Friday, December 16, 2011

சிவில் சமூகத்தின் மகஜருக்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு தமிழ் முக்கியஸ்தர்கள் சிலர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத அமைப்புக்கள், பொது நல அமைப்புக்கள், கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பலர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள், தீர்வுக்கான அடிப்படைகள், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் போன்ற பல விடயங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்படக் கூடாது என்றும், தேசியம், அக சுயநிர்ணய உரிமை போன்றவற்றின் அடிப்படையில் அவை அமைய வேண்டும் என்றும் தாம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப்பு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் விதம் குறித்தும் இந்தக் கடிதம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. த. தே. கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் அவர்கள், ஓரிரு தினங்களில் இந்தக் கடிதம் குறித்து தமது கருத்தை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

சிவில் சமூகத்தினரால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் முழு விபரமும் வருமாறு:

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு தொடர்பிலானது:

அ) பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எழுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஓகஸ்ட் 2011 அன்று நீங்கள் எடுத்திருந்தீர்கள்.

உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை 'ஏமாற்றும்' தன்மையானவை – [deceitful process]’ என வர்ணித்திருந்தீர்கள்.
இந்நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது என்பது சிவில் சமூகத்தினர் என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.
இது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரென பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம் பெருவியப்படைந்தோம்.

பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத் தீர்மானமானது தங்களது ஓகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

குறிப்பாக ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் - அரசாங்கத்துக்கெதிரான அனைத்துலக அழுத்தம் அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் - பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது.

இதற்கான விளக்கத்தை தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.

அண்மையில், டிசம்பர் 1 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர்களைப் பிரேரிக்கத் தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது.

இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது கடமையாகும்.

ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில்இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம், சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். [இந்த வார்த்தைப் பிரயோகங்களை எதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். - பத்மநாபா அணியும், ஈ.என்.டி.எல்.எஃப்பும்.].

மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுமிடத்து அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை அரசியற் கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டிய கடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராது விட்டதை அவர்களது கொள்கை நிலைப்பாட்டை நீங்களும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது.

இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.

இ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது அரசியல்தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான அனைத்துலக தொடர்பாளர்களுமாகிய சம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;.

தீர்வு 'தேசியம்' 'சுயநிர்ணயம்' என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர் சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. [உதாரணமாக:சுமந்திரனினால் 26 ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை சம்பந்தனின் 04 ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை]

சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும் கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்துக்கே தன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது.

தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக் கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியைக் கோருகின்றோம்.

அதேபோன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக் கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் [ Rule of Law] நல்லாட்சியும் [ Good Governance] பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில் சகலரதும் 'சமவுரிமைகள்' பாதுகாக்கப்படும்.

தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதினூடாகவே எமது அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976இலும் 1977இலும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளைத் தமது அரசியல் அபிலாசைகளாகக் கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர்.

பின்னர் வந்த எமது 30 ஆண்டு வாழ்வும் அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போது ஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ அல்லது மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.

தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஆனால் தேசியம்,சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகி விடும்.

இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல்தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு, இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.

தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர் ஒரு தேசம், எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும்.

இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியே இவற்றை கோசங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே.

அரசியல் உபாயங்கள்மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளைஅபிலாசைகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக்கொடுப்போமெனின் எதற்காக நாம் அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடைகூற வேண்டியிருக்கும்;.

2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக.

எதிர்வரும் 2012 ல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இந்தத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான 13ம் திருத்தத்தின் நடைமுறை வடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாத அரசாங்கம், 13ம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வைத்து அத்தேர்தலில் அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல.

மாகாணசபை முறைமையினை தமிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பரப்புரை செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.

அமெரிக்க, இந்திய அரசாங்கங்களும் 13 வது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்து இவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாக கருதமுடியும்.

ஆகவே மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது.

13வது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பயணிக்க முடியாது என்பதை சட்டஅறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்லவேண்டியதில்லை.

கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13வது திருத்தத்தை அல்லது அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப்பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது.

மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக்கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும்.

அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்து விடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே இன்று உள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் தேவையற்றதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடெடுக்கவும், அதை பேச்சுவார்த்தை மேசையிலும் அனைத்துலகத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது.

அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.

அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது.

மாறாக தமிழ்த் தேசிய விரோதசக்திகள் அல்லது அரசசார்பு சக்திகள் மாகாணசபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கருதுகின்றார்கள்.

இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் இந்த விண்ணப்பத்தை எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம்.இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே.

தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான நீடித்து நிலைக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை அடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நிறைவு செய்கின்றோம்.

No comments:

Post a Comment