Saturday, July 17, 2010

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்பு சீர்திருத்தமும்
மகிந்த - ரணில் பேச்சுக்களும்
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கருத்தொருமிப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பித்த பேச்சுக்கள் அரசியல் அரங்கில் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்களைத் தொடர்ந்து சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்ற போதிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் தன்னிச்சையாகச் செயற்படாமல் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு ஒரு புதிய பாதையில் செல்வதற்கு அரச தரப்பு முற்பட்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் அதனைத் தன்னிச்சையாகச் செயற்படுத்துவதில் அரசாங்கம் சில நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதனால்தான் இவ்விடயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு முனைந்த அரசாங்கம் இப்போது எதிர்க்கட்சிகளுடன் கருத்து ஒருமிப்பை ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவதற்கு முன்வந்திருக்கின்றது. அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது - பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. இரண்டாவது - இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு. மூன்றாவது சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிலைமைகள் காரணமாக எதிர்க்கட்சிகளுடன் இணங்கிச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முக்கியமான விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார். அதாவது - ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்று தவணைகளுக்கு நீடிப்பதற்கான திட்டத்தை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் இப்போது முற்பட்டிருக்கின்றார். அதே அதிகாரங்கள் ஆனால் பதவி மட்டும் மாற்றம். அதாவது இது ஒரு பெயரளவிலான மாற்றமே தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது லேபிள்தான் மாற்றப்படுகின்றதே தவிர உள்ளடக்கம் அதேதான்.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை மகிந்த - ரணில் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க ரணில் விக்கிரமசிங்க ஜனாபதிபதி செயலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க எண்ணியிருக்கும் ஜனாதிபதி அதற்கு எதிரணியின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கருத்தொருமிப்பைக் காண்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் எனவும் இதன் முதற் கட்டமாகவே எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்திருப்பதாக ஜனாதிபதி செயலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுடன் பேச்சுக்கள் நடத்தப்படும்.

முன்னர் திட்டமிட்டிருந்த அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை அரசு இப்போது கைவிட்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த எண்ணியிருப்பதாக அறியவருகின்றது. இதன்படி நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படும். உத்தேச திட்டத்தின் படி ஒருவர் நிறைவேற்று அதிகார பிரதமராக எத்தனை தடவையும் பதவி வகிக்கக்கூடியதாக இருக்கும். அதேசமயம் நிறைவேற்று அதிகார பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் கவனம் செலுத்தப்படும். புதிய அரசியலமைப்புத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே (அதாவது 2016 இல்) நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.

ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் தாம் நினைத்தவாறு அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். எதிர்க்கட்சியிலிருந்து சிலரையாவது கட்சி பாயச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே அரசாங்கம் ஏற்கனவே தயாரித்திருந்த திட்டத்தைக் கைவிட்டு புதிய திட்டம் ஒன்றை இப்போது முன்வைத்திருக்கின்றது. ஆனால் அடிப்படையில் இது ஒரு பெயர் மாற்றமே தவிர பெரிதாக வேறு எதுவும் இல்லை.

நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டதாக இருக்கும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி என்பது அவ்வாறான ஒரு கடமைப்பாட்டைக் கொண்டதல்ல. அதாவது இது ஒருவகையில் அடையாள ரீதியான விட்டக்கொடுப்பாக மட்டுமே இருக்கும். இதனைவிட எந்த அதிகாரங்களையும் இந்த மாற்றங்களின் போது அரசாங்கத்தின் தலைவர் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. இதனைவிட சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். உண்மையில் இது வெறுமனே ஒரு அலங்காரப் பதவியாக மட்டுமே அமைந்திருக்கும்.

இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் ஐ.தே.க. முன்வந்திருப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ஒத்துழைப்பை வழங்காவிட்டால், தமது கட்சியைச் சேர்ந்தவர்களைக் கட்சி மாறச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கும் என்பது ஐ.தே.க. தலைமைக்குத் தெரியும். ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இதனைவிட கட்சித் தலைமையில் மாற்றங்களையும் கட்சிப் புனரமைப்பையும் செய்வதற்கான முயற்சிகளை அதிருப்தியாளர்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில், தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் என ரணில் கருதியிரக்கலாம். அத்துடன் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது ஐ.தே.க.வுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

இதேவேளையில் இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் தமது அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஜே.வி.பி. குறிப்பிட்டிருக்கின்றது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை நீடிப்பதற்கு உருவாகியிருக்கும் அதிகரித்த எதிர்ப்பினால் அதனைக் கைவிட ஆளும் கட்சி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. தெரிவிக்கின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி மறுசீரமைப்புப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்குக் காலத்தைக் கடத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே சூழ்ச்சி இடம்பெறுகின்றது என ஜே.வி.பி. கடுமையாகச் சாடியிருக்கின்றது.

இருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.க்கும் இந்தப் பேச்சுக்களில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி. இந்தப் பேச்சுக்களில் நிச்சயமாகக் கலந்துகொள்ளும். ஆனால் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவியை அவர்கள் எதிர்ப்பார்கள் எனத் தெரிகின்றது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியும் ஒன்றுதான் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியும் ஒன்றுதான். லேபிள்தான் மாற்றப்படுகின்தே தவிர உள்ளடக்கம் ஒன்றுதான் என்பதுதான் ஜே.வி.பி.யின் கருத்தமாகும். அதனால் குறிப்பிட்ட திருத்தங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

இதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அடுத்த வாரத்தில் இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படும் எனத் தெரிகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியா அல்லது பிரதமர் பதவியா என்பதைவிட, அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் போது இன நெருக்கடிக்கான தீர்வு அதில் எந்தளவுக்கு உள்ளடக்கப்படும் என்பதிலேயே அதிகளவுக்கு அதன் அக்கறை இருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். குறிப்பாக இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்தும்.

