாத அல்லது சொல்லத் துணிவில்லாத வேட்பாளர்களில் ஒருவரைத்தான் நாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போகின்றோம். இது கொடுமையானதுதான். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் வரும். பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என ஜனநாயகத் திருவிழாக்கள் வந்துகொண்டேயிருக்கும். தேர்தலின்போது தீர்வைப் பகிரங்கமாகச் சொல்லி அதற்காக வாக்கு கேட்கும் தலைவர்கள் உருவாகும் வரை இந்தப் பிரச்சினை தொடர் கதையாகத்தான் இருக்கும்.

தினக்குரல்: 2019-10-27