Monday, June 27, 2016

ஜெனீவாவும் தமிழர்களும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் மக்களுடைய கவனம் ஜெனீவாவை நோக்கிக் குவிந்துள்ளது. பாரிய அழிவுகளுடன் 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், தமக்கான நீதியும், நிரந்தரமான தீர்வும் ஜெனீவாவிலிருந்தே கிடைக்கும் என தமிழர்கள் நம்பினார்கள். அல்லது நம்பவைக்கப்பட்டார்கள். அதனால்தான்   ஜெனீவா கூட்டத் தொடர்கள் அதிகளவுக்கு கவனத்துக்குள்ளாகியிருந்தது. இருந்தபோதிலும், இம்முறை ஜெனீவாவில் நம்பிக்கை வைக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதை தெளிவாக அதானிக்க முடிகின்றது. தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான நீதியையோ, இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வையோ ஜெனீவா பெற்றுத்தரும் என நம்பும் நிலையில் இன்று தமிழ் மக்கள் இல்லை. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

போருக்குப் பின்னர் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களில் மூன்று விடயங்கள் கவனத்தைப் பெற்றிருந்தன. ஒன்று - போர்க் குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது. இரண்டு - நல்லிணக்க முயற்சிகள். மூன்று - அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் இனநெருக்கடிக்குத் தீர்வு. இந்த மூன்று விடயங்களைப் பொறுத்தவரையிலும், நம்பிக்கையளிக்கக்கூடிய எதுவுமே கடந்த ஏழு வருடகாலத்தில் இடம்பெறவில்லை. ஆட்சி மாற்றத்தின் மூலம் பல விடயங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதன்பின்னரும் நம்பிக்கையளிக்கும் நகர்வுகளைக் காணமுடியவில்லை. புதிய அரசாங்கத்தைப் பாதூப்பதற்காக செயற்படும் சர்வதேச சமூகம், தமது நலன்களுக்காகக் குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துபோயுள்ளார்கள். ஜெனீவாவில் நம்பிக்கை வைக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லாததற்கும் அதுதான் காரணம்.

மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியலிருந்த காலத்தில் ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள், இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கடந்த வருடத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதன்மூலம் அழுத்தங்களைத் தவிர்த்துக்கொள்ளும் உபாயத்தை புதிய அரசாங்கம் கையாண்டது. ஆனால், தீர்மானத்தில் சொல்லப்பட்ட எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்­பாக காணி விடு­விப்பு, தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை போன்ற அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றக்­கூ­டிய விட­யங்­கள்­ கூட இது­வரை இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்டு வரு­கின்­றது. காண­மால்­போ­னர்­வர்கள் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. எனினும் அது தொடர்பில் முழு­மை­யான முன்­னேற்­ற­ம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர் பில் அர­சாங்கம் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தாலும்கூட, இது தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்கும் என எதிர்பார்க்க முடியாத நிலைதான் உள்ளது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒரு தீர்வை இலக்காகக்கொண்டு இது செயற்படுகின்றதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எதுவும் கருத்திற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு என்பதைவிட, சிங்களக் கடும்போக்காளர்களை சீற்றமடையச் செய்யாத ஒரு தீர்வு என்பதுதான் அரச தரப்பின் நோக்கமாக உள்ளது. ஏற்கனவே உள்ள 13 ஆவ து திருத்தத்துக்கு உட்பட்டதாக, இணைப்போ பொலிஸ் அதிகாரங்களோ இல்லாத ஒரு தீர்வை வழங்கி நிலைமைகளைச் சமாளித்துவிடுவதுதான் அரசின் உபாயமாக உள்ளது எனக் கருதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

இவை அனைத்தையும்விட முக்கியமாக, பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் தடுமாறத் தொடங்கியிருக்கின்றது. ஜெனீவா தீர்மானம் கலப்பு நீதிமன்றத்தின் மூலமான விசாரணையையே பிரேரித்திருந்தது. அத்துடன், சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்டுதான் இலங்கை அதற்கு இணை அனுவசரணை வழங்கியிருந்தது. அதனை நியாயப்படுத்தும் வகையில், ஜனாதிபதியும் பரிரதமரும் கருத்துக்களை வெளியிட்டுவ்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடை பெற்ற ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான சர்வ கட்சிகள் கூட்டத்தொடரிலும் இவ்விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. இப்போது அரசாங்கத்தின் நிலைப்பாடு தலைகீழாகிவிட்டது. சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. இந்த நிலைப்பாட்டுடன்தான் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா செல்லப்போகின்றார்.

இதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்த் தரப்பினர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது. தமிழ் டயஸ்போறா ஒரு புறமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மறுபுறமும், ஏனைய தமிழ்க் கட்சிகள் மூன்றாவது இடத்திலிருந்துகொண்டும் ஜெனீவாவில் காய்நகர்த்துகின்றன. சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் அரச தரப்புக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்படையானது. இரண்டாவதாக பிரதான தமிழ்க் கட்சி என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் போச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இவை தொடர்பில் ஏற்கனவே போச்சுக்களை நடத்தியிருக்கின்றார். சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஜெனீவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தீர்மானம் எடுக்கவேண்டிய பொறுப்பு இப்போது மனித உரிமைகள் பேரவையிடம் உள்ளது. இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை தொடர்ந்தும் கொடுப்பதோ, உள்நாட்டு விசாரணைக்கு அனுமதி வழங்குவதோ தமிழர் தரப்பின் நம்பிக்கையைச் சிதறடித்துவிடுவதாக அமையும். தமிழர்கள் எதிர்பார்க்கும் நிலைமாறுபட்ட நீதியைக் கூட மறுப்பதாக அமைந்துவிடும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மையையும் அது கேள்விக்குறியாக்கிவிடும். என்ன செய்யப்போ◌ாகின்றது மனித உரிமைகள் பேரவை?