கூட்டமைப்மைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சுக்களின் போது தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக இல்லை. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும் கூட்டமைப்பின் தலைமை நடத்திய பேச்சுக்களின் போது இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது கூட்டமைப்பு தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் என்பதற்கான ஒரு சமிஞ்ஞையாக இது உள்ளது.

Friday, July 16, 2010

யாழ். நிலைமை

குடாநாட்டை உலுக்கிய மர்ம மரணம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ள மற்றொரு மர்மக் கொலை யாழ்ப்பாண மக்களை மட்டுமன்றி இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. வேலனை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ மாது ஒருவதே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். 27 வயதான இந்தப் பெண்ணின் சடலம் அவர் தங்கும் அறையில் சீருடையுடன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தை தற்கொலை எனச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தெரியவந்திருக்கின்ற போதிலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அடித்துக்கூறும் வைத்தியசாலை பணியாளர்கள் இங்கு பணி புரியும் சிங்கள மருத்துவர் ஒருவரே இதற்குப் பொறுப்பானவர் எனவும் குற்றஞ்சாட்டியிருப்பதையடுத்து குறிப்பிட்ட மருத்துவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து அவர் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 
மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடைய ஆர்ப்பாட்டப் போராட்டங்களையடுத்து குறிப்பிட்ட வைத்தியரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருந்த போதிலும் பொலிஸார் குறிப்பிட்ட வைத்தியருக்குச் சாதகமான முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் விசாரணைகள் எந்தளவுக்குப் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள வைத்தியர் ஒரவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பது அரசாங்கத்துக்கும் பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால், அவரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மெற்கொண்டு வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிரக்கின்றது. 
சுருக்கிட்ட நிலையில் சடலம்
வேலனை வைத்தியசாலையில் மருத்துவ மாதுவாகப் பணிபுரிந்துவந்த கைதடியைச் சேர்ந்த 27 வயதான சரவணை தர்சிகா என்ற பெண்மணியே கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார். வழமைபோல வெள்ளிக்கிழமை இரவுக் கடமைக்கு வந்த அவரது சடலம் சனிக்கிழமை காலை அவரது அறையில் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது. சுனிக்கிழமை காலையில் பணிக்கு வந்த சில மணி நேரத்திலேயே அவரது சடலம் மீட்கப்பட்டிருப்பது வைத்தியசாலைப் பணியாளர்களை அதிர்ச்சியடைவைத்துள்ள அதேவேளையில் வேலனைப் பகுதியிலும் இச்சம்பவம் பெரும் பதற்ற நிலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 
தர்சிகா சுருக்கிட்டுத் தற்கொலை செய்தகொண்டுள்ளார் எனக் காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு காணப்பட்ட தடயங்கள் மற்றும் சடலம் தரையைத் தொடும் வகையில் இருந்தமை என்பன இது ஒரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மருத்துவமனை பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளதையடுத்து இங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கின்றது. அத்துடன் தர்சிகா தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த அவசியமும் இல்லை எனக் குறிப்பிடும் மருத்துவமனைப் பணியாளர்கள், குறிப்பிட்ட சிங்கள மருத்துவர் கடந்த சில வாரகாலமாகவே தர்சிகா மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மேற்கொண்டுவந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள்.  அத்துடன்  குறிப்பிட்ட இரவும் சிங்கள மருத்துவரே கடமையிலிருந்தமையால் - அவர் மீதே சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் பொலிஸார் சகிதம் உடனடியாகவே சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், அதனைப் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிட்டார். இதேவேளையில் - கொலையுண்ட பெண்ணின் கைத்தொலைபேசியில் இறுதியாக எடுக்கப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி கிடைத்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இதேவேளையில் இந்த மரணத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என சிங்கள டாக்டரான பிரியந்த செனவிரட்ண மீது பணியாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து குறிப்பிட்ட டாக்டர் உடனடியாகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட டாக்டர் மரணமடைந்த பெண்ணை தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
விஜயகலா அவசரக் கோரிக்கை
தர்சிகா மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளமை குடாநாட்டில் பெரும் அதிர்சியலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், இதில் சிங்கள வைத்தியர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறுமா என்ற சந்தேகத்தை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது. முக்கியமாக சம்பந்தப்பட்ட வைத்தியரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு அரசியல் விவகாரமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவருகின்றது. இந்த நிலையில் இந்த மர்ம மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய இந்த இளம் பெண் அங்கு பணியாற்றிய வைத்தியரான பிரியந்த செனவிரட்ண என்பவரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் சனிக்கிழமை காலை இவரது சடலம் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வரது மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணத்தில் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் குறித்த மருத்துவர் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இத்தகைய செயற் பாடுகள் கடமைபுரியும் பெண்களை அச் சுறுத்துவதாகவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இவற்றை இல்லா தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் இந்தச் சம்பவமானது வேலணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையினால் இது குறித்து பொலிஸாரும் நீதித் துறையும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும் பெண்கள் பாதுகாப்பாக கடமை புரிவதற்கு உரிய சூழல் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" எனவும் விஜயகலா அவசரக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பரலவாக இடம்பெற்றுவருவது தொடர்பாக விஜயகலா தனது செய்தியில் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. குடாநாடு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு எதிரான இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படாமல் விடப்படும் நிலை காணப்படுகின்றது. 
மக்கள் ஆர்ப்பாட்டம்
தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ள பொதுமக்களும் மருத்துவமனைப் பணியாளர்களும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி குடாநாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். தர்சிகாவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் விபரங்கள் உத்தியோகபூர்வமான முறையில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற அவரது மரணச் சடங்கைத் தொடர்ந்து மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையும் குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், யாழ். மாவட்ட பொதுச் சுகாதார சேவைகள் சங்கம் என்பன இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின. மருத்துவர் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனக் கருதப்படுவோரை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைச்சு மட்டத்தில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுடக்கு நட்டவீடு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டதுடன், உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில் இரவுக் கடமைக்கு வருமாறு தம்மை நிர்ப்பந்திக்கக்கூடாது எனவும் இவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
சுகாதாரப் பணிப்பாளர் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து பணிப் பகிஷ்கரிப்பைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ள பணியாளர்கள் மீண்டும் கடமைக்குச் செல்லத் தொடங்கியிருப்பதையடுத்து மருத்துவமனையின் வழமையான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதேவேளையில் இந்த மர்ம மரணத்தில் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படும் சிங்கள மருத்துவரைக் கைது செய்யுமாறு செவ்வாய்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 
சிங்கள மருத்துவர்
வடபகுதியில் தமிழ் மருத்துவர்களுக்குக் காணப்படும் தட்டுப்பாடு காரணமாகவே தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்கள் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள். அந்த வகையில்தான்  சிங்கள மருத்துவரான பிரியந்த செனவிரட்ண யாழ்ப்பாணத்தில் பணிக்காக அனுப்பப்பட்டார். நாட்டின்  பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருப்பதால், அதிகாரத்துடனும், ஆணவத்துடனுமே நடந்துகொண்டதாக மருத்துவமனைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். புடையினரின் பாதுகாப்பும் இருப்பதால் இவர்களுடைய அடாவடித்தனத்துக்கு அஞ்சி நடக்க வேண்டியவராகவே மற்றவர்கள் இருந்துள்ளார்கள்.
இரவு நேரக் கடமையில் இருக்கும் போது பெண் பணியாளர்களைத் துன்புறுத்தும் வகையில் இவர் நடந்தகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக இரவுக் கடமைக்கு வரும் தர்சிகா அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையிலேயே சனிக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டமை குடாநாட்டில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஐ.நா. வுடனான மோதல்:

