Thursday, December 15, 2011

'காணி அதிகாரம்' தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா?

மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான நேற்றைய 17 வது சுற்றுப் பேச்சுக்களின் போது ஆராயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பல் இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரு மணி நேரம் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமையால் பேச்சுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 19 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையில் இடம்பெறும் 18 வது சுற்றுப்பேச்சுக்களின் போதும் காணி அதிகாரங்கள் தொடர்பாகவே தொடர்ந்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் அவை மாகாணசபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இருந்தபோதிலும், அரசியலமைப்பின்படி அரச காணிகள் மத்திய அரசுக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை விட்டுக்கொடுக்க அரச தரப்பினர் தயாராகவில்லை. 


இதனால் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக மாகாண சபைகளுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக நேற்றைய பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எது எப்படியிருந்தாலும், அரசியலமைப்பில் திருத்தத்தைச் செய்யாமல் இது எந்தளவுக்குச் சாத்தியமானதாகும் என்ற கேள்வியை அரசியலமைப்பு நிபுணர் எழுப்புகின்றார்கள்.

ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இன நெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக அரசியலமைப்பில் மற்றொரு திருத்த்தைச் செய்வதற்கு அது தயாராகவில்லைப் போலுள்ளது. தற்போதைய அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.

மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த 1987 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தில் (Provincial Councils Act No 42 of 1987) மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி, மத்திய அரசுக்கு உரித்தான காணி எனத் தனித் தனியாகக் காணப்படுகின்றது. 


இதில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவுள்ள அரச காணியை மாகாண சபைகளுக்குப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் சோக்கப்படவேண்டியவையாக உள்ளன. ஆக, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதுதான் அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்தாகும்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில் சிக்கலானது - இணக்கத்தை ஏற்படுத்துவதில் சிரமமானது என அடையாளங்காணப்பட்ட 3 விடயங்களில் காணி அதிகாரமும் ஒன்றாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மார்ச் மாதம் அரசிடம் முன்வைத்த யோசனைகளில் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 


இதனைவிட, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பேச்சுவார்த்தைகளுக்காக முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கான பதில் கடந்த வாரத்திலேயே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. அதாவது, இந்த மூன்று யோசனைகளையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும், கூட்டமைப்பின் யோசனைகளுடன் தாம் முரண்படுவதாகவும் அரச தரப்பு தெரிவித்தது. 


இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு பதில்தான். முரண்பாடுகள் காணப்பட்டபோதிலும், அவை தொடர்பாக அடுத்த சுற்றுக்களின் போது பேசித் தீர்த்துக்கொள்வதற்கு இது தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே நேற்றைய தினம் இந்த விவகாரம் பேச்சுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வருட இறுதிக்குள் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை சாத்தியமாகப் போவதில்லை என்பதைத்தான் இணக்கமற்ற நிலையில் சந்திப்புக்கள் ஒத்திவைக்கப்படுவது உணர்த்துகின்றது. 


எதிர்வரும் 19 ஆம் திகதிக்குப் பின்னர் பெரும்பாலும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைகள் வருவதால் அடுத்த வருடத்திலும் பேச்சுக்கள் தொடரத்தான் போகின்றது. காணி மற்றுமன்றி, மாகாண அலகு, சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள், நிதி, மற்றும் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் என்பனவும் பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். 17 சுறறுக்கள் முடிவடையும் வரை எந்த ஒரு விடயத்திலும் தீர்வற்றநிலை.

ஆக, அடுத்த வருடமும் பேச்சுவார்த்தைகளாகத்தான் இருக்கப்போகின்றது!

No comments:

Post a Comment