Tuesday, December 3, 2013

தென்னாபிரிக்க 'மத்தியஸ்த்தம்'?

பொதுநலவாய மாநாடு முடிவடைந்திருக்கும் நிலையில் தென்னாபிரிக்க மத்தியஸ்த்தம் தொடர்பான தகவல்கள் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளன. இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து போர் முடிவுக்கு வந்த பின்னர் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத் தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் தென்னாபிரிக்கா சென்று அந்த நாட்டின் அனுபவங்களைப் ~படித்து| வந்ததுடன், அது தொடர்பான ஆரவாரங்கள் காணாமல் போயிருந்தன. இப்போது பொதுநலவாய மாநாட்டுக்காக வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் சுமா அரசாங்கத் தரப்புடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் நிலையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் அல்லது அநுசரணை குறித்த எதிர்பார்ப்புக்கள் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவென இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு வருடகாலமாக நடைபெற்றுள்ள பேச்சுக்கள் முட்டுக்கட்டை நிலையை அடைந்து இரண்டு வருடங்களாகப்போகின்றது. இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எதுவும் சாத்தியமாகவில்லை. இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு வருடமாக பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற ஒன்றை உருவாக்கிய அரசாங்கம், எந்த ஒரு தீர்வும் அதன் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவித்ததையடுத்தே பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித நிலையை அடைந்தன. சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்களின் அழுத்தங்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்வதற்கும் அரசாங்கம் தயாராகவில்லை. அதற்கான துணிச்சல் அரசிடம் இல்லை. அதேவேளையில், தீர்வு முயற்சியில் எந்தவொரு வெளிநாட்டு சம்மதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் உறுதியாகவுள்ள அரசாங்கம், இப்போது தென்னாபிரிக்க அனுசரணையை ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.

பொதுநலவாய மாநாட்டை தமது பிரச்சினைகளுக்கான தீர்வாக அரசாங்கம் எதிர்பார்த்த போதிலும், இது பிரச்சினைகளை மேலும் அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருக்கிறார். இங்கு இடம்பெற்றது பொதுநலவாய மாநாடு என்பதைவிட, இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து ஆராயும் ஒரு மாநாடு போன்றே தோற்றமளித்தது. சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் பிரதிபலிப்புதான் இது. பிரித்தானியப் பிரதமர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்த மற்றொரு கருத்து இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி எந்தளவுக்கு மோசமானது என்பதை வெளிப்படுத்தியது. போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து மாhச் மாதத்துக்குள் நம்பகரமான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் தவிர்க்க முடியாததது என கெமருன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இது தொடர்பான தீர்மானம் ஒன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மார்ச் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் நெருக்கடியை வெளிப்படுத்தியது.

இலங்கை குறித்த தீர்மானம் ஒன்று ஜெனிவாவில் கொண்டுவரப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு தீர்மானங்கள் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்த போதிலும், தீர்மானத்தின் காரத்தை குறைத்த பின்னரே ஆதரித்து வாக்களித்தது. ஆனால், மார்ச் மாதத்தில் இந்தியாவினால் அவ்வாறு செய்யக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. காரணம்: ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் இலங்கை விடயத்தில் மென்போக்கைக் கையாள்வது காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்தானதாகிவிடலாம். இந்த நிலையில் மார்ச் மாதம் ஆபத்தான ஒரு கண்டமாவே இலங்கைக்கு இருக்கப்போகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் இந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு இலங்கை முற்படலாம். இதில், ஆபிரிக்காவிலுள்ள சிறிய நாடுகள் பலவற்றை இலங்கை குறிவைக்கின்றது.

இந்தப் பின்னணியில்தான் தென்னாபிரிக்கவின் மத்தியஸ்தம் தொடர்பிலான செய்திகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டுத் தலையீடு எதனையும் ஏற்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்த இலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தென்னாபிரிக்க மத்தியஸ்த்தம் குறித்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜக்கொப் சுமாவுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவும் நீண்டகால உள்நாட்டுப் போர் ஒன்றைச் சந்தித்த நாடு. கறுப்பின மக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டதால் இந்தப் போர் ஏற்பட்டது. இப்போது அங்கு கறுப்பினத்தவரின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சினையில் முடிவில் உண்மைகளைக் கண்டறிவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தென்னாபிரிக்காவில் சமாதான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதுதான் தென்னாபிரிக்க அனுபவம். இலங்கையில் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவும் இதனைப் போன்ற ஒன்று என்ற கருத்தே இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இப்போது தென்னாபிரிக்க அனுபவம் குறித்து அதிகம் பேசப்பட்hலும் தென்னாபிரிக்கப் பிரச்சினையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் ஒப்பிடக்கூடியவையல்ல. இலங்கையில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்கள் தனிநாடு கோரி போராடினார்கள். தென்னாபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் தனிநாடு கோரிப் போராடியவர்களல்ல. ஆக, தென்னாபிரிக்கப் பிரச்சினையும் இலங்கைப் பிரச்சினையும் வௌ;வேறான பரிமாணங்களைக் கொண்டவை. இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தென்னாபிரிக்க அனுபவம் எந்தளவுக்குப் பொருத்தமானது என்பது கேள்விக்குறிதான். அதேவேளையில், தென்னாபிரிக்கா ஜனாதிபதி மனித உரிமை பிரச்சினைகள் குறித்து கருத்து எதனையும் வெளியிடாமல், இலங்கை அரசுக்கு சாதகமான முறையில் செயற்பட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்படுகின்றது. இந்த நிலையில் தென்னாபிரிக்க மத்தியஸ்தம் என்பது மார்ச்சில் இலங்கை எதிர்கொண்டுள்ள அழுத்தங்களைக் குறைக்க உதவுமே தவிர, நிரந்தரமான ஒரு தீர்வுக்கு வழிகோலப்போவதில்லை என்பதே உண்மை!

ஞாயிறு தினக்குரல்: 2013-11-24 ஆசிரியர் தலையங்கம்