மூன்றாவது நாளுடன் முடிவுக்கு வந்த
‘சாகும் வரையிலான’ உண்ணாவிரதம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ஆரவாரங்களுடன் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளே கைவிடப்பட்டுவிட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களையே கேலிக் கூத்தாக்கியிருக்கும் விமல் வீரவன்சவின் இந்தப் போராட்டம், இனவாத அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களின் அரசியல் உறுதிப்பாட்டைத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து உருவாகியிருக்கும் நிலை இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒருவித மோதல் நிலையை உருவாக்கியிருந்தது. மேற்கு நாடுகளும் இவ்விடயத்தில் தமது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தன. 
விடுதலைப் புலிகளுடான போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். கொழும்பு, தும்புளைச் சந்தியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக வீரவன்ச ஆரம்பித்துள்ள இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஐ.நா.வின் நிபுணர் குழு கலைக்கப்படும் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருந்த நிலை கடந்த வாரத்தில் காணப்பட்டது. 
இவ்வாறான நிபுணர்குழு ஒன்றை அமைக்கும் எண்ணத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட போதே கொழும்பு அதற்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் ஐ.நா.வின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு நாடென்ற முறையில் இதற்கு எதிராக தீவிரமான போராட்டம் எதனையும் முன்னெடுக்கக்கூடிய ஒரு நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகவுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவையும் ஜாதிக ஹெல உறுமயவையும் இதற்காக அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என்பது எதிர்பர்க்கப்பட்டதுதான். விமல் வீரவன்சவும் வழமைபோல தேசப்பற்று என்ற முகமூடியை அணிந்து கொண்டு ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார். தேசப்பற்றாளர்களும் இதனை ஒரு பாரிய போராட்டமாக முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தனர்.
உண்ணாவிரததத்தை ஆரம்பிக்க முன்னர் வீரவன்ச தெரிவித்த தகவல்கள் அவரது போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற பெரும் அச்சத்தையே உருவாக்கியிருந்தது. இந்தப் போராட்டத்தை மாவட்ட ரீதியாக நடத்த வேண்டும் எனவும், ஐ.நா.வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டால்கூட தான் தன்னுடைய போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும், இந்தப் போராட்டத்தில் தான் கொல்லப்பட்டால் தனக்குப் பின்னால் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார். அவரது உரையில் காணப்பட்ட அந்த உணர்ச்சி உண்ணாவிரத முடிவில் காணாமல் போய்விட்டது. 
விமல் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவருக்கு ஆதரவாக மாவட்ட ரீதியாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இது நாட்டில் கொந்தளிப்பான நிலை ஒன்றை ஏற்படுத்தவும் இல்லை. பதிலாக வீரவன்சவின் போராட்டத்தை அனைவரும் ஒரு கேலிக் கூத்தாகவே பார்த்தனர். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இதனை ஒரு கோமாளிக் கூத்து என்றே வர்ணித்தன. பிக்குமார்தான் பெருமளவில் உண்ணாவிரத அரங்கில் கூடி பிரித் ஓதிக்கொண்டிருந்தார்கள். இதனைவிட உண்ணாவிரத அரங்கில் கூட வேடிக்கை பார்க்க வந்தவர்களைவிட உணர்ச்சிகரமாக உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்க வந்தவர்கள் என யாரையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அரச ஆதரவு ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்துக்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்தன.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டத்தைத் தட்டிவிட்டாலும், ஒரு தேசப்பற்றாளன் என்ற முறையில் மகிந்த ராஜபக்ஷவைவிட விமல் வீரவன்ச பிரபலமடைவதை விரும்பவில்லை. வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான வாஸஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்ற இராப்போசன விருந்து வைபவமே இதற்குச் சான்று. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சர் என்ற முறையில் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை அமைச்சர்களுக்காகவும், எம்.பி.க்களுக்காகவும் ஜனாதிபதி நடத்தினார். தமது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சித் தலைவர் ஒருவர் தேசத்துக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார் என்பதால் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை ரத்துச் செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற எந்தவிதமான சிந்தனையும் இன்றி கேளிக்கைகளுடன் கூடிய இந்த விரந்துபசாரத்தை அரசாங்கம் நடத்தியிருப்பதே விமல் வீரவன்சவை அரசாங்கம் எந்த இடத்தில் வைத்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம். 
ஜ.நா.வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது, ஐ.நா.வின் செயற்பாடுகளை சுமூகமான முறையில் முன்னெடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காததன் மூலம் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனைவிட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய விமல் வீரவன்ச முன்வந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டார். இதன் மூலம் விமலின் இந்தப் போராட்டத்துக்கு ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் உள்ளது வெளிப்படையாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஐ.நா.வுக்கு மட்டுமன்றி மேற்கு நாடுகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்து தமது அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்கள். அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்துவது எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உட்பட்டதாகும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அவர்கள், இலங்கை அங்கத்துவ நாடாக இருக்கும் ஐ.நா. சபையின் வாயிலை முற்றுகையிட்டு ஐ.நா. சபையின் அதிகாரிகளைப் பயமுறுத்துவதும் அவர்களைத் துன்புறுத்துவதும் சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல்களாகவே கருதப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். சர்வதேச ரீதியான இவ்வாறான செயற்பாடு இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமையும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா.வின் உதவிகள் அதற்குத் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஐ.நா.வுக்கு கீழ் வரும் அமைப்புக்களே பெருமளவு உதவிகளை மேற்கொண்டுவருகின்றன. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகை யிடப்பட்டுள்ளதையடுத்து - வடபகுதிக்கான ஐ.நா. உதவி நிறுவனங்களின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உதவி நிவாரணப் பொருட்களுடனான வாகனங்கள், மற்றும் பணியாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றுவருவதற்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என வடபகுதியிலுள்ள நிவாரண அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் ஐ.நா.வின் கீழ் வரும் அமைப்புக்களின் உதவிகள் அதற்குக் கட்டாயம் தேவை. இந்த உதவிகள் தடைப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம், உலக உணவுத் திட்டம், யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம், மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புக்களின் உதவிகளையும், ஆதரவையும் எதிர்பார்த்தே இலங்கை உள்ளது. இவற்றின் உதவிகள் தடைப்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும். 
அத்துடன் இந்த சண்டித்தன அரசியலைத்தான் தன்னுடைய இராஜதந்திரமாக அரசாங்கம் கருதுகின்றது. இது சர்வதேச ரீதியாக அரசியல் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கொழும்புக்கான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி நில் புனேயை ஐ.நா. அவசரமாக அழைத்திருப்பது பதில் நடவடிக்கை ஒன்றுக்கு ஐ.நா.வும் தயாராக இருப்பதைத்தான் காட்டியிருக்கின்றது. ஆலோசனைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், ஐ.நா.வின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் பற்றிய ஆலோசனைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீள அழைக்கப்பட்டிருப்பது கொழும்புக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. 
ஐ.நா. அமைத்துள்ள நிபுணர்குழுவைக் கலைக்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதனைக் கலைக்கும் உத்தேசம் எதுவும் தமக்கு இல்லை என்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். இந்த நிபுணர் குழு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையே விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் கொழும்பில் பரப்பிவருவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினர் ஐ.நா. சபையின் விசாரணைகளையடுத்து தூக்கிலிடப்படுவார்கள் என விமல் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துக்களின் மூலமாக மக்களுடைய உணர்வுகளை ஐ.நா.வுக்கு எதிராகத் தூண்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமைவாகவே ஐ.நா. சபை செயற்பட்டுவருகின்றது. ஈரான் உட்பட சில ஆபிரிக்க நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் தடைகள் ஐ.நா. சபையினால் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு உள்ளது. இவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தி சில நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை ஐ.நா. சபை கடந்த காலங்களில் எடுத்திருந்த போதிலும், அவ்வாறு தடைகளுக்கு உள்ளான நாடுகள் கூட ஐ.நா. சபையிலிருந்து வெளியேறுவதற்கு முற்படவில்லை. ஐ.நா. சபையின் முக்கியத்துவத்தையும் அதன் மேலாண்மையையும் அவை ஏற்றுக்கொண்டே செயற்பட்டுள்ளன. 
உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்தக் காலப்பகுதியில் எந்த ஒரு நாடுமே தனித்துச் செயற்பட முடியாது. ஒவ்வொரு நாடும் மற்றையவைகளைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாது என்பதுடன் இந்த புதிய உலக ஒழுங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவமும் பிரதானமானதாக இருக்கின்றது. இதனை உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஒரு எல்லையுடன் வரையறுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றிவளைத்து அங்குள்ள பணியாளர்களைப் பயணமாக வைக்கப்போவதாகவும், ஐ.நா.வின் செயற்பாடுகளை முடக்கப்போவதாகவும் கூறியே வீரவன்ச தலைமையிலான குழுவினர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும் பின்னர் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தாலும் இதனை ஒரு முழுமையான போராட்டமாக மாற்றுவதற்கு அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் விரும்பவில்லை என்பதை இது புலப்படுத்துகின்றது. சர்வதேச ரீதியாக இவ்வாறான செயற்பாடு தமக்கு அவப்பெயரைத் தேடித்தருவதாக அமையும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அத்துடன் சர்வதேச அரங்கில் சங்கடமான ஒரு நிலையையும் இது உருவாக்கலாம். எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கத்தை எச்சரித்துவருகின்றன. இந்தநிலையில் இதனை ஐ.நா.வுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு அப்பால் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்குத்தான் அரசாங்கமும், விமல் வீரவன்ச குழுவினரும் முற்படுவதையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 
சிக்கலான இந்த விவகாரத்தை மிகுந்த இராஜதந்திரத்துடன் கையாள வேண்டிய நிலையில் இதனை வெறுமனே ஒரு சண்டித்தனமான அரசியலாகக் கையாள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இராஜதந்திரமாக அணுகுவேண்டிய இந்த விவகாரத்தை தேசப்பற்று என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் முற்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கின்றது. 
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு போராட்டத்தை கொழும்பில் நடத்தும் அதேவேளையில், அணிசாரா அமைப்பு மற்றும் சீனா, ரஷ்யா ஆகியவற்றைப் பயன்படுத்தி ஐ.நா. மீதான எதிரான அழுத்தங்களை அதிகரிப்பது அதன் திட்டமாகவுள்ளது. இருந்தபோதிலும் அணிசாரா அமைப்பு 118 நாடுகளைக் கொண்ட எண்ணிக்கையில் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், ஐ.நா.வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியளவுக்கு சக்திவாய்ந்த ஒரு நாடாக அது இல்லை. அதேவேளையில் பாதுகாப்புச் சபையின் நிரந்திர உறுப்பு நாடுகள் என்ற முறையில் ரஷ்யா சீனா என்பன வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்ற போதிலும், குறிப்பிட்ட நிபுணர்குழு ஐ.நா. செயலாளர் நாயகம் தனது விஷேட அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் அந்த நாடுகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தநிலையில்தான் சாகும் வரையிலான தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மூன்றாவது நாளே நிறுத்திக்கொண்டு ஜனாதிபதி கொடுத்த இளநீரைப் பருகிக்கொண்டு உண்ணாவிரத அரங்கிலிருந்து விமல் வீரவன்ச எழுந்து சென்றிருக்கின்றார்.

Monday, July 5, 2010

பிக்குகளும் அரசியலும்

பறிபோன தலைமை பதவி: ஜாதிக ஹெல உறுமயவில் நடந்த சதி
ஆட்சி அதிகாரங்களை ஒதுக்கித் தள்ளி துறவறம் பூண்ட கௌதம புத்தரின் பெயரால் நடத்தப்படும் கட்சியில் இப்போது தலைமைத்துவ அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுபாப்பதுதான் தமது பிரதான நோக்கம் எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இரண்டு சிரேஷ்ட பிக்ககளிடையே உருவாகியிருக்கும் தலைமைத்தவப் போட்டி கட்சியைப் பிளவுபடுத்தும் அளவுக்குச் சென்றிருக்கும் அதேவேளையில், கொழும்பு அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாகவும் இந்த விவகாரமே உள்ளது.
கட்சியின் வருடாந்த மாநாடு கடந்த வாரம் இடம்பெற்ற பின்னணியிலேயே தலைமைப் பதவி தொடர்பில் பிரபலமான இரண்டு பிக்குகளுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகியது. தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்காக திரைமறைவில் தீட்டப்பட்டிருந்த திட்டங்களும் அம்பலமாகியிருக்கின்றது. 
கட்சியின் மாநாட்டுக்குத் தான் திட்டமிட்ட முறையில் அழைக்கப்படவில்லை என வண. எல்லாவலை மெத்தானந்த தேரர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். கட்சியின் தலைவராக மநாடு நடைபெறும் நேரம் வரை இருந்த தன்னைத் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒரு நாடகமே அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் அங்கலாய்க்கின்றார்.
கட்சியின் தலைமைப் பதவியைப் புதிதாகக் கைப்பற்றியிருக்கும் வண. ஓமல்பே சோபித தேரரரோ இவ்வாறான சதி எதுவும் இடம்பெறவில்லை என திட்டவட்டமாக மறுக்கின்றார். ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் கட்சியின் தலைமைப் பதவி என்பது ஆயுட்காலத்துக்கு உரியதல்ல எனக் குறிப்பிடும் சோபித தேரர், ஒரு வருடத்துக்கு மட்டுமே தலைமைப் பதவி வரையறுக்கப்பட்டதாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். இதனால் எல்லாவரை மெத்தானந்த தேரர் பதவியிலிருந்து விலகிச் செல்வதென்பது தவிர்க்க முடியாததாகவே இருந்துள்ளது என்hதுதான் அவரது கருத்து.
ஆனால், மெத்தானந்த தேரர் கடந்த ஏழு வருட காலமாக கேள்விக்கு உட்படுத்தப்படாத வகையில் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் இருந்துள்ளார் என்பது உண்மை!
கட்சித் தலைவர் சமூகமளித்திருக்காத நிலையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயே புதிய தலைவராக சோபித தேரர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அதுவும் ஏகமனதான தெரிவு. முன்னைய தலைவர் மெத்தானந்த தேரர் தலைமைப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பதிய தலைவர் பதவியேற்றிருப்பதாகவும் உறுமய பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்திருக்கின்றது. மறுநாள் காலை பத்திரிகைகளைப் பார்த்தபோதுதான் தலைமைப் பதவியிலிருந்து தான் தூக்கப்பட்டு புதிய தலைவர் பொறுப்பேற்றிருப்பதை மெத்தானந்த தேரர் அறிந்துகொண்டாராம்.
பாவம்! எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் ஏற்படக்கூடாத பரிதாபமான நிலை இது!
கட்சியின் தலைவருக்கே தெரியாமல் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதா என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயமாக ஏற்படுகின்றது. கட்சி உறுப்பினர்களுக்கு மாநாட்டுக்கான அழைப்பு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் யாப்பு எனவும். அதன்படி மெத்தானந்த தேரருக்கும் இரண்டு வௌ;வேறான அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றார் புதிய தலைவர். அதாவது முன்னாள் தலைவருக்கு எதிரான சதி எதுவும் இடம்பெறவில்லை என்பதுதான் அவரது நிலைப்பாடு!
ஆனால் கட்சி மாநாட்டுக்குத் தலைமைதாங்கியிருக்க வேண்டிய மெத்தானந்த தேரர் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்பதையிட்டுக்கூட யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தலைமையை மாற்றுவதிலேயே அனைவருடைய கவனமும் இருந்துள்ளது. 
கட்சி மாநாடு நடைபெற்ற போது மெத்தானந்த தேரர் கொழும்பில் இருக்கவில்லை. அவர் முல்லைத்தீவில் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அவர் தலைநகரில் இல்லாத நேரம் பார்த்து மாநாடு நடத்தப்பட்டதா அல்லது இது ஒரு தற்செயல் நிகழ்வா என்பதும் தெரியவில்லை. நடைபெற்றுள்ள நிகழ்வுகளைப் பார்க்கும் போது மெத்தானந்த தேரரைத் தலைமைப் பதவியிலிருந்து தூக்குவதற்கான திட்டம் ஒன்றுடன்தான் எதிர்த் தரப்பினர் செயற்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் நிச்சயமாக உருவாகின்றது.
ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் வடபகுதிக்கு அடிக்கடி சென்று வருபவர்களில்  மெத்தானந்த தேரரும் ஒருவர். வட பகுதி மக்கள் மீது அவருக்குள்ள அன்போ அல்லது அக்கறையோ இதற்குக் காரணமல்ல. வடபகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனவும், அது சிங்கள மக்களுடைய தாயக பூமி எனவும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடனான தொல்பொருள் ஆய்வு வேலைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகத்தான் முல்லைத்தீவுக்கும் அவர் கடந்த வாரத்தில் சென்றிருந்தார். அவருக்கு  எதிராகச் சதி செய்வதற்கக் காத்திருந்தவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் மிகவும் வாய்ப்பானதாக அமைந்துவிட்டது. 
கட்சித் தலைமையை மீண்டும் கைப்பற்றுவது இலகுவானதல்ல என்பதைப் புரிந்துகொண்டுள்ள மெத்தானந்த தேரர் இப்போது அமைதியாகிவிட்டார். சோபித தேரரின் தரப்பினருக்கே  கட்சியில் அதிகளவு பலம் இருப்பது போலத் தெரிகின்றது. கடந்த செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததன் மூலமாக தன்னுடைய பலத்தை சோபித தேரர் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் சோபித தேரரின் தலைமையை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் எல்லாவலை மெத்தானந்த தேரரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது!
கட்சியிலிருந்து  தன்னை வெளியேற்ற முடியாது எனவும், தான் தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கப்போவதாகவும் சொல்லும் மெத்தானந்த தேரர், தான் கட்சிப் பதவிகளில் தொங்கிக்கொண்டிருக்க விரும்பும் ஒருவனல்ல எனவும், பௌத்த சாசனத்தின் நலனுக்காக தொடர்ந்தும் பாடுபடப்போவதாகவும் கூறியிருக்கின்றார். ஆனால் கட்சி தவறான பாதையில் சென்றால் மற்றொரு கட்சியில் இணைந்துகொள்வதற்கோ அல்லது புதிய கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வதற்கோ தான் தயங்கப்போவதில்லை எனவும் அவர் அறிவித்திருக்கின்றார்.   
கட்சி தன்னை சரியான முறையில் அரவணைத்துக்கொண்டால் கட்சி சரியான பாதையில் செல்கின்றது என அவர் விட்டுவிடலாம். இல்லையென்றால்தான் பிரச்சினை. ஆனால் தனியான கட்சி ஒன்றை அமைத்து அதனை வளர்க்கக்கூடிய நிலையில் மெத்தானந்த தேரர் இல்லை என்பதுதான் உண்மை. ஆளும் கட்சி உட்பட பல கட்சிகள் இனவாதத்தைப் பேசுவதற்கென்றே இருக்கும் நிலையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கட்சி ஒன்றை உருவாக்கி வெற்றிபெறக் கூடிய நிலை இப்போதில்லை.
ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதால்தான் உறுமய நிலைத்திருக்கின்றது. தனியாகச் சென்றால் செல்லாக்  காசாகிவிடும் என்பதற்கு ஜே.வி.பி. உதாரணமாக உள்ளது. இந்த நிலையில் புதிய கட்சி என்று சொல்லலாமே தவிர மெத்தானந்தரால் அதில் சாதிக்க முடியாது. இருக்கின்ற நிலையில் ஆளும் கட்சியுடன் ஐக்கியமாகிவிடுவதுதான் அவருக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்!

Saturday, July 3, 2010

இனநெருக்கடியும் அரசியலும்

கே.பி. சுயமாகச் செயற்படுகின்றாரா
புலனாய்வுப் பிரிவு இயக்குகின்றதா?
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்பட்ட 'கே.பி" எனப்படும் குமரன் பத்மநாதன் சுயமாகச் செயற்படுகின்றாரா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இயக்கப்படுகின்றாரா?
இதுதான் தமிழ் வட்டாரங்களில் இன்று எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பத்மநாதன் மலேஷியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு இரகசியமாகக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர் தொடர்பாக கசிந்த பல்வேறு தகவல்களும் இப்போது உறுதிப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது கொழும்பின் இரகசியத் திட்டங்களைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசின் பேச்சாளர்கள் வெளியிட்டுவரும் தகவல்களும் கே.பி.யை மையப்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டங்களை அம்பலப்படுத்துவதாகவே இருக்கின்றது.
களத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றாக அழிக்கப்பட்டாலும், பலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள்தான் தமக்கு அச்சுறுத்தலாக தற்போதுமிருப்பாதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ உட்பட, கொழும்பின் கொழும்பின் கொள்கை வகுப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றார்கள். இவ்வாறு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ்ப் பலம்பெயர் சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்கான தந்திரோபாயங்களுக்கு கே.பி.யை இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்துகின்றார்கள என்ற கேள்வியை எழுப்பும் வகையிலேயே கே.பி.யின் அண்மைக்காலச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த வருடத்தில் செயற்பட்டுவந்த கே.பி. அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட பாணியே மர்மமானதாகவும், ஆங்கில மர்மத் திரைப்படங்களில் வரும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளைப் போன்றதாகவுமே இருந்தது. அவர் எவ்வாறான சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார், எவ்வாறு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார் என்பன சந்தேகத்துக்குரியவையாகவே இருந்தன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும், அவ்வமைப்பின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த கே.பி. இன்டர்போல் உட்பட பல நாடுகளால் தேடப்படும் ஒருவராகவே இருந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கைத் தளமாகக் கொண்டே அவர் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்தபோதிலும், அங்கு அவர் மீது வலை விரிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தார். கடந்தவருட ஆரம்பம் முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற காலம் வரையில் மலேஷியாவின் தலைநகருக்குத் தனது தளத்தை மாற்றிக்கொண்ட கே.பி. அங்கிருந்தகொண்டே செயற்பட்டார்.
போரின் இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிகவும் நெருக்கமான இடைவிடாத தொடர்பை இவர் வைத்திருந்தார். முள்ளிவாய்க்;கால் போர் தொடர்பான பல்வேறு தகவல்களும் கே.பி. மூலமாகவே சர்வதேசத்தக்குத் தெரியத்தக்க வகையில் வெளியாகிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சரணடையச் செய்வதற்கான பேச்சுக்களையும் அவரே சர்வதேச சமூகத்துடன் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இறுதியாக போரில் பிரபாகரன் வீரமரணமடைந்தார் என்ற தகவலும் கே.பி.யினால்தான் முதன் முதலில் உத்தியோகபூர்வமான முறையில் வெளியிடப்பட்டது. 
நந்திக்கடலின் கரையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் போன்றே இவர் செயற்பட்ட அதேவேளையில், தன்னுடைய முன்னைய காலங்களைப் போல தொடர்ந்தும் தலைமறைவாக இருந்துகொண்டே செயற்பட முடியாத ஒரு நிலை இவருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த கே.பி. அதற்கான யோசனைகளையும் முதன் முதலாக முன்மொழிந்திருந்தார். 
இந்த நிலையில்தான் தன்னுடைய வழமையான தலைமறைவு வாழ்க்கையிலிருந்து சற்று வெளியே வந்து கொலாலம்பூரில் வெளியாட்கள் பலரையும் இவர் சந்தித்துள்ளார். இதன் மூலம் கே.பி. எங்கே இருக்கின்றார் என்ற இரகசியம் மெதுவாக வெளியே கசிந்தது. இந்த நிலையிலேயே சந்திப்பு ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த கே.பி. காணமல்போனார். இலங்கை மற்றும் மலேஷிய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் இவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின. 
கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட கே.பி. தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவர் தொடர்பில் கசிந்த பல்வேறு தகவல்களும் அரசாங்கத்துடன் இணைந்து அவர் செயற்படுகின்றாரா என்ற கேள்வியைத்தான் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள கே.பி. அவருடன் பேரம் ஒன்றுக்குச் சென்றிருப்பதபாகக் கூறப்பட்டது. கே.பி. தடுப்புக் காவலிலேயே இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் கொழும்பிலள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தென்கிழக்காசியாவிலுள்ள முக்கிய நகர் ஒன்றுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் பாதுகாப்பான முறையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த விஜயங்களின் போது அவரது பெயரிலிருந்த பல கோடி ரூபா பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் கைமாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதனைவிட தனது கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ள கே.பி., மற்றொரு கப்பலையும் விரைவில் கைமாற்றும் திட்டத்துடனேயே செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. 
இந்தப் பின்னணியில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், மற்றும் புலிகள் அமைப்புக்கு பெருமளவு நிதி உதவிகளை வழங்கியவர்களுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு கே.பி. பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக இலங்கை வந்து வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு இவர்களிடம் கோரிக்கை விடுத்த கே.பி., அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு உதவுமாறு அவர்களைக் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 
இவ்வாறு வெளியான தகவல்கள் அனைத்தையும் உண்மை என நிரூபிப்கும் வகையில் கடந்த வாரம் கொழும்பிலிருந்து வெளிவரும் சன்டே ஒப்சேவர் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கொழும்பு வந்தருந்த புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலருடன் கே.பி. பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், வடக்கில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுக்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாயவும் கலந்துகொண்டிருக்கின்றார்.
சன்டே ஒப்சேபர் பத்திரிகை இலங்கை அரசாங்கத்தின் கட்டப்பாட்டிலுள்ள லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படுவது. இதில் வெளியாகும் செய்திகளைப் பொறுத்தவரையில் அவை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களாகவே கருதப்பட வேண்டியவை. அந்தவகையில் கே.பி. தொடர்பாக ஒப்செவர் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி ஒருவகையில் அரசாங்கத்தின் செய்தியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதுடன், கே.பி. ஒரு விசாரணைக் கைதியைப் போலத் தடுத்துவைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்தச் செய்தி அமைந்திருந்தது. 
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாக ஒன்பது பேர்- இவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், கொழும்பு வந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய மாநாடு ஒன்றில் பங்குகொண்டிருக்கின்றார்கள். இந்தச் சந்திப்பை கே.பி.தான் ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து விஷேட விமானம் ஒன்றின் மூலமாக யாழ்ப்பாணம் சென்ற இந்தக் குழுவினர் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். அபிவிருத்தி முதலீடு தொடர்பான வாய்ப்புக்களைக் கண்டறிவதே இவர்களுடைய பிரதான நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. 
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளவென கே.பி.யின் ஏற்பாட்டில் கொழும்பு வந்த இந்தக் குழுவினர் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் வடக்கின் பல பகுதிகளையும் பார்வையிட்டதுடன், கொழும்பில் முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொண்டனர். யாழ்ப்பாணம். வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக நீண்ட காலமாக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை இந்தக் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள்.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கொழும்பு வந்து திரும்பிய லண்டனைத் தளமாகக் கொண்ட மருத்துவர், வேலாயுதபிள்ளை அருட்குமார், இலங்கை அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கே.பி.யை இயக்கிவருவதாகவும், அவரூடாக இலங்கை அரசிடம் புலம்பெயர்ந்த மக்களை மண்டியிட வைப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். புலம்பெயர்ந்த மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வது ஒன்றே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் கோதாபாய தம்மை மிகுந்த ஆணவத்துடன் நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புலம்பெயர்ந்த தமிழர்களை கே.பி. ஊடாக உள்வாங்க முற்படுவது அல்லது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை பல பிரிவுகளாக உடைத்து சின்னாபின்னமாக்கி தமக்கு மண்டியிட வைப்பது என்பதில் இலங்கை அரசாங்கமும், இராணுவப் புலனாய்வாளர்களும் திட்டமிட்ட முறையில் உறுதியாகச் செயற்படுகின்றார்கள் என்பதை கொழும்பில் தாம் நடத்திய பேச்சுக்கள் மற்றும் சந்திப்புக்களின் போது உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 
தமிழர் புனர்வாழ்வு மையம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்குவதும், அதன் தலைவராக கே.பி.யை நியமித்து அதன் மூலமாக புலம்பெய்ந்த தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதையுமே அரசாங்கம் தமது கொள்கையாககக் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதாகவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   கிடைக்கும்  செய்திகளைப் பார்க்கும் போது கே.பி. தெரிந்தோ தெரியாமலோ இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் வலைக்குள் விழுந்துவிட்டார். அதிலிருந்து மீளமுடியாதளவுக்கு உள்வாங்கப்பட்டுவிட்ட அவரைப் பொறுத்தவரையில் புலனாய்வுப் பிரிவினரின் திட்டங்களுக்கு உதவுவதைத் தவிர மாற்றுவழி எதுவும் அவரிடம் இல்லை.  
புலனாய்வுப் பிரிவினரைப் பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்திடமிருக்கக் கூடிய நிதியைப் பெற்றுக்கொள்வது என்பதும், இலங்கை அரசுக்கு எதிரான பலம்வாய்ந்த ஒரு சக்தியாக பலம் பெயர் சமூகம் சர்வதேச அரங்கில் வளர்ந்துவிருவதைத் தடுப்பதும் அவர்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் உள்ளது. அதற்கு கே.பி.  யைப் பயன்படுத்துவது என்ற திட்டத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றது.  புலம்பெயர் சமூகத்தினர்தான் அரசின் அடுத்த இலக்கு!